மதுரை:
இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, பரமக்குடி செல்வதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். பின்னர் அவரிடம் நிருபர்கள் எழுப் பிய கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கே: இந்தியாவின் 15-வது துணை ஜனாதிபதியாக ராதாகிருஷ்ணன் பதவியேற்பு குறித்து?
ப: சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு பற்றி சொல்ல எதுவும் இல்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கோட்பாடு என்னவோ அப்படித்தான் பா.ஜ.க. இயங்கும். ஆர்.எஸ்.எஸ்.ல் பயிற்சி எடுத்தவர்கள் அந்த சித்தாந்தப்படி தான் இயங்குவார்கள். நீட் தேர்வை வேண்டாம் என்று சொல்லிவிட போகிறார்களா? அவர்கள் வைத்திருக்கும் கொள்கையை கடைப்பிடிப்பார்கள். தெரியாத வடமாநிலத்தவரை தவிர இவர் தெரிந்தவராக இருக்கிறார். இதை தவிர இதில் பேச எதுவும் இல்லை.
மரபுப்படி அந்த இடத்திற்கு வருவதற்காக அவருக்கு வாழ்த்துகள். பா.ஜ.க.வின் கொள்கைகளுடன் ஒத்துபோய் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது தி.மு.க. தான். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்தது முதல்வர்தான். அதற்கு பிரதிநிதியாக போய் உலக நாடுகளில் பேசியது கனிமொழிதான். குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசியவர்கள். மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து பேசுகிறார்கள். இவர்களிடம் உறுதித்தன்மை என்ன இருக்கிறது.
குஜராத் கலவரத்தை தி.மு.க. கட்சி தலைவர்கள் ஆதரித்து பேசினார்கள். ஆனால் அதே கட்சியால் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து போராடினார்கள். அப்போது கூட்டணியில் இருந்ததால் ஆதரித்தீர்கள், இப்போது கூட்டணியில் இல்லாததால் எதிர்த்தீர்கள். உங்களுக்கு ஒரு நிலைப்பாடு இல்லை. எல்லா வழியிலும் நட்போடு இருப்பது நீங்கள் தான்.
இல.கணேசன் ஐயாவின் மறைவிற்கு மோடி செய்ய வேண்டிய மரியாதையை முதல்வர் செய்ததற்கு காரணம் என்ன.? மூப்பனார் ஐயாவின் மறைவிற்கு வந்த நிர்மலா சீதாராமன் இதற்கு வர முடியவில்லை. எல்.முருகன் மற்றும் ஆளுநர் ரவியை கூட அனுப்பி இருக்கலாம். இவர்கள் நெருக்கமாக இருப்பதற்கு இதை விட வேறு சான்று என்ன உள்ளது.
கே: சனிக்கிழமைகளை மட்டும் தேர்ந்தெடுத்து விஜய் பிரசாரம் மேற்கொள்வது குறித்து?
ப: அது அவர் கட்சியின் முடிவு. அதில் கருத்து சொல்ல முடியாது.
கே: திருச்சியில் பள்ளிக்கு விடுமுறை கொடுத்து உங்கள் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்து?
ப: படிக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு இந்த கூட்டம் நடத்தும் அளவிற்கு அந்த திட்டம் என்ன செய்து விட்டது. இதுபோன்ற கொடுமைகள் எல்லாம் செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி. எங்கள் ஊரில் இதேபோல் இத்திட்டத்தில் மனுக்களை பெற்று அதை ஆற்றில் வீசினார்கள்.
கே: அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பிரிந்தவர்கள் விஜயுடன் கூட்டணி சேர்ந்தால் என்ன?
ப: கூட்டத்தை வைத்து கட்சியை ஆரம்பிக்கவில்லை. நான் நம்புவது உயர்ந்த கொள்கையை தான். ஊழல் லஞ்சமா, உண்மை நேர்மையா, பிள்ளைகள் வாழ்வதற்கு வீட்டை கட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்கள், நான் பிள்ளைகள் வாழ நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஆண்ட அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரசுடன் கூட்டணி வைத்து என்ன செய்யப் போகிறீர்கள். அவர்கள் 60 சதவீதம் கொள்ளை அடித்தால் இவர்கள் 40 சதவீதம் கொள்ளை அடிப்பார்கள் இதுதான் நடக்கப்போகிறது.
கே: ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து?
ப: 17 ஆண்டுகளுக்கு முன்பாகவே குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அப்போது நமக்கு தெரியவில்லை. அதைப் போராடி தான் தடுப்போம், தரையில் எடுத்து முடித்துவிட்டு தற்போது கடலுக்குள் செல்கிறார்கள்.
இன்று நான் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் மக்கள்தான் ஒரு காலத்தில் நான் தங்குவதற்கு விடுதி கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். அதிகாரங்களை எதிர்த்து போரிட்டு சண்டை போட்டதால் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது, இதற்கெல்லாம் பயப்படக்கூடாது.
கே: விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பது குறித்து?
ப: எங்கள் தாத்தாவின் பெயரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டாம். எங்களுடைய வரலாறு உள்ள பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரை வைத்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
கே: திருச்சியில் நடைபெற உள்ள மாநாடு குறித்து?
ப: அது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடாக அமையும்.
கே: ஆடு, மாடுகள் மாநாடுகளை தொடர்ந்து அடுத்தகட்ட மாநாடு என்ன?
ப: ஆடு, மாடு மாநாடுகளை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெற உள்ளது. நாங்கள் மனிதர்களுக்கு மட்டுமான அரசியலாக இல்லாமல், எல்லா உயிர்களுக்குமான அரசியலாக பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.