காஷ்மீரில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். இதில் 27 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கம்தான் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உளவுத் துறையின் தூண்டுதலின்பேரில் இந்த தாக்குதல் நடந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறது. எந்த நேரத்திலும் இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடும் பதற்றம் நிலவி வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று இரவு பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை இந்திய உளவுப்படை கண்காணித்த படி உள்ளது. பயங்கரவாதிகள் காஷ்மீரில் இருக்கும் தங்களது சிலிப்பர் செல் ஆதரவாளர்களுடன் பேசி வருவதையும் உளவுத் துறையினர் இடைமறித்து கேட்டு தகவல்களை சேகரித்து வருகிறார்கள். இதனால் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் காஷ்மீர் பாதுகாப்பு நடவடிக்கை, பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாகிஸ்தான் மீது சில பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.