முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெரும் வெற்றியை பெற அதில் இடம்பெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பீகார் முதல்வர் ஆனார். பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர் ஆகினர்.
இந்நிலையில் மூன்றே மாதங்களில் தனது பதவியை ராஜினாமா செய்த நிதிஷ், எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதனால் பீகாரின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவை சேர்ந்த ஒருவரே முதல்வர் ஆக அதிக வாய்ப்புள்ளது.
பீகாரில் ஜாதி பிரதிநிதித்துவத்தை கருத்தில் வைத்து பாஜக மூவரை முதல்வர் பதவிக்கு பரிசீலித்து வருகிறது.

சாம்ராட் சௌத்ரி - நிதிஷ் குமார்
பீகார் மாநில துணை முதலமைச்சராக உள்ள சாம்ராட் சௌத்ரி பட்டியலில் முதலில் உள்ளார்.
குஷ்வாஹா சமூகத்தை சேர்ந்த இவர் ஓபிசி பிரிவில் வருவார். பீகாரில் நிதிஷ் குமாருக்கு மாற்றாக ஒரு வலுவான ஓபிசி தலைவரை உருவாக்க பாஜக விரும்புகிறது.
எனவே கட்சியிலும், ஆட்சியிலும் இவருக்கு இருக்கும் செல்வாக்கு இவரை முதல்வர் பதவிக்கு முதல் தேர்வாக மாற்றியுள்ளது.
இரண்டாமவர் மத்திய அமைச்சராக உள்ள நித்யானந்த ராய். இவர் யாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்.
பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சிக்கு இருக்கும் யாதவ வாக்கு வங்கியை உடைக்க, நித்யானந்த ராயை முதலமைச்சராக்குவது ஒரு சிறந்த உத்தியாக இருக்கும் என்று பாஜக கருதுகிறது.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் இவருக்கு மிக நெருக்கமான நட்பு உள்ளது.
மூன்றாமவர் தற்போது பீகார் அமைச்சரவையில் உள்ள திலிப் ஜெய்ஸ்வால். இவர் வைசிய சமூகத்தை சேர்ந்தவர். பாஜகவின் பாரம்பரிய வாக்கு வங்கியான வைசிய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், கட்சியின் மேலிடத்தில் இவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.
பீகாரின் மற்றொரு துணை முதல்வரான பாஜகவை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா ஆதிக்க சாதியாக கருதப்படும் பூமிஹார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
பீகார் அரசியலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது ஓபிசி மற்றும் மிகவும் பின்தங்கிய சமூக வாக்குகள்தான் என்பதால் இவருக்கு முதல்வர் வாய்ப்பு எட்டாக்கனியே என்று கூறப்படுகிறது.
நிதிஷ் குமார் ராஜினாமா செய்தவுடன், பாஜக தனது புதிய முதலமைச்சர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
மொத்தத்தில் மகாராஷ்டிராவை போல் கூட்டணி கணக்கில் கவனம் செலுத்தி மாநில சக்திகளை பின்னுக்கு தள்ளி ஆட்சி அதிகாரத்தை பீகாரில் பாஜக முழு கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.