புதுடெல்லி:
இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21-ந்தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இது டெல்லி அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.
துணை ஜனாதிபதியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு பதவி ஏற்ற ஜெகதீப் தன்கருக்கு அந்த பதவி காலம் 2027 ஆகஸ்டு 10-ந்தேதி வரை இருந்தது. ஆனால் அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பே உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
உயிரிழப்பு, ராஜினாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் துணை ஜனாதிபதி பதவி இடம் காலியாக நேரிட்டால் கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டப்பிரிவு 68 (2)-ல் குறிப்பிட்டுள்ளது. இந்த விதியின்படி அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதன்படி துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக தற்போது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இடம் பிடித்துள்ள எம்.பி.க்களை உள்ளடக்கிய வாக்காளர் பட்டியலை இறுதி செய்ததாக தேர்தல் ஆணையம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல் தேதி இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. அதன்படி அன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஆகஸ்டு 21-ந்தேதி கடைசி நாளாகும். துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட மனு செய்தவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை 22-ந்தேதி நடைபெறும். 25-ந்தேதி வரை மனுக்களை வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து போட்டி இருக்கும்பட்சத்தில் துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 9-ந்தேதி நடைபெறும். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அறையில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்படும். சில மணி நேரத்துக்குள் முடிவு வெளியாகும். அன்றே அதாவது செப்டம்பர் 9-ந்தேதி நாட்டின் புதிய துணை ஜனாதிபதி யார்? என்பது தெரிந்து விடும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால் துணை ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சி சார்பில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவர் களம் இறக்கப்படுவார் என்று தெரிய வந்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
துணை ஜனாதிபதி தேர்தல் 2025-க்கான இறுதி செய்யப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை கொண்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அதன்பிறகு வாக்காளர் பட்டியலை உறுப்பினர்கள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் என்பது அரசமைப்புச் சட்டத்தின்பிரிவு 66(1)-ன் கீழ் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்படி ஒற்றை மாற்று வாக்குமூலம் ரகசிய வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும. அதன்படி வேட்பாளரின் பெயருக்கு எதிரே தனது விருப்பத் தேர்வை வாக்காளர் குறிக்க வேண்டும்.
விதிகளின்படி துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் இந்திய குடிமகனாகவும், 35 வயதை பூர்த்தி செய்தவராகவும், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதி உடையவராகவும் இருக்க வேண்டும். 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் ஒரு எம்.பி. இடம் காலியாக உள்ளது. அதுபோல 245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது.
அதன்படி தற்போது இரு அவைகளையும் சேர்த்து எம்.பி.க்களின் எண்ணிக்கை 782 ஆக உள்ளது. தற்போது இந்த உறுப்பினர்கள் அனை வரும் வாக்களிக்கும் நிலையில் துணை ஜனாதிபதியாக வெற்றி பெறும் வேட்பாளர் குறைந்தபட்சம் 391 வாக்குகளை பெற வேண்டும்.
மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்.டி.ஏ), 542 உறுப்பினர்களில் 293 பேரின் ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில் தற்போதுள்ள 240 உறுப்பினர்களில் 129 பேரின் ஆதரவு உள்ளது. நியமன எம்.பி.க்களின் ஆதரவும் என்.டி.ஏ.வுக்கு கிடைத்தால் மொத்தம் 422 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்ப டும் துணை ஜனாதிபதி 5 ஆண்டுகள் பதவி வகிப்பார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்தாலும் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வரை அவர் அந்த பதவியில் தொடரவும் அரசமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது.