வாத நோய் என்பது இணைப்பு திசுக்களில் குறிப்பாக தசைகள், மூட்டுகள் தொடர்புடைய கட்டமைப்புகளில் ஏற்படும் வீக்கத்தைக் கொண்ட பல கோளாறுகளில் ஏதேனும் ஒன்று ஆகும். மிகவும் பொதுவான அறிகுறிகள் வலி வீக்கம் மற்றும் விறைப்பு.
மூட்டுவலி
மூட்டுவலிக்கு சந்துவலி, மேகசூலை, முடக்கு வாயு, ஆமவாதம் எனப் பல பெயர்கள் உண்டு. இது, கீல்களில் வளிக்குற்றம் கூடி நோயை உண்டாக்குவதால் கீல்வாயு என்றும், மூட்டுகளில் நோயை உண்டாக்குவதால் மூட்டு வலி என்றும், இந்நோய் பெரும்பான்மையும் மேகத்தின் தொடர்பு நோயாக வருவதால் மேகசூலை என்றும், பூட்டுகளை முடக்கி வைப்பதால் முடக்குவாயு என்றும், வயிற்றில் மந்தம் உண்டாகி ஐயத்தைப் பெருக்கி இந்நோய் உண்டாவதால் ஆமவாதம் எனவும் பெயர் பெற்றது.
கீல்களில் வீங்குவது, குத்துவது, நோவது முதலியவற்றை உண்டாக்கி, மடக்கவும், நீட்டவும், அசைக்கவும் ஒட்டாமற் செய்து, படுக்கையில் இருத்தி, ஐயமும் கூட்டு சுரம் முதலிய துணை நோய்களையும் உண்டாக்கும் இயல் புடையதாம்.
அழல் கீல் வாயு: (OSTEO ATHRITIS)
அழல் குற்றத்தைத் தூண்டக் கூடிய உணவு, செய்கை முதலியவற்றால் பிறக்கும் நோயாம். இந்நோயில், மூட்டுகளில் உண்டாகும் வீக்கம் நாளுக்குநாள் பெருத்துக் கொண்டே வந்து, மிகுந்த தீக்குற்றத்தால் கீல்களினிடையே உள்ள பசை வறண்டு பசையற்றுக் கீல் அசையும் போதெல்லாம் நட்டையுடைதலும் "கலுக்" "கலுக்" கென்ற ஓர் ஒலி உண்டாவதுமாய் இருக்கும். சிலவேளைகளில், கீலுக்குக் கீல் கூடி ஒட்டிக்கொண்டு ஒரு கழிபோல மடக்க முடியாமலே நின்று விடுவதும் உண்டு.
வளி அழல் கீல் வாயு: (RHEUMATOID ARTHRITIS)
இது, பெரும்பான்மையும் வளிக்குற்றத்தையும் தீக்குற்றத்தையும் பெருக்கக்கூடியதான ஆட்டுக்கறி, மீன், முட்டை, உருளைக்கிழங்கு, சுறாமீன் முதலிய பண்டங்களை மிகுதியாப் புசித்தலாலும், கள், சாராயம் முதலியவைகளை அடிக்கடி அருந்துவதாலும் உண்ட உணவுக்குத் தகுந்த உழைப் பில்லாமையாலும் வரும் நோயாம்.
இந்நோயில், முதலில் உண்ட உணவு செரியாமல் புளித்த ஏப்பம் உண்டாதல், வயிற்றுள் காற்றுக் கூடி அடிக்கடி காற்றுப் பரிதல், வெளிக்குப் போகாமை, உடல் பெருத்தல் என்னுங் குறிகளைக் காட்டி, மணிக்கட்டு கணுக்கால், விரல்கள், ஆகிய கீல்களில் சிவந்து எரிச்சலையும் வலியையும் உண்டாக்கும். இந்நோய் எளிதில் மருத்துவத்திற்கு அடங்காமலும், மருத்துவத்திற்கு அடங்கினும் மீண்டும் திரும்பிவருவதுமாயிருந்து, அக்கீல்கள் கரடு கட்டினதுபோல நீட்டவும் நன்றாய் மடக்கவும் முடியாத வண்ணம் நிலைத்துவிடச் செய்வதுமுண்டு, அன்றியும் இந்நோயால் தூக்கமின்மை, படுக்கையில் நிலையாக இல்லாமல் புரளல், சிறுசுரம் முதலிய குறிகளும் காணும்.
தண்டக வாதம்: (LUMBAR SPONDYLOSIS)
தண்டுவட எலும்புகள் தேய்வதால் வரும் வாதத்தை சித்த மருத்துவத்தில் தண்டக வாதம் என்றுகூறுவோம்.
தண்டுவட எலும்புகள் ஒவ்வொன்றின் இடையே சதையாலான "டிஸ்க்" இருக்கும். இதன் இடையில் சைனோவியல் திரவம் என்ற எண்ணெய் போன்ற பொருள் நிரப்பப்பட்டிருக்கும். இவை ஒரு மெத்தை போல் இருந்து, தண்டுவட எலும்புகள் உராய்வில்லாமல் ஒழுங்காக செயல்படவும், உடல் அசைவிற்கும் உதவுகிறது.
எலும்புகளுக்கு இடையே உள்ள "டிஸ்க்" நீர்த்துவம் குறைந்து, உலர்ந்து சுருங்கி இருந்தால் அது 'ஸ்பாண்டிலோசிஸ்' என்று அழைக்கப்படும். தண்டுவட எலும்புகளுக்கு இடையே உள்ள டிஸ்க் ஒருபுறமாக அல்லது இருபுறமாக வெளியேநீட்டி நிற்பது ஹெர்னியேட்டட்டிஸ்க்' (Herniated Disc) எனப்படும்.

நந்தினி
காரணங்கள்: அடிபட்ட காயங்கள் விபத்துக்கள் காரணமாகவும், தொழில் ரீதியாக அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும், சுமை தூக்குபவர்கள், டெய்லர், வயதானவர்களுக்கும் அதிகமாக தண்டுவட பாதிப்புகள் ஏற்படுகிறது.
அறிகுறிகள்: முதுகு, இடுப்பு பகுதியில் வலிகள், கால்கள் மரத்துப் போதல், உட்கார்ந்து எழும்புவதில் சிரமம், நடைமாறுபடுவது போன்ற அறிகுறிகள் காணப்படும்.
சகன வாதம்: (CERVICAL SPONDYLOSIS)
சகன வாதம் என்பது கழுத்து வாதம் (cervical spondylosis) என்று அழைக்கப்படுகிறது. இது கழுத்து எலும்புகளில் ஏற்படும் சேதம் மற்றும் வீக்கம் காரணமாக ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
கழுத்து வலி, தோள் வலி, விரல்களில் உணர்வின்மை, கை மற்றும் விரல்களில் தட்டுதல், தலைச்சுற்றுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
முடக்குவாதம்: (GOUT ARTHRITIS)
ரத்தத்தில் அதிக அளவு யூரிக் அமிலம் இருக்கும் நபர்களுக்கு இந்த கீல்வாதம் என்று அழைக்கப்படும் முடக்குவாதம் ஏற்படுகிறது. இது கடுமையான மூட்டு வலி, வீக்கம், மற்றும் சிவத்தல் ஆகியவற்றின் தொடர்ச்சியான பாதிப்புகளின் மூலம் வகைப்படுத்தப்படுகிறது, இவை திடீரென மற்றும் ஒரே இரவில் கூட உருவாகலாம்.
மூட்டுகளில் யூரிக் அமிலத் தேக்கம் காரணமாக ஊசி போன்ற படிகங்கள் உருவா கின்றன. இது திடீர் வலிக்கு வழிவகுக்கிறது.
இது காலின் பெருவிரல் மூட்டை பொதுவாகப் பாதிக்கிறது. கீல்வாதத்துடன் தொடர்புடைய பொதுவான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:
விறைப்புடன் சேர்ந்து மூட்டுகளில் கடுமையான மற்றும் திடீர் வலி (குறிப்பாக முழங்கால், கால்விரல்கள், முழங்கை, மற்றும் விரல்). வீக்கம் மற்றும் சிவத்தல், பாதிக்கப்பட்ட பகுதியில் சருமம் சூடாக இருத்தல் காய்ச்சல் மற்றும் குளிர்தல்.
மருத்துவம்:
முடக்குவாதம்: சரியான ரத்த ஓட்டத்தை மேம்படுத்த ஆமணக்கு எண்ணெய் உதவும். இது கீல்வாதத்துக்கு இயற்கையான எதிர்ப்பாக செயல்படுகிறது. வீக்கம், சிவத்தல் விறைப்பு போன்றவற்றை குறைக்க உதவும் அழற்சி பண்புகள் இதில் உள்ளது.
விளக்கெண்ணையை லேசாக சூடு செய்து பாதிக்கப்பட்ட மூட்டுகளில் தடவி மென்மையாக மசாஜ் செய்யலாம். அல்லது சுத்தமான காட்டன் துணியை கொண்டு அந்த இடத்தில் ஒற்றி எடுத்தால் கூட போதுமானது. இது மூட்டுகளில் இருக்கும் சிவத்தல் மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்தும்.
கொத்துமல்லி:
கொத்துமல்லி மூலிகை பொதுவாக தினசரி பயன்படுத்தும் ஒன்று தான். இது இரைப்பை குடல் அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுடன் யூரிக் அமில அளவை குறைக்கிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் யூரிக் அமிலத்தை தேங்கவிடாமல் குறைக்கும் அதிசயங்களை செய்யும்.
மஞ்சள்:
மஞ்சளை ஒரு டீஸ்பூன் வெது வெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம். தினமும் எடுத்து வருவது கீல்வாதத்துக்கு நல்ல பலன் கொடுக்கும்.
இஞ்சி:
இஞ்சி ஒரு அங்குல துண்டு எடுத்து 1 டீஸ்பூன் ஓமம், 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் பிறகு தண்ணீர் கஷாயத்தை வடிகட்டி அதில் பாதி அளவு மட்டும் எடுக்கவும். காலை வேளை பாதியும் மாலையில் பாதியும் எடுத்துவரவும்.
வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது மற்றும் யூரிக் அமில படிகங்களை திரவ வடிவமாக மாற்றுகிறது. இது உடலில் இருந்து சிறுநீர் வெளியேற்றுவதை எளிதாக்குகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி வலி மற்றும் வீக்கத்தை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வெந்தயம்:
வெந்தயத்தில் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தி உள்ளது. கீல்வாதத்தின் அறிகுறிகளை குறைப்பதில் அற்புதமாக செயல்படும் பண்புகள் இதற்கு உண்டு. வழக்கமான நுகர்வில் இதை எடுப்பது உட்புற மற்றும் வெளிப்புற வீக்கத்தை குறைக்க செய்கிறது.
அரை கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து குடிக்கவும். அதிகாலையில் இந்த தண்ணீரை குடித்து ஊறவைத்த விதைகளை மெல்லுங்கள்.
தண்டக வாதம் மருத்துவம்:
தண்டுவட பிரச்சினைகளுக்கு எண்ணெய் மசாஜ், வர்ம மசாஜ் மற்றும் யோகாமிகவும் சிறந்தது. வெந்நீரில் வாதமடக்கி, வாத நாராயணன், முடக்கற்றான், தழுதாழை நொச்சி, ஆமணக்கு, பழுத்த எருக்கம் இலை, முருங்கை இலை, இவைகளில் ஒன்றை எண்ணெய்யில் வதக்கி வலி உள்ள இடங்களில் ஒத்தடம் இட வேண்டும். கால்சியம், வைட்டமின் டி சத்து அதிகமுள்ள பிரண்டைத் தண்டு, முருங்கை கீரை, முடக்கற்றான், கருப்பு உளுந்து, முட்டையின் வெள்ளை கரு, பால், தயிர், பசலைக்கீரை, பாதாம், வாதுமை,வெந்தயம், இவைகளை உணவில்சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பொதுவான மருத்துவம்:
கஸ்தூரி மஞ்சள்:
கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும்.
விளக்கெண்ணை:
விளக்கெண்ணையை 5 மி.லி. அடுப்பில் வைத்து சூடேற்றி 30 மி.லி. ஆரஞ்சுப் பழச்சாற்றில் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.
மூக்கிரட்டை வேர்:
மூக்கிரட்டை வேரை கைப்பிடியளவு எடுத்து நன்கு கசக்கி அதனை, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.
பல வேர்களின் பொடி:
கடுகு ரோகிணி, ஆதண்டை வேர், சங்கன் வேர், புங்கன் வேர் ஆகியவற்றை இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். முடக்கற்றான் சாறு, வெங்காயச் சாறு, சிற்றாமணக்கு எண்ணெய் ஆகியவற்றுடன் பொடிகளை கலந்து எட்டு மணி நேரம் வெயிலில் காயவைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வீக்கம் குறையும்.
கணப்பூண்டு இலை:
கணப்பூண்டு இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.
பூண்டு:
பூண்டின் இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு நன்கு வதக்கி மூட்டில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.
எருக்கு:
எருக்கன் இலைகளை நெருப்பில் வாட்டி மூட்டு வீக்கங்களின் மீது வைத்து சிறிது நேரத்திற்கு கட்டி வைத்தால் வீக்கம் குறையும்.
-வாத நோய் மருத்துவம் தொடரும்...
செல்: 9500676684