- டெஹ்ரானில் அயத்துல்லா காமேனியின் அலுவலகம், இல்லத்தைக் குறிவைத்து தாக்குதல் நடந்தது.
- ஈரான் தலைவர் காமேனி உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்றார் இஸ்ரேல் பிரதமர்.
வாஷிங்டன்:
அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நேற்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
டெஹ்ரானில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தைக் குறிவைத்தும் தாக்குதல் நடந்தது.
இதற்கிடையே, ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக ஊடகங்கள் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான காமேனி உயிரிழந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமின்றி உலகளவில் காமேனியின் ரத்தவெறி கும்பலால் கொல்லப்பட்ட மக்களுக்குமான நீதி.
அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.
இஸ்ரேலும் நெருக்கமாகப் பணியாற்றியதால், அவராலும், அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது.
தேச பக்தர்களுடன் ஈரானின் புரட்சிகர காவல்படை மற்றும் பாதுகாப்புப் படையினர் ஒன்றிணைந்து, நாட்டை மகத்துவமாக்க செயல்படும் என நம்புகிறோம். அந்தச் செயல்முறை விரைவில் தொடங்க வேண்டும். காமேனியின் கொலை மட்டுமல்ல, நாடே ஒரே நாளில் சுத்தம் செய்யப்பட்டது.
மத்திய கிழக்கில் முழு அமைதி என்ற நோக்கத்தை அடையும்வரை துல்லியமான தாக்குதல்கள் தொடரும் என தெரிவித்துள்ளார்.















