நிலத்தில் காலணி இன்றி வெறுங்கால்களால் நடப்பதன் மூலம் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என உலகின் பல நாடுகளிலும் 'பேர்புட் வாக்கிங்' பழக்கத்தை பலரும் கடைப்பிடிக்க தொடங்கி உள்ளனர்.
வெறுங்கால் நடை என்ற இந்த செயல்பாடு, இயற்கையான ஒரு மனிதனின் நடையை மீட்டெடுத்து, கால் வலியில் இருந்து நிவாரணம் பெற உதவுவதுடன், இடுப்பு, முழங்கால்கள் இலகுவாக இயங்க உதவுகிறது.
இதன் பின்னணியில் ஒரு எளிய அறிவியல் உள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, மனித உடலில் லேசான நேர்மறை மின்னூட்டம் உள்ளது.
நமது செல்கள் மின் தூண்டுதல்கள் மூலம் செயல்பாடுகளை நடத்துகின்றன. நரம்பு மண்டலம் உடல் முழுவதும் மற்றும் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்ப மின்சாரம் தேவைப்படுகிறது.
இதனால் நாம் சிந்திக்கவும், நகரவும், உணரவும் முடியும். ஓய்வெடுக்கும் செல்கள் உட்புறமாக எதிர்மறையாக மின்னூட்டம் பெற்றிருந்தாலும், வெளிப்புற செல் சூழல் நேர்மறையாக மின்னூட்டம் பெற்றது.
பூமி ஒரு எதிர்மறை மின்னூட்டம் என்ற நெகடிவ் மின்னூட்டம் கொண்டுள்ளது. இதனால் மனிதனின் கால்கள் நிலத்தில் பூமியுடன் தொடர்பை ஏற்படுத்தும்.
கால்கள் பூமியை அழுத்துவதன் மூலம், உடலில் இருக்கும் அதிகப்படியான நேர்மறை மின்னூட்டம் சமநிலை அடைந்து உடலில் ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளை குணப்படுத்தும் விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
நிலத்தில் வெறுங்கால்களால் நடப்பதன் மூலம், மன அழுத்தம் குறைகிறது. உடல் ஆற்றல் அதிகரிக்கிறது மற்றும் ரத்த அழுத்தம் குறைகிறது என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
புல் தரை, மணல் ஆகியவற்றில் நடப்பது கூடுதல் பலன்களை அளிக்கிறது. இது நம்மை பூமியுடன் மின்சாரம் மூலம் மீண்டும் இணைக்கும் ஒரு சிகிச்சை நுட்பம் என்றும் இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதேவேளையில் காலணிகள் இன்றி நிலத்தில் நடப்பது பல்வேறு கிருமிகள் உடலில் தொற்றி உடல் நலனை பாதிக்கும் என்றும் பல்வேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.