உலகம்

160 சிறுமிகளின் ரத்தம் காய்வதற்குள் அடுத்த தாக்குதல்.. ஈரானில் மேலும் 2 பள்ளிகளை தாக்கிய அமெரிக்க ஏவுகணைகள்
- குண்டுவீச்சில் சுமார் 160 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.
- அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் இலக்காகி வருவது உலகெங்கிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பள்ளிகள், பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்டு வருகின்றன.
இன்று மதியம், ஈரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பரண்ட் (Parand) நகரில் உள்ள இரண்டு பள்ளிகள் மீது அமெரிக்காவின் ஏவுகணைகள் விழுந்து வெடித்தன.
இந்த தாக்குதலில் பள்ளிக் கட்டடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமான புகைப்படங்களை ஈரானின் 'பார்ஸ்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு அருகிலுள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த துல்லியமான எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை
முன்னதாக, கடந்த சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஈரானின் மினாப் நகரில் உள்ள ஒரு பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் சுமார் 160 சிறுமிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, இஸ்ரேலில் உள்ள ரேடார் மையங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மேலும், பாரசீக வளைகுடாவின் வடக்குப் பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பல் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் அமெரிக்காவால் தாக்கப்பட்டு 87 பேர் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது.





