என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தையாக இருக்கும்போதே சினிமாவுக்குள் வந்துவிட்டேன்.
    • 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நிலைத்து நிற்பதை திரும்பி பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

    என்னிடம் நிறையபேர் கேட்டிருக்கிறார்கள். மேடம் நீங்கள் ஏன் அதிரடி சண்டைக் காட்சிகளில் நடிக்கவில்லை என்று. குடும்ப பாங்கான படங்கள், காதல் காட்சிகள், சோக காட்சிகள் என்று நடிப்பில் பல பரிமாணங்க ளையும் வெளிப்படுத்தி இருக்கிறேன். ஆனால் சண்டை காட்சி என்றால் ஏனோ அப்படி ஒரு பயம்.

    சின்ன வயதில் சண்டை காட்சிகளில் நடிக்கும் பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் நம்மால் முடியுமா என்ற பயத்தால் நடிக்க மறுத்து விட்டேன். ஆசையாக இருந்தாலும், நல்லா நடிக்க முடியுமா? மக்களிடம் எப்படி கொண்டுபோய் சேர்ப்போம் என்ற பயம் இருந்ததால் நடிக்கவில்லை.

     

    குழந்தையாக இருக்கும்போதே சினிமாவுக்குள் வந்துவிட்டேன். அப்போதெல்லாம் எனது உலகம் அம்மா- அப்பா மட்டும்தான். அவர்கள் அங்கு போ என்றால் போவேன்! இங்கு வா என்றால் வருவேன்! வெளி உலகம் எப்படி இருக்கும்? என்ன மாதிரி பிரச்சினைகள் வரும்? அதை எப்படி சமாளிப்பது என்றெல்லாம் எதுவும் தெரியாது. எல்லாவற்றையும் அம்மாவும், அப்பாவும் பார்த்துக் கொண்டார்கள்.

    எனவே சின்ன பிரச்சினை என்றாலும் அதை எதிர்கொள்ளும் பக்குவமோ, தைரியமோ எனக்கு இருந்ததில்லை. அப்படிப்பட்ட நான் சண்டை காட்சியில் எப்படி நடிப்பேன்? அந்த பயம் இயல்பானது தானே!

    ஆனால் கல்யாணத்துக்கு பிறகு ரொம்பவே மாறி இருக்கிறேன். அதுவும் ஒரு குழந்தைக்கு தாயான பிறகு பொறுப்பு, தைரியம் அதிகமாகவே வந்திருக்கிறது என்று தான் சொல்வேன். எனவே அன்று பார்த்த மீனா வேறாக இருப்பாள்.

    இப்போது பார்க்கும் மீனா வேறாக இருப்பாள். எனவே இனிமேல் அப்படிப்பட்ட காட்சிகளிலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

    40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நிலைத்து நிற்பதை திரும்பி பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் நான் கலைக் குடும்ப பின்னணியில் இருந்து வரவில்லை. திடீரென்று சிவாஜி சார் என்னை பார்த்ததும் குழந்தை நட்சத்திரமாக நடிக்க அழைப்பு விடுத்தார். அந்த கலை உலக சக்கரவர்த்தியால் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டேன்.

    அதன் பிறகு அம்மா- அப்பாவின் ஒத்துழைப்பு, எனது கடின உழைப்பு, கொஞ்சம் அதிர்ஷ்டம் எல்லாம் கை கூடியதால் சாத்தியமாயிற்று என்று நினைக்கிறேன். நிழலில் நடித்தாலும் நிஜத்தில் ஏகப்பட்ட அனுபவங்கள். படப்பிடிப்புக்காக ஊர் ஊராக சென்றிருக்கிறேன். உலகமெல்லாம் சுற்றியிருக்கிறேன். ஒவ்வொரு இடத்தையும் திரும்பி பார்க்கும் போதும் அன்றும்... இன்றும்... எத்தனையோ மாற்றங்கள்.

    எத்தனையோ ஊர்களுக்கு சென்றாலும் நம்ம சென்னை தான் எனக்கு தாய் வீடு. இதைப்போல் எந்த ஊரும் வராது. அந்த காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழி படப்பிடிப்புகள் எல்லாமும் சென்னையில்தான் நடந்தது.

    வெளியூர் படப்பிடிப்புகளுக்காக ஐதராபாத்துக்கு அதிகமாக சென்றிருக்கிறேன். அதிலும் தெலுங்கு படத்தில் அதிகம் நடித்த தால் ஆந்திராவில் பல பகுதிகளுக்கும் சென்று இருக்கிறேன். அந்த வகையில் ஐதராபாத்தைத் தான் எனது 2-வது வீடு என்பேன்.

    நான் அன்று பார்த்த ஐதராபாத் வேறு இன்று பார்க்கும் ஐதராபாத் வேறு. முன்பெல்லாம் நாங்கள் படப்பிடிப்புக்கு ஐதராபாத்துக்கு செல்லும்போது அங்கு பெரிய அளவில் வசதிகள் எதுவும் இல்லை.

    ஷூட்டிங் நேரத்தில் அவசரமாக ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றாலும் உடனே வாங்க முடியாது. ஏனெனில் கடைகளே காலை 9 மணிக்கு பிறகுதான் திறக்கும். தலையில் வைப்பதற்கு ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்க வேண்டுமென்றாலும் 9 மணி வரை காத்திருக்க வேண்டும்.

    இன்று இருப்பது போல் அன்று ஆஹா.. ஓஹோ... என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு ஏதும் கிடையாது. ஷூட்டிங் முடிந்து இரவு 9 மணிக்கெல்லாம் பஞ்சராஹில்ஸ் பகுதியில் இருந்து ஜூப்ளிஹில்ஸ் பகுதிக்கு செல்லவே பயமாக இருக்கும். அந்த அளவுக்கு இருட்டாக இருக்கும். தெரு விளக்கு வசதிகூட அவ்வளவாக செய்யப்பட வில்லை. இப்போது எல்லாம் முற்றிலுமாக மாறிவிட்டது. சொர்க்கலோகம் போல் மாற்றி இருக்கிறார்கள்.

    ஒருமுறை பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும். அந்த அளவு ஜெகஜோதியாக காட்சியளிக்கும் நகரமாகி விட்டது. எப்படி இருந்த ஐதராபாத் இப்போது இப்படி மாறிவிட்டதே என்று ஆச்சரியமாக இருக்கும்.

    எத்தனை ஊர்கள் சுற்றி வந்தாலும் நம்ம மலைகளின் ராணியை அடிச்சிக்க முடியாது. அதுதான் ஊட்டி. முன்பெல்லாம் வெளிநாடு ஷூட்டிங் என்றாலே பெரும்பாலும் ஊட்டியாகத்தான் இருக்கும். ஊட்டிக்கு படப்பிடிப்புக்கு சென்றாலே ரொம்ப ஜாலியாக இருக்கும்.

    இயற்கை காட்சிகளும், குளிரும் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும். எவ்வளவு நேரம் படப்பிடிப்பு நடந்தாலும் களைப்பே தெரியாது. அதற்கு காரணம் வியர்க்காது. முக்கியமாக தூசு கிடையாது.

    நகரத்து வாழ்க்கை ஆடம்பரமாக தெரிந்தாலும் தூசு மாசு தவிர்க்க முடியாததாகி விட்டது. இவை எதுவும் இல்லாததால் ஊட்டி மனம் கவர்ந்த ராணியாக இருக்கிறாள். எல்லோரும் பார்த்து ரசிக்க வேண்டிய இடம் ஊட்டி. இன்னும் எவ்வளவோ நான் ரசித்த அனுபவங்கள் உண்டு. அதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

    (தொடரும்...)

    60 அடி உயர கட் அவுட்!

    பொதுவாக படங்களில் ஹீரோக்களுக்கு தான் பிரமாண்டமான கட்-அவுட்டுகள் வைக்கும் பழக்கம் உண்டு.

    அவ்வை சண்முகி பட வெளியீட்டின்போது டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சார் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அந்த காலத்தில் பட வெளியீடு, பட பூஜைகள் பிரமாண்டமாக நடக்கும்.

    அந்த வகையில் கமல் சாருக்கு 60 அடி உயர கட்-அவுட் வைத்திருந்தார்கள். அதே அளவுக்கு எனக்கும் 60 அடி உயரத்தில் நான் கமல் சாரின் தோளில் கைபோட்டு நிற்பது போன்ற கட்-அவுட் வைத்திருந்தார்கள். ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது.

     

    முத்து பட ஷூட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்த எங்க அம்மாவுக்கு ஒரு சந்தேகம். எங்கே எனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய் விடுமோ என்று கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார்.

    படம் வெளிவந்த பிறகுதான் அவருக்கு திருப்தி. அதனாலேயே இப்படி ஒரு கட் அவுட்டை ஏற்பாடு செய்ததாக பின்னாளில் எனக்கு நடந்த பாராட்டு விழாவில் கே.எஸ்.ரவிக்குமார் சார் குறிப்பிட்டார். அதை கேட்டு நானும் அம்மாவும் நெகிழ்ந்து போனோம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக அரசியல், நாளுக்கு நாள், உள்ளூர் அரசியலாக மாறி வருகிறது.
    • கனடா நாட்டில் சுமார் 8 லட்சம் சீக்கியர்கள் வசிக்கிறார்கள்.

    இந்தியா - கனடா இடையே என்னதான் பிரச்சனை? இதனால் யாருக்கு என்ன சாதகம்? (அ) பாதகம்?

    இந்தக் கேள்வி, சில நாட்களாகப் பரவலாகக் கேட்கப்பட்டு வருகிறது. இது பற்றி விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன்பாக...

    உலக அரசியல், நாளுக்கு நாள், உள்ளூர் அரசியலாக மாறி வருகிறது. சர்வதேசப் பார்வை, சர்வதேசப் பயன்பாடு, சர்வதேச ஒருங்கிணைப்பு, சர்வதேச செயல்பாடு... இவற்றை உள்ளடக்கி, மனித குலத்தை இயன்ற வரையில் ஒரே சமூகமாய் ஒன்றிணைப்பதே சர்வதேச அரசியலின் நோக்கம் ஆகும். ஆனால், இதை நோக்கி சர்வதேச அரசியல் நகர்வதே இல்லை.

    அவ்வப்போது 'சித்தாந்தப் போர்கள்', உலக நாடுகளை ஒன்று சேர விடாமல் தடுத்த போதிலும், பொதுவாக, உலகப் பிரச்சனைகள், உலகளாவிய தீர்வுகள், சர்வதேச அரசியலில் முக்கிய இடம் வகித்தன.

    சமீப காலத்தில், சர்வதேச அரசியலின் தரம் பெருத்த சரிவைக் கண்டுள்ளது.'உள்ளூரில் உற்பத்தி; வெளிநாட்டில் வர்த்தகம்' - நீண்ட காலமாக இருந்து வருகிற பொருளாதார நடைமுறை. இதையே தலைகீழாய் மாற்றி, 'வெளிநாட்டு அரசியல்; உள்நாட்டில் அறுவடை' என்கிற புதிய யுக்தி, பிரபலம் அடைந்து வருகிறது. இதற்குக் காரணம், சில முரட்டு நாடுகளின் வறட்டுத் தலைவர்கள்.

    இந்தப் பட்டியலில் இப்போது கனடாவை இணைத்துள்ளார் - அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ருடோ. தமது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள எந்த நிலைக்கும் செல்ல, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தீர்மானித்து விட்டால், அர்த்தமற்ற பேச்சுகளும் ஆபத்தான நடவடிக்கைகளும் தொடரத்தானே செய்யும்? ஜஸ்டின் ரூடோவின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன.

    'சீனாவின் ஆதரவால் தான் இதற்கு முன் ஜஸ்டின் ரூடோ தேர்தலில் வெற்றி பெற்றார்; தற்போது தனது கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்ப்பை சமாளிக்கவே கனடாவின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக ஜஸ்டின் ரூடோ பொய் சொல்கிறார்' என்று, கனடாவின் முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, அப்பட்டமாகக் கூறுகிறது.

    கடந்த ஆண்டு, ஹர்தீப் சிங் நிஜார் என்பவர் கனடாவில் கொலை செய்யப்பட்டார். இவர் காலிஸ்தான் தீவிரவாதி என்று இந்தியாவால் அடையாளம் காணப்பட்டவர்.

     

    இந்தக் கொலையின் பின்னணியில் இந்திய தூதரக அதிகாரிகளின் பங்கு உள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூடோ கூறுகிறார். இந்திய அரசு இந்த குற்றச்சாட்டை வன்மையாக முழுமையாக மறுக்கிறது.

    தனது புகாருக்கான ஆதாரத்தை வழங்குமாறு இந்திய அரசு தொடர்ந்து கேட்டு வருகிறது. இதுவரை அப்படி எந்த ஒரு ஆதாரத்தையும் கனடா அரசு வழங்கவில்லை.

    சமீபத்தில் இந்தப் பிரச்சனை தொடர்பாக கனடா நாட்டுத் தூதரக அதிகாரிகளை இந்திய அரசு திருப்பி அனுப்பியது. இத்தனைக்குப் பிறகு நேற்றைய தினம் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, தன்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். உளவுத்துறை தந்த தகவலின் அடிப்படையில் மட்டுமே கூறுவதாகச் சொல்கிறார். இப்படி ஒரு பொறுப்பற்ற பேச்சு ஒரு நாட்டு நிர்வாக தலைமையிடம் இருந்து வருவது சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    கனடா நாட்டில் சுமார் 8 லட்சம் சீக்கியர்கள் வசிக்கிறார்கள். இந்தியாவுக்கு வெளியே, சீக்கிய மக்கள் அதிகம் வசிக்கும் நாடு கனடா.

    1980-90களில் சீக்கியர்களுக்கு என்று தனியே காலிஸ்தான் நாடு கோரிக்கை வலுவாக எழுந்தது. குறிப்பாக 1984 ஜூன் மாதம் நிகழ்ந்த 'ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்' சீக்கியர் மனதில் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.

    தமது மிக உயரிய புனித தலமான பொற்கோயிலில் ராணுவம் நுழைந்து சண்டையிட்டதை, அங்கே இரத்தம் சிந்தப்பட்டதை சீக்கிய மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த சம்பவத்துக்குப் பிறகு காலிஸ்தான் முழக்கம் தீவிரம் அடைந்தது. இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்திலும், கனடா நாட்டிலும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை பெருகியது.

    பிறகு படிப்படியாக அரசின் நடவடிக்கைகள், சீக்கியர்களின் மனமாற்றம், மாறிப்போன அரசியல் சூழல் போன்ற காரணங்களால் பஞ்சாபில் பயங்கரவாதம் மறைந்து போனது. ஆனால் கனடாவில் சீக்கிய பயங்கரவாதிகள் தொடர்ந்து இன்று வரை சீக்கியர்களுக்கான தனிநாடு முழக்கத்தை எழுப்பி வருகின்றனர்.

    கனடா நாட்டில் இருந்து கொண்டு பயங்கரவாதம் மற்றும் தீவிர குற்ற செயல்களில் ஈடுபடும் 26 பேரை இந்தியாவுக்கு அனுப்புமாறு, கடந்த 10 ஆண்டுகளில் பலமுறை இந்திய அரசு கனடாவை கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இன்று வரை இதன் மீது கனடா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    காலிஸ்தான் பயங்கரவாதிகள் விஷயத்தில் ஜஸ்டின் ரூடோவின் அரசு, பாராமுகமாகவே நடந்து கொள்கிறது. இதற்குக் காரணம் கணிசமாக உள்ள சீக்கியர்களின் வாக்குகள். அதாவது, சீக்கியர்களின் வாக்கு வங்கியைத் தவற விட ரூடோவுக்கு மனமில்லை. இந்த வாக்கு வங்கி அரசியல்தான் இன்று, தூதரக அதிகாரிகள் நீக்கம் வரை, நீண்டு இருக்கிறது.

    நல்ல வேளையாக, ரூடோவின் அரசியல் தப்புக் கணக்குகளை கனடா மக்களும் புரிந்து வைத்துள்ளார்கள். எனவேதான் ரூடோவின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு அவருடைய கட்சிக்கு உள்ளே கூட பெருத்த ஆதரவு கிடைக்கவில்லை.

    இதற்கு அரசியல் களம் மட்டுமல்ல, கனடாவின் பொருளாதார நிலைமையும் ஒரு காரணம். மிகவும் மோசமாக இல்லை என்றாலும் கூட, கனடா நாட்டுப் பொருளாதாரம் மிகச் சிறப்பாக, மிக வலுவாக இல்லை என்பதே உண்மை. பொருளாதாரத்தில் எங்கேயும் சிறிதளவு சரிவு ஏற்பட்டாலும் அது, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடலாம். இது, அங்குள்ள அரசியல் தலைவர்கள், மக்களுக்கு நன்கு தெரிந்து இருக்கிறது.

    இந்தியா - கனடா இடையே வர்த்தக உறவைப் பொருத்தமட்டில், 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவில், கனடாவின் இறக்குமதி, ஏற்றுமதி முறையே $956மி மற்றும் $2522 மி என்கிற அளவில், கனடாவுக்கு சாதகமாக இருக்கிறது. அதாவது இந்தியாவில் இருந்து கனடா செய்யும் இறக்குமதியை விட, கனடாவில் இருந்து இந்தியா செய்யும் இறக்குமதி அதிகம். ஆகவே ஒருவேளை இந்தியா - கனடா இடையே வர்த்தக உறவு தடைப்பட்டால், இந்தியாவை விடவும் கனடாவுக்கே பொருளாதார பாதிப்பு அதிகமாகும்.

    கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு எந்த ஒரு நாடும் பொருளாதாரத்தை பாதிக்கும் எந்த செயலிலும் இறங்கும் நிலையில் இல்லை. இங்குதான் ட்ரூடோவின் பேச்சையும் செயலையும் கனடா மக்கள் பெரிதும் ஆட்சேபிக்கிறார்கள்.

    'நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு...? இவருக்கு ஏன் இந்த வேலை..?' என்று அங்கிருந்து வலுவான குரல்கள் எழுகின்றன.

    இருநாட்டு வர்த்தகத்துக்கு அப்பால் வேறொரு முக்கிய அம்சமும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. அதுதான் மேற்படிப்புக்காக இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் கனடாவுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை.

    ஒவ்வொரு வருடமும் சுமார் மூன்று லட்சம் இளைஞர்கள், இந்தியாவில் இருந்து கனடா வருகின்றனர். இதன் மூலம் கனடாவுக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி மிகவும் கணிசமானது. அவர்களின் வருகை தடைப்பட்டால் அல்லது நின்று போனால், கனடாவுக்கு அது, ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக முடியலாம்.

    மேற்படிப்புக்காக கனடா நாட்டுக்குச் செல்ல இளைஞர்கள் ஆர்வமாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது - அங்குள்ள குடியுரிமை சட்டம். உலகின் வேறு எந்த நாட்டையும் விட, கனடா நாட்டில் குடியுரிமை பெறுவது வெகு எளிது.

     

    பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் - காந்திய சிந்தனையாளர்

    பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் - காந்திய சிந்தனையாளர்

    இந்த நிலையில்,ஒரு கேள்வி எழுகிறது - தற்போது எழுந்துள்ள பிரச்சனை காரணமாகத் தற்போது கனடாவில் உயர்கல்வி படித்து வரும் சுமார் 3 லட்சம் மாணவர்களுக்கு ஏதும் இடையூறு ஏற்படுமா..? அயல்நாட்டுக் கல்வி என்னும் கனவோடு இருக்கும் பல்லாயிரம் இந்திய மாணவர்களுக்கு, கனடா செல்வது இனி சாத்தியம் இல்லையா..?

    இந்தியா கனடா நெருக்கடி பொருத்தமட்டில், இரு அரசுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கிற உரசல் தானே தவிர்த்து, இரு நாட்டு மக்களிடையே உறவில் எந்த விரிசலும் இல்லை. என்ன பொருள் ..? கனடாவில் தங்கிப் படிப்பதில் எந்த ஆபத்தோ சிக்கலோ இல்லை.

    எப்போதும் போல பாதுகாப்பான சூழலே நிலவுகிறது. கவலை கொள்ளும் படியான கலவரச் சூழல் நிச்சயமாக இல்லை. இது விஷயத்தில் இந்திய அரசு மிக கவனமாக, மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்கிறது.

    சர்வதேச உறவுகளை உன்னிப்பாக நோக்கினால் ஓர் உண்மை புரியும். தூதரக உறவுகளை முறித்துக் கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் அப்படி ஒன்றும் புதிதல்ல. பலமுறை பல நாடுகளுக்கு இடையே நடந்து வருகிற, ஒருவகையில் சாதாரண நடவடிக்கை தான் இது. ஓரிரு நாட்களில் அல்லது ஓரிரு மாதங்களில் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் எல்லாம் தாமாகவே மறைந்து போகும்.

    இதற்கு அச்சாரமாக, நேற்று ஜஸ்டின் ரூடோவின் பேச்சையே குறிப்பிடலாம்.

    "இந்தியாவின் ஒருமைப்பாட்டை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். ஒரே இந்தியா என்பது தான் எங்களின் கொள்கை. இதற்கு மாறான கருத்தை ஏற்பதில்லை என்பதே எனது அரசின் கொள்கை நிலைப்பாடு." இந்தியா கனடா இடையே உறவு மோசமடைந்து விடக்கூடாது என்பதே தனது விருப்பம் என்றும் கூறுகிறார்.

    இந்தியா கனடா இடையே எல்லைப் பிரச்சனை எதுவும் இல்லை. சித்தாந்த ரீதியாகவும் விரோதமோ பகைமையோ இல்லை. முதலீடுகளில் ஆகட்டும், பணிபுரிவோரின் செயல் திறன், விசுவாசம் ஆகட்டும்.. இந்தியாவின் மீது கனடாவுக்கு துளி அளவும் அதிருப்தி ஏற்படக் காரணமே இல்லை.

    கனடாவில் சுமார் 28 லட்சம் இந்தியர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் பங்களிப்பால் கனடாவின் பொருளாதாரம் மிகவும் பயன் பெற்று வருகிறது. இப்படி எல்லா வழிகளிலும் எல்லா வகைகளிலும் இந்தியா உடனான நட்புறவால் கனடாவுக்கே சாதகங்கள் அதிகம் உள்ளன.

    எந்தவொரு நாட்டோடும் தனது ராஜ்ய உறவுகளை முறித்துக் கொள்ள இந்தியா என்றுமே விரும்புவது இல்லை. இதனைக் கனடா அரசும் அறியும்; கனடா மக்களும் அறிவார்கள்.

    இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ஒன்று மட்டும் உறுதியாய்த் தெரிகிறது - ஒரு தனி மனிதனின் ஆசைக்கோ வெறுப்புக்கோ இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவில் குந்தகம் வந்து விடக்கூடாது என்பதில் தலைவர்களை விடவும் மக்களுக்கு அதிக அக்கறை இருக்கிறது. அவ்வப்போது வந்து போகிற ரூடோ போன்ற சுயநலத் தலைவர்களால் நீண்ட கால நிலைத்த நட்பு குலைந்து போகாது குறைந்து போகாது. நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை..?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எள்ளு, பனங்கட்டி என்பவற்றில் இரும்புச்சத்து, கால்சியம் என்பன அதிகம் காணப்படுகின்றன.
    • தமிழர் உணவுகளில் நிறைய இருந்தன.


     



    குழந்தைகளுக்கான உணவு:

    குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானது சத்துக் குறைபாடு (புரதம், இரும்பு சத்து), சுவாச தொடர்பான நோய்களும் மற்றும் செரிமானக் கோளாறும் ஆகும். இவைகளை நீக்கினால் நலம் மேம்படும்.

    1. தூதுவளை இலைத் துவையல், முசுமுசுக்கை அடை, துளசி தேநீர், பூண்டுத் தேன், கல்யாண முருங்கை அடை, மிளகு ரசம் போன்றவைகளை சுவாசத் தொடர்பான நோய்கள் உள்ளபோது உணவாகத் தர நல்ல பலனைத் தரும்.

    2. சத்துக் குறைவு நோய்களுக்கு: முருங்கைக் கேழ்வரகு அடை, தானிய லட்டு, பொரிவிளாங்காய் உருண்டை, எள்ளுருண்டை, சத்து மாவு, அவல் இனிப்பு உருண்டை. அதிரசம், மற்றும் தினை உருண்டை போன்ற உணவுகள் தரலாம்.

    3. செரிமானக் கோளாறுகளுக்கு: சுக்கு மல்லி காபி. சுண்டைக்காய் துவையல், சுக்கு உருண்டை, இஞ்சி முறப்பா, பிரண்டைத் தொக்கு, சீரகக் கஷாயம் போன்ற உணவுகளைத் தரலாம்.

    பெண்களும் உணவு பழக்கங்களும்:

    1. பருவமடைந்த பெண்களின் உணவு :

    பிட்டு என்ற உணவு அதிகப்படியான உதிரப்போக்கைக் கட்டுபடுத்தும். இதில் சிவப்பரிசி பிட்டு, உளுந்து சேர்த்து பால் பிட்டு மற்றும் உளுந்து களி முக்கிய உணவாகும். இவை உடல், எலும்பு, கருப்பை வளர்ச்சிக்கு நல்லது.


    2. பருவமடைந்த அன்று:

    கத்தரிக்காய் பால்கறியும், பச்சரிசிப் பால் பொங்கலும் கொடுப்பது வழக்கம், இதனால் இரும்புச்சத்து அதிகம் சேரும்.

    நல்லெண்ணெய் 1-2 அவுன்ஸ், நாட்டுக்கோழி முட்டை தருவார்கள். இவை தேக பலம், கருப்பை வளர்ச்சிக்கு உதவும்.

    3. திருமணமான பெண்களின் உணவு:

    திருமணமான பெண்களின் உணவில் உளுந்து, உளுத்தமாவுகளி சிறப்பாக இடம் பெற்றிருப்பதை 'அகநானூறு' போன்ற சங்கநூல்கள் எடுத்துக் கூறியுள்ளன.

    இது உடலுக்கும் கர்ப்ப உறுப்புகளுக்கும் இடுப்பெலும்புகளுக்கும் உறுதியையும், பலத்தையும் கொடுப்பதாகக் கூறப்படுகின்றது.

    இவை தவிர எள்ளுப்பாகு, பசும்பால், சம்பா அரிசிச் சோறு, பேரீச்சம்பழம், பாதாம் பருப்பு, முந்திரிகைப்பழம், செவ்வாழைப்பழம் என்பவையும் இக்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சத்துணவுகளாகும்.

    4. கர்ப்பிணிப் பெண்களின் உணவு:

    கர்ப்பிணியின் உணவை எடுத்துக் கொண்டால் முதல் மூன்று மாதத்துக்கு விரும்பி உண்ணும் மாம்பிஞ்சு, விளாங்காய், மாதுளம்பழம் போன்றவற்றில் ஆசை கொள்வார்கள். உளுந்து முக்கியப் பங்கு வகிக்கிறது.

    ஆறாம் மாதத்தின் பின்னர் எள்ளு, பனங்கட்டி, உளுத்தம்மாவு என்பவற்றைச் சேர்த்திடித்த எள்ளுப்பாகு போன்றவற்றை உண்ணக்கொடுப்பார்கள்.

    எள்ளு, பனங்கட்டி என்பவற்றில் இரும்புச்சத்து, கால்சியம் என்பன அதிகம் காணப்படுகின்றன. எனவே இது தாய், சேய்க்குச் சத்தான உணவாக அமைவதுடன் தாய்க்குச் சிறந்த மலமிளக்கியாகவும் செயற்படுகிறது.

    நந்தினி

    நந்தினி

    மேலும் உளுத்தமாவு, கடலை மாவு, பயற்றம்மாவு, அரிசி மாவு முதலியவற்றைக் கொண்டு பல்வேறு பலகார வகைகள் செய்து கர்ப்பிணிக்கு வழங்குவார்கள் மற்றும் கீரை வகைகளைக் கர்ப்பிணிப் பெண்களின் உணவில் தாராளமாகச் சேர்த்து கொள்ளலாம்.

    இவை அவர்களுக்குத் தேவையான உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் முதலியவற்றை வழங்குவதுடன் மலம் சாதாரணமாக இளகி வெளியேறவும் உதவுகிறது.

    5. பிரசவித்த பெண்களின் உணவு:

    பாலூட்டும் தாயின் உணவு:

    பிரசவித்த பெண்களுக்குச் 'சரக்கு" அரைத்துக் கொடுக்கப்படும் பழக்கம் நமது மக்களிடையே காணப்படுகிறது. பிரசவத்துக்கும், பிரசவத்தின் போது வெளியேறும் கழிவுகளுக்கும் தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் இச்சரக்கு உதவுகிறது.

    கொத்தமல்லி, நற்சீரகம், மிளகு, திப்பிலி மூலம், மஞ்சள் சேர்த்து அம்மியில் அரைத்து, பூண்டு, இஞ்சி தட்டிப்போடுவார்கள். உப்பும் சேர்த்துக் கொதித்த பின் இறக்கித் தனியாகக் பருகுவார்கள். சோற்றுடன் உண்ணவும் கொடுப்பார்கள். குழந்தை பிறந்து 3-ம் நாள் தொடங்கி 31-ம் நாள் வரை இரண்டு வேளைகள் கொடுப்பார்கள்.


    இச்சரக்கில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் காணப்படுவதால் பிரசவத்தின் போது இழந்த உடல் வலிமை, குருதி என்பவற்றை மீள் உற்பத்திச் செய்வதற்கும் இவை உதவுகின்றன. பூண்டு சேர்ப்பதால் தாய்ப்பால் சுரப்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறது.

    மேலும் பத்தியக்கறியில் அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, வாழைப்பிஞ்சு, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், வெந்தயம் என்பனவும் செவ்வாழைப்பழம், நேத்திரம்பழம், பனங்கட்டி என்பனவும் அதிகளவில் இடம் பெறுகின்றன. கைக்குத்தல், புழுங்கலரிச்சோறே பெரும்பாலும் கொடுக்கப்படும்.

    6. வயதான பெண்களின் உணவு:

    உளுத்தமாவு உருண்டை, சத்துமாவு. பெரியவர்களுக்கு உகந்த சத்துணவுகளாகும்.

    மூல நோயாளிகளுக்கான உணவுகள்:

    கருணைக்கிழங்கு மசியல், துத்தி துவையல், வாழைப்பூப் பொரியல், வெந்தயக்கீரை தோசை, பிரண்டைத் துவையல் கற்றாழைக் குழம்பு உணவில் சேர்க்கலாம்.

    மூட்டுநோயாளிகளுக்கான உணவுகள்:

    முடகறுத்தான் கம்பு சேர்ந்த தோசை, பிரண்டைத் துவையல், வாத நாராயணன் அடை, அத்திகாய்க் கூட்டு, கேழ்வரகு முருங்கை சேர்ந்த அடை.

    ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கான உணவுகள்:

    செம்பருத்திப் பூ தேநீர், சீரகக் குடிநீர், வல்லாரைக் கூட்டு, ஆரைகீரைக் கடைசல், வெண்பூசணி பச்சடி, கொத்தவரங்காய் பொரியல், எலுமிச்சை பானம், தனியா கஷாயம், கற்றாழைக் குழம்பு, முருங்கைக்கீரை சூப், முருங்கை ஈர்க்கு ரசம் போன்ற உணவுகள்.

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவுகள்:


    கேழ்வரகு களி, கம்புப்புட்டு, தினை, கோதுமைப் பண்டங்கள், சப்பாத்தி (கேழ்வரகு, கோதுமை), நவதானியங்கள் பண்டம், வல்லாரைக் கீரைக் கூட்டு, கறிவேப்பிலைப் பொடி, கோவைக்காய் பொரியல், அவரைப்பிஞ்சு, பாகற்காய் பொரியல், வெந்தயப் பொடி, கீழா நெல்லி மசியல், வெந்தயக் குழம்பு, மணிசம்பா அரிசி சாதம்.

    ரத்த சோகை தீர உணவுகள்:

    அகத்திகீரைப் பொரியல், முருங்கைகீரை அடை, சுண்டைக்காய்க் குழம்பு, எள் உருண்டை, கடலை உருண்டை, தானிய லட்டு, அத்திக்காய்க் கூட்டு, வாழைப்பூப் பொரியல், அவல் லட்டு, வாழைக் கச்சல், கேழ்வரகு, கம்பு, புட்டு, கத்தரிக்காய்க் குழம்பு, கறிவேப்பிலைக் குழம்பு, மணதக்காளி சூப் போன்ற உணவுகளைத் தரலாம்.

    உடல் பருமனை குறைக்கும் உணவுகள்:

    கொள்ளு அவல், கொள்ளு ரசம், வாழைத் தண்டு பொரியல், அமுக்கிரா குழம்பு, இஞ்சித் தொக்கு, பூண்டுக் குழம்பு, குப்பைமேனி கீரைக் கூட்டு, கருணைக்கிழங்குக் குழம்பு

    இவ்வாறு பலநோய்களை வெல்லும் உணவுகள் நம் கலாசாரத்தில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இவற்றை நாம் பாதுகாத்து நம் தமிழர் உணவுகளின் மருத்துவத் தன்மையை வெளிக்கொணர்ந்து நோயில்லாமல் வாழும் தலைமுறையை உருவாக்குவோம்.

    மரபார்ந்த தானிய வகைகளையும், பயறு வகைகளையும், சம்பா போன்ற அரிசியையும் சமைத்துச் சாப்பிடுகிற மரபு நீடிக்கிற வரை மக்களை நோய் நொடி அண்டாது, அண்டியதில்லை.

    காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி, வயிற்றோட்டம் என்ற சிறு சிறு சிக்கல் வரும் அதற்கான கை வைத்தியங்களில் அவை மாயமாகிவிடும். கடைசி வரை மாத்திரை சாப்பிட வேண்டிய சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு நோய் மற்றும் பல நோய் தற்காலத்தில் எல்லோருக்கும் பரவலாக வருகிறது.

    ரசாயன வகைப்பட்ட மருந்து, உரங்களால் விளைகின்ற காய்கறி, உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததின் விளைவு இது. நோய்க்கான மூலகாரணம் உணவு வகைதான். உணவு உற்பத்தி செய்யப்படுகின்ற முறைமைதான்.

    உற்பத்தி முறைமையின் ஒட்டு ரகம், ரசாயனப் பயன்பாடு காரணமாக இந்தியாவே நோயாளி தேசமாக மாறியிருக்கிறது. மரபார்ந்த உணவுகளை மீட்க வேண்டுமானால் மரபார்ந்த விவசாய முறைமைக்குத் திரும்பியாக வேண்டும்.

    ஆரோக்கியம் என்ற கடந்த காலத்தில் இருந்து நோயாளியாயிருக்கின்ற ஒருவன் சிகிச்சை பெற்று மீண்டும் ஆரோக்கியத்தை நோக்கிக் கடந்த காலத்துக்குத் திரும்புவது பிற்போக்கானதல்ல.

    நோயை வெல்லும் உணவுகள் என்பது நோய்களை நீக்குவதும், நோய்களை வராமல் தடுப்பதுமான சத்தான உணவுகளே. இவை நம் தமிழர் உணவுகளில் நிறைய இருந்தன. தற்போதும் நடைமுறையில் உள்ளன. அவைகளைப் பின்பற்றினாலே நலமாக வாழலாம்.

    போன்: 9500676684

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இவள் மனிதனை மட்டும் அன்று எல்லா உயிர்களையும் இயங்கச்செய்கின்றாள்.
    • உண்மைப் பொருள் அறிந்தவர்கள் இயற்றிய நூல்களைப் படிக்க வேண்டும்.

    அதிகாரம்: அவா அறுத்தல்

    இந்த அதிகாரத்தில்,

    அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

    தவாஅப் பிறப்பீனும் வித்து.

    என்ற குறளில் தொடங்கி

    ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

    பேரா இயற்கை தரும்...

    என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

    அவா என்பது ஆசை. அவா அறுத்தல் என்பதற்கு ஆசைகளைத் துறக்க வேண்டும் என்பது பொருளாகும். இத்தகைய ஆசை காமத்தால் வந்தது. காமம் என்பது இயற்கை. காமம் ஏற்பட, பெண் காரணமா? அல்லது பெண்ணுக்கு ஆசை வர ஆண் காரணமா? அல்லது உணவு சாப்பிடுவதனால் ஆசை வந்ததா? அவ்வாறானால் பெண் முதலில் தோன்றினாளா? அல்லது ஆண் முன்னே தோன்றினானா?

    காமம் அல்லது ஆசை, உலகம் தோன்றும்போதே தோன்றியுள்ளது. அப்போது ஆண், பெண் இருவரும் சேர்ந்தே தோன்றி இருக்கின்றார்கள். ஒன்று முன்னே தோன்றி, மற்றொன்று பின்னே தோன்றியிருக்க முடியாது. இருவரும் ஒரு நொடியில் தோன்றியிருக்கிறார்கள். இந்த உலகம் முன்னே தோன்றியதா? நீர் தோன்றியதா? காற்று தோன்றியதா? கதிரவன் தோன்றினானா?

    லட்சோப லட்சம் அண்டங்கள் உள்ளன. சில அண்டங்கள் குளிர்ச்சியாக இருக்கும். சில அண்டங்கள் எரிமலையாக இருக்கும். கோடானகோடி அண்டங்களை ஒரேயொரு சக்தியே உருவாக்கியிருக்கிறது. இயற்கை அன்னை, அரூபமாக இருந்து இவையனைத்தையும் படைத்திருக்கின்றாள்.

    ஏன் படைத்திருக்கின்றாள்? இதற்கு யாராலும் விளக்கம் தர இயலாது.பல்வேறு அண்டங்களும் இயங்கிக் கொண்டேயிருக்கும். பூமியை விட அளவு பெரியதாகவுள்ள அண்டங்களும் இருக்கின்றன. இவையனைத்தையும் படைத்து விட்டு, அவள் அசையாமல் இருக்கி ன்றாள். அவள்தான் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கி ன்றாள். பல்வகை ஜீவராசிகளாகவும் இருக்கின்றாள்.

    இனம் புரியாமலும் இருக்கின்றாள். இவளை புரிந்து கொண்டவர்களுக்குத் தாயாக இருக்கின்றாள், புரியாதவர்களுக்கு காம மோகினியாக இருக்கின்றாள். சண்டாளர்க்கு அவள் காளியாகவும், சாந்தம் உள்ளவர்களுக்கு சக்தியாகவும் இருப்பாள். மும்மலத்தையும் சார்ந்திருப்பாள். பெண் உறுப்பாகவும், ஆண் உறுப்பாகவும் இருப்பாள்.

    காமத்திற்குக் காரணமாகி இருப்பாள். கருவாகவும் இருப்பாள். கரு உருவாகி குழந்தையாக வெளிவந்தவுடன் அந்தத் தாய்க்குப் பாசத்தைத் தந்திருப்பாள். முன்னே அவள்தான் காமத்தைத் தந்தாள். பின், அவளே பாசத்தையும் தந்திருக்கின்றாள்.

    அதுமட்டுமல்லாமல் பிறந்த குழந்தைக்குப் பாலாகவும் இருப்பாள். இவ்வாறு பல்வேறு விதமாக உள்ள இவளே அரூபமாக இருப்பாள். யோகிகளுக்கு, புருவ மத்தியில் சிறு குழந்தையாக இருப்பாள்.

    அதே சமயம் பத்து வயது பெண்ணாக (வாலைப் பெண்) இருப்பாள். சில இடங்களில் மூக்கில்லாத மூக்கறைச்சியாக இருந்து, பல்வேறு விந்தைகளைச் செய்வாள்.காலையில் இளநங்கையைப் போல் இருப்பாள். மாலையில் கிழவியாகக் காட்சி தருவாள்.

    இத்தகைய காட்சிகளை யோகிகள் மட்டும்தான் அறிய முடியும். பெண்ணோடு ஆண் கூட நினைக்கும்போது, சிந்தனையாக இருக்கின்றாள். பின் சேர்க்கைக்குக் காரணமாக இருக்கின்றாள்.

    ஆண்பாலுக்கான சுக்கிலமாகவும், பெண்பாலுக்கான சுரோணிதம் அல்லது கருமுட்டை அணுக்களாகவும் மாறுவாள். அக்கரு, கருப்பையுள்ளே தங்கச் செய்வாள். பின்பு அக்கரு வளரவும் காரணமாயிருப்பாள். சிந்தனையாக இருந்தது திரவப்பொருளாக மாறியது. சுக்கிலம் என்பது பல லட்சக்கணக்கான அணுக்களாக இருந்தது. அது கரு கூடும்போது மென்மையான பொருளாகவும் பின் திடப்பொருளாகவும் மாறுகிறது.

     

    தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    ஆக எண்ணமாக இருந்த அதே சக்தி, சுக்கிலம் சுரோணிதமாக மாறி கருப்பையுள் மிருதுவான குழந்தையாக மாறி, பின் திடமான எலும்பும் தோலும் தசையும் கொண்ட உடம்பாக மாறியது. இந்த உடம்பு நாடி, நரம்புகளாகவும், ஆற்றல் பொருந்திய மண்டைஓடு, கை எலும்பு போன்று வலிமையாகவும் மாறியது. இத்தனையும் அணுக்களாக இருந்த ஒன்றே இவ்வாறாகச் செயல்படுகிறது. அனைத்திற்கும் எல்லாம்வல்ல இயற்கை அன்னையே காரணமாக இருக்கின்றாள்.

    இவள் மனிதனை மட்டும் அன்று எல்லா உயிர்களையும் இயங்கச்செய்கின்றாள். அவா அறுத்தல் என்ற ஒன்றை மிருகங்களிடம் கூறவில்லை. உண்பதும், இனப்பெருக்கம் செய்வதும் மற்ற ஜீவராசிகளுக்கு இயல்பு. மனிதனும் உண்பான், இனப் பெருக்கம் செய்வான். இவனைப் பார்த்தே அவாவை அறுக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறினார். மனிதனுக்கு மட்டும்தான் தான் பிறந்தது எப்படி ? என்பது தெரியும். மிருகங்களுக்கு எதுவும் தெரியாது.

    முதலில் சிந்தனையாகவும் பின்பு பஞ்சபூதச் சாரங்களான சுக்கிலமாகவும் பஞ்சபூதச் சாரங்களான சுரோணிதமாகவும் கருமுட்டையாகவும் இருந்தது. இத்தகைய பஞ்சபூதச் சாரங்களைப் பற்றி, ஆறாவது அறிவுள்ள மனிதனுக்கு மட்டுமே தெரியும். எல்லாமே பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டதாகவே உள்ளது. இத்தகைய பரிணாம வளர்ச்சி எப்படி வந்தது? இந்தப் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நன்கு அறிந்தவன்தான் மனிதன்.

    இதிலிருந்து எப்படி விடுபடுவது. இத்தகைய பரிணாம வளர்ச்சிக்கு, பசி காரணமா? உணவு காரணமா? உணர்வு காரணமா? இயற்கை காரணமா? செயற்கை காரணமா ? உடம்பு காரணமா? இப்படி ஓர் இனம்புரியாத ஓர் இயக்கம் இருக்கின்றது. இதனை மனிதன் அறிந்திருக்கின்றான். காமத்திற்கு பசி காரணம். பசி என்பது இயற்கை. இப்படியாக ஓர் இயக்கம் நம் உடலில் உள்ளது. நம் உடலில் பல லட்சம் கோடி அணுக்கள் உள்ளது.

    ஒவ்வொரு அணுவிலும் பெண்மையும், ஆண்மையும் கலந்திருக்கும். பெண்மையும் ஆண்மையும் கலந்த அணுக்களில் ஆசைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். அப்போது அணுக்களைக் கொல்லுவதா? மிகுதியான வெப்பம் இருந்தால், அணுக்களின் செயல்பாடு குறைந்துவிடும். வெப்பமும் குளிர்ச்சியும் சமமாக இருந்தால், உள்ளே உள்ள அணுக்கள் சாகா இதுதான் வாதப்பித்தம் என்று சொல்லப்பட்ட வைத்தியம்.

    ஞானிகள் இந்த உடற்கூற்றை நன்கு அறிந்துள்ளனர். முறையோடு நெறிக்குட்பட்டு வாழ்ந்து, அந்த அணுக்களின் இயல்பறிந்து அந்த அணுக்களுக்குத் தம்முடைய தவமுயற்சியால் ஒரு வகையான உஷ்ணம் தருகின்றனர். அந்த அணுக்களில் உள்ள பெண்மை, ஆண்மை சக்தியைக் குறைக்கின்றனர். உடம்பின் தன்மையறிந்து, உடம்புக்கு ஏற்ற உஷ்ணத்தைத் தந்து அந்த அணுக்களை சாகடிக்காமல் சாகடிப்பார்கள். இவ்வாறாக, உடலின் அணுக்களை சாகடிக்காமல் சாகடிப்பதே அவா அறுத்தல். இது சூட்சம உண்மை.

     

    இந்த அறிவு, திருவருள் துணை இருந்தால்தான் வரும். திருவருள் துணையில்லாவிட்டால் இந்த அறிவு வராது. உண்மைப் பொருள் அறியாதவர்கள் சுப்பிரமணியருக்கு 2 மனைவிகள் என்று கூறுவார்கள். தத்துவ விளக்கம் வேறு. வள்ளி என்பது ஸ்தூல தேகம். தெய்வானை என்பது சூட்சும தேகம். இச்சாசக்தி என்பது காமதேகத்திற்குரியது, அது வள்ளி. ஞான சக்தி என்பது, அக உடம்புக்குரியது அதுவே தெய்வானை. எல்லாம் வல்ல பரப்பிரம்மத்திற்கு திருமணம் செய்வது என்பதன் பொருள் வேறு. அங்கே ஒன்றுமே இருக்காது. அங்கே காமம் இல்லை, வெகுளி இல்லை, வேண்டுதல் இல்லை, எந்தவிதமான விகற்பமும் இல்லை.

    பரப்பிரம்மத்தின் தத்துவம் என்னவெனில், இச்சாசக்திதான் வள்ளி. ஞானசக்திதான் தெய்வானை. இரண்டும் கலந்தது கிரியாசக்தி. அதாவது பரப்பிரம்மம். கிரியாசக்தி என்பது சூட்சும தேகமும் கிடையாது, ஸ்தூலதேகமும் கிடையாது, அரூப தேகம். வறுமையில் உள்ளவனுக்கு அவன் மொட்டையாண்டி. புண்ணியம் படைத்தவர்களுக்கு ராஜகோலம் பூண்டு நிற்பான்.

    ஆசை, உடம்பிலுள்ள எல்லா அணுக்களிலும் கலந்திருக்கும். ஆசைகள் பலவிதமாய் உள்ளன. வீடு, வாசல், மனைவி எல்லாமே காமத்தின் காரணமாக வந்தவை. காமம், உலகம் தோன்றும்போதே வந்தது. அது இயல்பு. ஆசை காரணமாக அறியாமை வந்தது. அறியாமை காரணமாக ஆடம்பரமான எல்லாமே வந்தன. தேகசுத்தி ஆனாலன்றி, இதிலிருந்து விடுபட முடியாது.

    தேகசுத்தி அல்லது காயசித்தி பெற்றவர்கள் உலக மக்களுடன் இருந்தாலும், அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. ஆசை என்பது அவனுக்குத் தெரியாத ஒரு உணர்வு. அவனுக்குள்ளேயே இயங்கிக் கொண்டிருக்கும். இயற்கை அன்னை இவ்வாறெல்லாம் இயங்கிக் கொண்டிருப்பாள். காகம் தன்னுடைய முட்டை என்றெண்ணி, குயில் முட்டையை அடைகாத்து, பொரித்து தன் குஞ்சு என்று உணவு ஊட்டும். இறகு முளைத்து, உண்மை தெரிந்தவுடன் அதனை வெளியேற்றி விடும்.

    அதுபோல் எல்லாம்வல்ல இயற்கை அன்னை உலக மக்கள் அனைவருக்கும் இப்படியொரு மயக்கத்தை கொடுத்து, இனம் புரியாத ஓர் இயக்கத்தையும் உண்டாக்கி செயல்படுத்திக் கொண்டிருப்பாள். இந்த மயக்கம் பெண்ணால் வந்ததா? உணர்வால் வந்ததா? உடற்கூற்றால் வந்ததா? தத்துவம் தொன்னூற்றாறில் வந்ததா? இந்த மயக்கம் ஆதியிலிருந்தே தோன்றியது. எல்லாம்வல்ல அருட்சக்தி அந்த மயக்கத்தை கொடுத்திருக்கின்றாள்.

    அதனால் திருமணம் செய்வான், பொன்பொருள் சேர்ப்பான், வீடு, வாகனம், நிலம் சம்பாதிப்பான், கடைசிவரை தன்னைப் பற்றியோ மனைவியைப் பற்றியோ அறியமுடியாது. வினை காரணமாகவே இவையெல்லாம் வந்தது. ஆசை, காமம், பாசம் போன்றவை இந்த வினையினால் வந்தது. எல்லாம்வல்ல சக்தியே இந்த வினைக்கு காரணமாக உள்ளது. இத்தகைய இயற்கையை கண்டுபிடித்து இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்பதை உணர வேண்டும்.

    மயக்கம் என்பது நிலையில்லாத பொருளைக் கண்டு நிலையானதென எண்ணி மயங்குதல். மயக்கத்திற்குக் காரணம் உடம்பா? உயிரா? உணர்வா? அறிவா? பெண்ணா? ஆணா? உலகமா? என்று எதுவும் புரியாது. இந்த மயக்கத்தை, எல்லாம்வல்ல இயற்கை அன்னை தந்திருக்கின்றாள். இந்த மயக்கத்தை கொடுத்த அவளே, அதற்குள் ஒரு துளி சுத்தமான அமிழ்தத்தையும் வைத்துள்ளாள்.

    100 துளியில் 99 துளி மயக்க மருந்து. அந்த ஒரு துளி அமிழ்தத்தைத் தட்டி எழுப்புவதற்குத்தான் தந்திருக்கின்றாள். 99 துளி மயக்க மருந்து நீங்கினால், ஒரு துளி அமிழ்தம் வெளிப்படும். இந்த ஒரு துளி அமிழ்தம் வெளிப்பட வேண்டுமானால், 99 துளி மயக்க மருந்தை நீ அறிந்திருக்க வேண்டும். இந்த மயக்க மருந்துதான் உலக மக்களை ஆட்டிப் படைக்கின்றது. இதை ஞானிகள் புரிந்து கொண்டுள்ளார்கள். இதை புரிந்து மயக்கத்தை நீக்கி விட்டார்கள்.

    ஒரு துளி அமிழ்தத்தைப் புரிந்துக் கொள்ளத்தான், மயக்கம் என்ற ஆசை, அறியாமை, கோபம், காமம், கற்பனை, இனம்புரியாத கவலை போன்றவற்றை இயற்கை அன்னை நம்முள் வைத்துள்ளாள். நம் தேகத்துள் 99 துளி நஞ்சு வைத்து, ஒரு துளி அமிழ்தத்தையும் வைத்திருக்கின்றாள். 99 துளி நஞ்சு நீங்கினாலன்றி, ஒரு துளி அமிழ்தம் கிடைக்காது. இந்த ரகசியம் ஆதிதலைவன் சுப்ரமணியருக்கே தெரியும்.

    இதனை ஆதிதலைவன் சுப்ரமணியர், இயற்கை அன்னை ஆசி கொண்டு 99 துளி நஞ்சை நீக்கி, ஒரு துளி அமிழ்தம் பெற்றுக் கொண்டார். இந்த அமிர்தம் கல்வியைத் தரும், காமத்தை நீக்கும், கோபத்தை நீக்கும், அழிவில்லாத வாழ்வு தரும். விஷம் நீங்கினால், விவேகம் தோன்றும். விஷம் நீங்கினால் அமிர்தபானம் தோன்றும், விஷம் நீங்கியதும் சிறப்பறிவு வந்தது. விஷம் நீங்கியது ரூபம், அரூபமில்லாத ஜோதி உடம்பு தோன்றியது.

    இந்த அழியா உடம்பை எல்லா ஞானியர்களும் பெற்றுள்ளார்கள். இந்த 99 துளியில் ஒரு துளி நச்சுத்தன்மை இருந்தாலும் மீண்டும் கருப்பைக்குள் சென்று விடுவான். காமதேகம் இருக்கும்வரை உண்மை புரியாது. திருக்குறளுக்கு அர்த்தம் தெரியாது. இதை யார் சொல்ல வேண்டும். 99 துளி நஞ்சை நீக்கியவன் சொல்ல வேண்டும். சூட்சும தேகத்தை அறிந்தவன் சொல்ல வேண்டும்.

    அப்படி அறிந்தவனின் சொல், பிறவிப்பிணிக்கு மருந்தாக இருக்கும். முதுபெரும் ஞானிகளின் சொற்களைக் கேட்டால், அந்த சொற்கள் ஆன்மாவைத் தட்டி எழுப்பும். அவர்கள் நமக்கு பிறவிப்பிணி நீங்க வழி சொல்வார்கள். அவர்களின் நாமத்தைச் சொல்லி, பூஜை செய்து ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளவேண்டும்.

    ஆசைதான் எல்லா உயிர்களின் பிறவிக்கு வித்து. நச்சுத் தன்மையுடைய காமம் நீங்கினால் ஒழிய, இத்தகைய ஆசையை அறுக்க முடியாது. பட்டினி கிடந்தாலும் இந்த வித்து சாகாது, சாப்பிட்டாலும் சாகாது. சாகாமல் சாகடித்தவன், காமதேகத்தைச் சாகடித்தவன், பசியை வென்றவன், மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்றவன் எவனோ, அவனது திருவடியைப் பற்றிக் கொள். நம்மைச் சுற்றியுள்ள இளமையானவற்றைப் பார், முதுமையையும் பார். சுடுகாட்டில் உள்ள மண்டை ஓட்டைப் பார். சாவைப்பற்றிச் சிந்தித்துப்பார்.

    நாளை, நமக்கும் இப்படித்தான் என்பதை உணர்ந்துகொள். கடைசி நேரத்தில் நோய்கள் சூழ்ந்து விடும், என்ற உண்மையை உணர்ந்துகொள். இப்பொழுதே தலைவனின் திருவடியை பற்றிக் கொள். சான்றோர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்.

    மற்றவர்களுக்கு, கடுகளவு துன்பமும் வராமல் வாழ்க்கையை நடத்தக் கற்றுக்கொள். உண்மைப் பொருள் அறிந்தவர்கள் இயற்றிய நூல்களைப் படிக்க வேண்டும்.

    அது ஆன்மாவைத் தட்டி எழுப்பும் சக்தி வாய்ந்தது, அறிவைத் தெளிவுபடுத்தும், அறியாமையெனும் திரையை நீக்கும், சவமாகப் போகின்றவனைச் சிவமாக ஆக்கும். பல லட்சம்கோடி அணுக்களினால் ஆன உடம்பில், தாய்தந்தையாலான காமம் சேர்ந்திருக்கும். அதைப் பக்தி என்று சொல்லப்பட்ட மூலக்கனல் கொண்டு, நஞ்சை நீக்க வேண்டும். அணுக்களைச் சாகாமல் சாகடித்து, நஞ்சை நீக்கி ஒளி உடம்பு பெற வேண்டும். அதற்கு ஒளி உடம்பு பெற்றவரின் திருவடியே கதியென்று உணர வேண்டும்.ஆசையே பிறவித்துன்பத்திற்கு வித்து.

    ஒருவனுக்கு ஆசை என்பது, பிறவித்துன்பத்தை அறுக்கும் ஆசையாக இருக்க வேண்டும். அவா அற்ற நிலைமைக்கு நிகரான செல்வம் வேறு எதுவும் இல்லை. ஆசையை அற்றவர்கள் உண்மைப் பொருளை உணர்ந்தவர்கள். ஆசை இல்லாதவனுக்கு துன்பம் இல்லை. ஆசை என்றால் துன்பம், ஆசை அற்றவனுக்கு பேரின்பம் வாய்க்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்கத்தைத் தேடித்தான் எடுக்கணும்.
    • கடலுக்குள் இறங்கித் தேடினாதான் முத்து கிடைக்கும்.

    'உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும் சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன்முன் நிறுத்து; அவற்றிலிருந்து நல்ல செயல்கள் விளையும்'.

    -சுவாமி விவேகானந்தர்

    வெயில் சுள்ளென்று அடித்தது. அந்த ஒளி, ஜன்னல் வழியாக படுக்கை அறைக்குள் நுழைந்திருந்தது. எனினும், போர்வையைக் கால்முதல் தலை வரை இழுத்துப் போர்த்தியபடி தூங்கிக் கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

    'வெயில் அடிக்கிறதுகூட தெரியாம அப்படி என்ன தூக்கம்' - கத்தினார் அப்பா.

    'இப்படி தூங்கினா வெளங்குமா, எழும்புடா' - அவனைப் பிடித்து உலுக்கினாள் அம்மா.

    'இப்ப என்ன அவசரம். கொஞ்சம் நிம்மதியா தூங்கவிட மாட்டீங்களே' என்று சலித்துக்கொண்டு, மறுபக்கம் திரும்பிப் படுத்தான் அவன்.

    'டேய், காலேஜ் முடிச்சி ரெண்டு வருஷமாச்சி. வேலைக்கு போகணுங்கிற எண்ணமே உனக்கு இல்லையா?'

    'சும்மா கத்தாதம்மா. உலக நிலவரமே உனக்குத் தெரியல. இப்ப எங்க வேலை கிடைக்குது. எல்லோருக்கும் இதே பிரச்சனைதான்'.

    'உங்கூட படிச்சவங்கெல்லாம் வேலை பார்க்கிறாங்க, சம்பாதிக்கிறாங்க. நீ மட்டும் ஏன்டா இப்படி இருக்கிறே?'

    'எனக்கு வேலை கிடைக்கல...என் தலையெழுத்து'.

    'அதெல்லாம் ஒண்ணுமில்ல. இப்படி படுத்துக் கிடந்தா எப்படி கிடைக்கும்?'

    'உனக்கு தினமும் இதே பாட்டுதான். என்னை என்னதான் பண்ணச் சொல்ற?'

    'தேடணும்...தேடினாதான் கிடைக்கும். எது தேவையோ, அது கிடைக்குமட்டும் தேடிட்டே இருக்கணும்' - அழுத்தமாகச் சொன்னாள் அம்மா.

    அந்த வார்த்தைகள் அவனுக்குள் ஞான மந்திரம்போல் பாய்ந்தன. போர்வையை உதறிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான்.

    'ஆமாண்டா! தங்கத்தைத் தேடித்தான் எடுக்கணும். கடலுக்குள் இறங்கித் தேடினாதான் முத்து கிடைக்கும். அவ்வளவு ஏன்; காக்காகூட தேடித் தேடிக் குச்சிகளைப் பொறுக்கிதான் தன்னோட கூட்டைக் கட்டுது. தேனீ பல மைல்கள் பறந்துதான் தேனை சேகரிக்குது. நல்ல விஷயங்களைத் தேடித்தான் பெற முடியும்' என்று சொல்லிவிட்டு, அவனுக்குக் காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்தாள் அம்மா. அதற்குள் அவன் குளித்து வந்து, வேலை தேடுவதற்கான முனைப்புடன் ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.

    நம் வாழ்க்கைப் பயணத்தின் நோக்கமே தேடல்தான். விடிந்ததுமே ஒவ்வொரு ஜீவராசியும் தன் வாழ்விற்கான தேடலைத் தொடங்குகிறது. தேடல் இல்லையெனில், வாழ்வின் ஓட்டத்திற்கான அவசியம்தான் என்ன!

    யாருக்கும் ஓர் இலக்கு அவசியம். அப்படியானால்தான், அதற்கு நேராய் பயணிப்பதற்கான உந்துதலைப் பெற முடியும். தேடலுடன் உற்சாகமும் வேகமும் உண்டாகும். இலக்கை நோக்கிய செயற்பாடுகளில் உடலும் உள்ளமும் மிகச்சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். வாழ்க்கையின் மீதான விருப்பத்தை மேம்படுத்தும்.

    எந்த லட்சியமும் இல்லாமல் பொழுதை வீணடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வாழ்க்கையும் புரியாது. காலத்தின் அருமையும் தெரியாது. வீண்கதைகள் பேசிப் பேசியே சிலர் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள். விழிப்பற்ற நிலையில் சிலர் தங்கள் வழியைத் தவறவிட்டுவிடுகிறார்கள்.

    கவிஞர் தியாரூ

    கவிஞர் தியாரூ

    கடுமையான கோடை வெயில். அனல் தெறித்தது. ஒருவன் வேக வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தான். சூடு தாங்க முடியவில்லை. வெகுதூரம் கடந்து ஒரு மரத்தைக் கண்டான். ஓடோடிச் சென்று அந்த மரநிழலில் ஒதுங்கினான். சொர்க்கத்தைக் கண்டதுபோல் மகிழ்ந்தான்.

    அந்த மரத்தைப் பார்த்து, 'மரமே! உன்னைக் கண்டடைய, நான் நான்கு மணிநேரம் வெயிலில் நடந்தேன்' என்றான்.

    மரம் அவனை நோக்கி, 'மனிதா! நான் இதே இடத்தில் உனக்காக நாற்பதாண்டு காலம் காத்திருந்தேன்' என்றது.

    தேடல்தான் ஞானப் பயிற்சி. தேடத் தேட பார்வை விரிவடைகிறது. பாதை தெரியவருகின்றது. தேடலில் நாம் ஞானம் பெறுகின்றோம்

    தேடலைப் பற்றிய தெளிவில்லை என்றால், எதுவும் பிடிபடாது. 'என்ன தேடுகிறோம்' என்பதே தெரியாமல், சிலர் தேடித் தேடிக் களைத்துப் போவார்கள்.

    'என்ன தேடுகிறீர்கள்?'

    'தெரியாது.'

    'எதற்காகத் தேடுகிறீர்கள்?'

    'எல்லோரும் தேடுகிறார்கள். அதனால் நானும் தேடுகிறேன்'.

    இப்படி வெற்றுத் தேடல்களில், அங்குமிங்கும் திரிந்து கொண்டிருப்பவர்கள் உண்டு. 'ரொம்ப பிசி' என்பார்கள். இருபத்து நான்கு மணிநேரம் போதாது என்பதுபோல் காட்டிக் கொள்வார்கள். என்ன பயன்? அர்த்தமற்ற அலைச்சல்களில் காலத்தை விரயமாக்கிக் கொண்டிருப்பார்கள்.

    நமக்குத் தெளிவான நோக்கம் வேண்டும். அதற்கான முயற்சிகள் அவசியம். அப்படியெனில், இலக்கை அடைவது நிச்சயம்.

    இன்று நிறைய வாய்ப்புகள். இளைஞர்கள் தங்களுக்கான பாடப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனமாக இருக்க வேண்டும். எந்தத் துறையில் தங்களுக்கு விருப்பம்; எதைக் கற்றுத் தேர்ந்தால் மிகச்சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற முடியும் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

    'என் நண்பன் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். அதனால் நானும் அதே கல்லூரியில் சேர்ந்தேன்' என்கின்றவன் இடறத்தானே செய்வான். பேருந்து நிலையத்தில் நிற்பவர்கள் எல்லோரும் ஒரே பேருந்தில் ஏறுபவர்கள் அல்ல. வெவ்வேறு நோக்கங்கள். வெவ்வேறு பயணங்கள்.

    நமக்கானதைப் பற்றிய புரிதல் நமக்கு முக்கியம். முன்னால் ஒருவன் தனக்கானத் தேடலில் நடக்கின்றான். எந்த சிந்தனையுமின்றி அவனுக்குப் பின்னால் நாம் நடந்து கொண்டிருந்தால், நம் வாழ்க்கை வீணில் கழியுமன்றி, நமக்கு வேறென்ன பயன்!

    தேனீக்கள் ஒருபோதும் குப்பைக்கூழங்களில் தேனைத் தேடுவதில்லை. தேன் இருக்கும் மலர்களைத் தேடிச் செல்லும் ஞானம் அதற்கு உண்டு. நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அது.

    நமது தேடல்கள் உன்னதமானவையாய் இருக்க வேண்டும். அவற்றின் உயரமே நம் வாழ்வின் உயரம். அதே சமயம், தேடலில் நிதானம் மிக அவசியம். அவசரப்படுபவர்களுக்கு பதற்றம் ஏற்படும். இதயம் படபடக்கும். உடல் தளரும். தடுமாற்றமே மிஞ்சும்.

    அந்தத் தடுமாற்றம்தான் குறுக்கு வழியில் மனதை இழுக்கும். நாளை மறுநாள் பெற வேண்டியதை, இன்றைக்கே அடையத் துடிக்கும்போதுதான் தேடலின் பாதை தவறாகிவிடுகின்றது.

    தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள விரும்பினான் ஓர் இளைஞன். அதற்குரிய பயிற்சியாளரை அணுகி, 'இக்கலையில் நான் தேர்ச்சி பெற எத்தனை வருடங்கள் தேவைப்படும்' என்று கேட்டான்.

    'பத்து வருடங்கள்' என்றார் பயிற்சியாளர்.

    அந்த இளைஞனின் முகம் சட்டென்று மாறியது. பயிற்சியாளர் சொன்னதில் அவனுக்கு உடன்பாடில்லை.

    மீண்டும் அவரிடம், 'இந்தக் கலையைத் துரிதமாகக் கற்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் கூடுதலாகவே பயிற்சி செய்வேன். அப்படியானால் எத்தனை வருடம் தேவைப்படும்' என்று கேட்டான்.

    'இருபது வருடங்கள்' என்றார் பயிற்சியாளர். அந்த இளைஞன் திடுக்கிட்டான்.

    'அவசரமும் ஆத்திரமும் உதவாது. இலக்கின் மீது உள்ள ஆர்வத்துடன் நிதானம், உறுதி ஆகியவை மிக முக்கியபானவை' என்றார் பயிற்சியாளர்.

    இன்று பலரிடம் இருக்கும் பிரச்சனை, நிதானமின்மை. வேகமாக சம்பாதிக்க வேண்டும்; அதிவிரைவாக முன்னேறிவிட வேண்டும் என்கிற எண்ணம்தான் அவர்களை உந்தித் தள்ளுகிறது. அதன் விளைவு? தவறான வழிகளில் பொருளீட்ட முற்படுகிறார்கள். லஞ்சம் வாங்கத் துணிந்துவிடுகிறார்கள்.

    தேடுதல் நிதானமாக இருந்தால் மட்டுமே, செல்கின்ற வழி நேர்மையானதாக இருக்கும். 'நல்ல பெயர்' என்பது தேடிக் கிடைப்பதல்ல; அது நம் செயல்களால் கிடைப்பது. நிம்மதி என்பது யாரிடமிருந்தும் வாங்கக்கூடியது அல்ல. அது நம் நல்லெண்ணங்களால் நமக்குள் வரக்கூடியது.

    இயற்கை எழில்சூழ்ந்த ஓர் அழகிய நகரம். அதன் முகப்பில், கையில் நீண்ட கோலுடன் ஒரு பெரியவர். அவர்தான் அந்நகருக்குக் காவல். ஒருநாள் வேற்றூரிலிருந்து பரபரப்புடன் ஒரு மனிதன் அங்கு வந்தான்.

    காவலாளியான அந்தப் பெரியவரிடம், 'ஐயா, இந்த ஊர் எப்படி, மக்கள் எப்படி?' என்று கேட்டான்.

    'ஏன் கேட்கிறாய். இங்கு குடிவரப் போகிறாயா?' என்று திருப்பிக் கேட்டார் பெரியவர்.

    'ஆமாம் ஐயா. தான் தற்போது வசிக்கின்ற ஊர் படுமோசம். நல்லவங்க யாரும் கிடையாது. எப்பவும் வம்பு வாதங்கள் சண்டைகள்தான். நிம்மதியே இல்ல. அதனாலதான் கேட்கிறேன், இந்த ஊர் எப்படி?'

    'இந்த ஊர் ரொம்ப ரொம்ப மோசம். சாதிச்சண்டை, மதச்சண்டை, கலவரம் எப்பவும் இருக்கும். நீயோ நிம்மதியைத் தேடுகிறாய். உனக்கு இந்த ஊர் சரிப்படாது' என்று சொல்லி அந்த மனிதனை அனுப்பிவிட்டார்.

    சிறிது நேரத்தில் இன்னொருவன் அங்கு வந்தான்.

    'ஐயா, நான் தொலைதூர ஊர்க்காரன். என் ஊர் மிகவும் நல்ல ஊர். மக்கள் நல்லவர்கள். ஆனால் தற்போது அங்கு பஞ்சம். அதனால் இங்கு வந்து வியாபாரம் பண்ண விரும்புகிறேன். இந்த ஊர் எப்படி?' என்று கேட்டான்.

    'அருமையான ஊர். அன்பான மக்கள். நீ இங்கு நல்லபடியா வியாபாரம் பண்ணி, மகிழ்ச்சியாய் வாழலாம்' என்று கனிவுடன் கூறினார் பெரியவர்.

    இதை கவனித்துக் கொண்டிருந்த ஒருவன், அந்தப் பெரியவரைப் பார்த்து, 'ஐயா, முதலில் வந்த நபரிடம் இது மோசமான ஊர் என்றீர்கள். ஆனால், பின்னர் வந்த மனிதனிடம் அருமையான ஊர் என்றீர்களே, ஏன்?' என்று வியப்புடன் கேட்டான்.

    'குறைகளையே காணும் மனதின் தேடல், சொர்க்கத்திலும் நிறைவைக் காணாது. நல்ல மனதின் தேடல் ஒருபோதும் சலித்துக் கொள்ளாது. அந்தத் தேடல்தான் நன்மை பயக்கும். மனம் எப்படியோ அப்படிதான் வாழ்க்கை' என்றார் பெரியவர்.

    மனதை நல்ல நிலையில் வைத்திருப்பவர்களுக்கே தேடல் சுகமானது. பணம், பொருள், புகழ், பதவி என நாம் எதை வேண்டுமானாலும் தேடலாம். எனினும், அனைத்திலும் உன்னதமான தேடல் எது தெரியுமா? ஞானத் தேடல்தான்!

    ஞானத்தைத் தேடிப் பெற்றுக் கொண்டால், மற்ற நலன்கள் யாவும் தாமாக நம்மை வந்தடையும். எனவே, நல்லவற்றை நாடுவோம்; ஞானத்தைத் தேடுவோம்.

    போன்: 9940056332

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உத்தவ் தாக்கரேவும் 100 தொகுதிகளுக்கு குறி வைத்துள்ளார்.
    • சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 80 தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிகிறது.

    மராட்டியம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு நவம்பர் 13-ந்தேதி (43 தொகுதி) நவம்பர் 20-ந்தேதி (38 தொகுதி) என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

    அரியானா, காஷ்மீர் மாநிலங்களில் பாஜகவும், காங்கிரசும் விறுவிறுப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதை மிஞ்சும் வகையிலான பரபரப்பை மராட்டிய மாநில தேர்தல் எதிர்நோக்கி காத்திருக்கிறது. மராட்டிய மாநிலத்தில் ஆட்சியை அவசியம் கைப்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தமான சூழ்நிலையில் பாஜக இருக்கிறது.

    நாட்டின் பொருளாதார தலைநகரமான மும்பையை கொண்டு இருக்கும் மராட்டியத்தை தன் வசம் வைத்திருப்பதை பாஜக கவுரவமாகவும் கருதுகிறது. உத்தரபிரதேசத்துக்கு அடுத்த படியாக அதிக எம்.பி.க்கள் தொகுதிகளை (48) வைத்திருக்கும் மாநிலம் என்பதாலும் மராட்டிய தேர்தலை பா.ஜ.க. தலைவர்கள் கவனமுடன் அணுகி உள்ளனர்.

    நாட்டின் மக்கள் தொகையில் 2-வது பெரிய மாநிலமான மராட்டியத்தில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 11 கோடியே 24 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 9 கோடியே 63 லட்சம் பேர் வாக்காளர்கள் ஆவார்கள். இவர்களது கையில்தான் மராட்டியத்தில் அடுத்து யார் ஆட்சியில் அமருவார்கள் என்பது அடங்கி உள்ளது.

    கடந்த 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த 3 சட்டசபை தேர்தல்களை ஆய்வு செய்தால் பாஜக கட்சி நல்ல வலுவுடன் இருப்பது தெரிய வரும். 2009-ல் 46 இடங்களிலும், 2014-ல் 122 இடங்களிலும், 2019-ல் 105 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றது.


    மராட்டியத்தில் காலம் காலமாக தாக்கரேயின் சிவசேனாவும், பாஜகவும் நல்ல நட்புடன் இருந்தனர். அந்த அடிப்படையில் தான் 2019-ம் ஆண்டு தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் 56 இடங்களில் வெற்றி பெற்ற சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவி கேட்டு பாஜகடன் உள்ள கூட்டணி உறவை துண்டித்தார்.

    அதோடு 54 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருந்த சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியில் அமர்ந்தார். ஆனால் 2022-ம் ஆண்டு சிவசேனா முக்கிய தலைவர்களில ஒருவரான ஏக்நாத் ஷிண்டே அந்த கட்சியை உடைத்து 39 எம்.எல்.ஏ.க்கள், 12 எம்.பி.க்களுடன் தனியாக பிரிந்தார். அது போல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித்பவார் அந்த கட்சியை உடைத்து 42 எம்.எல்.ஏ.க்களுடன் தனி கட்சி தொடங்கினார்.

    இதன் காரணமாக 2022-ல் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது. பாஜக ஆதரவுடன் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த நிலையில் தற்போது தேர்தல் வந்துள்ளது. மராட்டிய தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளாக அதிக எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கும் கட்சி என்ற அந்தஸ்துடன் இருக்கும் பாஜக இந்த தேர்தலிலும் அதிக எம்.எல்.ஏ.க்களை பெற வேண்டும் என்று திட்டம் தீட்டி உள்ளது.

    எனவே 288 இடங்களில் குறைந்தது 150 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. பா.ஜ.க.வுடன் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

    இந்த கூட்டணியின் முதல்- மந்திரி வேட்பாளராக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு மூலம் பாஜக கட்சி மராட்டியத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை உறுதிபடுத்தி இருக்கிறது. அது மட்டுமின்றி முதல்- மந்திரி வேட்பாளர் தேர்வு மூலம் காங்கிரஸ் கூட்டணிக்கு பாஜக மறைமுகமாக சவாலும் விட்டுள்ளது.


    மேலும் மராட்டிய தேர்தலில் அரியானா மாநில வெற்றி வியூக பாணியை கடைபிடிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அரியானாவில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்து வெற்றி கிடைத்தது.

    மராட்டியத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சுமார் 35 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். அவர்களை கவருவதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா திட்டமிட்டு செய்து வருகிறது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையிலான மராட்டிய மாநில பா.ஜ.க. வேட்பாளர் தேர்வில் 110 பேரின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இந்த 110 வேட்பாளர்களில் கணிசமானவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று அடுத்தடுத்து மேலும் பல அதிரடிகளை கொண்டுவர பாஜக கூட்டணி முடிவு செய்திருக்கிறது.

    இந்த கூட்டணிக்கு சவால் விடும் வகையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உருவாகி இருக்கிறது. அந்த கூட்டணியில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் உள்ள 48 எம்.பி. தொகுதிகளில் 30 தொகுதிகளை காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சரத்பவார் கூட்டணி கைப்பற்றியது. பாஜக, ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் கூட்டணிக்கு 17 இடங்களில்தான் வெற்றி கிடைத்தது.

    பாஜக தலைமையிலான கூட்டணியை விட இரட்டிப்பு வெற்றி பெற்றதால் ராகுல், உத்தவ் தாக்கரே, சரத்பவார் மூவரும் நம்பிக்கையுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மராட்டியத்தில் காங்கிரசை மீண்டும் அரியணையில் அமர வைக்க வேண்டும் என்பதில் ராகுல் மிக மிக தீவிரமாக உள்ளார்.

    சமீபத்தில் மராட்டிய காங்கிரசாருடன் ஆலோசித்த அவர் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 100 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதுபோல உத்தவ் தாக்கரேவும் 100 தொகுதிகளுக்கு குறி வைத்துள்ளார். சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 80 தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிகிறது.

    பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிகளில் சிவசேனாவும், திரிணாமுல் காங்கிரசும் ஒருவரை எதிர்த்து ஒருவர் முதல் முறையாக போட்டியிட உள்ளனர். அந்த வகையில் பாஜக, காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித்பவாரின் திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் திரிணாமுல் காங்கிரஸ் என 6 கட்சிகள் களம் இறங்குகின்றன.

    இது தவிர சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, ஆம்ஆத்மி, அசாதுதின் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, அம்பேத்கர் பேரன் பிரகாஷ், அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சி என்று பல கட்சிகள் உள்ளன. இதன் காரணமாக இந்த தடவை மராட்டிய மாநில தேர்தலில் பல கட்சிகளின் பலமுனை போட்டி உருவாகி இருக்கிறது.

    இந்த பலமுனை போட்டியால் வாக்குகள சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. மராட்டியத்தில் மொத்தம் உள்ள 9 கோடியே 63 லட்சம் வாக்காளர்களில் 4 கோடியே 97 லட்சம் வாக்காளர்கள் ஆண்கள். 4 கோடியே 66 லட்சம் வாக்காளர்கள் பெண்கள். இவர்களில் இளம் வாக்காளர்கள் சுமார் 2 கோடி பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர்களது வாக்குகள்தான் பல தொகுதிகளில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல மராட்டியத்தில் மொத்தம் 288 தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனி தொகுதிகள் 29 உள்ளன. மலைவாழ் மக்களுக்கான தனி தொகுதிகள் 25 உள்ளன. இந்த 54 தொகுதிகளும் மிக முக்கியம் என்று காங்கிரசும், பாஜகவும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளன.

    சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் உடைந்தாலும் கிராமங்கள் அளவில் அந்த கட்சிகளின் தொண்டர்கள் இன்னமும் உத்தவ் தாக்கரே, சரத்பவார் பக்கம்தான் இருப்பதாக ஒரு கருத்து உள்ளது. இதனால் இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று அந்த கட்சி தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அதே சமயத்தில் பாஜகவும் தொடர்ந்து நல்ல வலிமையுடன் இருப்பதால் போட்டி கடுமையாகி உள்ளது.

    இதை கருத்தில் கொண்டுதான் இந்தியா கூட்டணி தலைவர்கள் மராட்டியத்தில் சலுகை அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளாக அள்ளி வீச தொடங்கி உள்ளனர். பெண்களுக்கு மாதம் தோறும் பணம், இலவச மின்சாரம், இலவச கியாஸ் சிலிண்டர் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

    ஆனால் பாஜக பிரதமர் மோடியை முன்னிறுத்தி பிரசாரம் செய்கிறது. பெரிய அளவில் பாஜக இலவசங்கள் அறிவிக்கவில்லை. இதன் காரணமாக மராட்டியத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக மல்லு கட்ட தொடங்கி இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திவ்யாவுக்கு அவனை பார்த்ததும் பிடிக்கவில்லை.
    • பழைய நினைவுக்கு சென்ற திவ்யா, நினைவு கலைந்து பார்த்தாள்.

    அது திருநெல்வேலியிலுள்ள ஒரு பிரசித்தி பெற்ற இன்ஜினியரிங் காலேஜ். அந்த காலேஜில் எச்.ஆர். டிபார்ட்மெண்டில் (ஹியூமன் ரிசோர்சஸ் டிபார்ட்மென்ட்டில்) அட்மின் ஆபிசராக வேலை செய்பவள் திவ்யா.

    அதே கல்லூரியில் பிசிக்ஸ் டிபார்ட்மெண்டில் லெக்சரராக வேலை செய்பவள் மேரி. ஒரே கல்லூரி என்பதால் ஹாய் என ஆரம்பித்த நட்பு 'வாடி... போடி...' என நெருக்கமானது.

    மத்தியான லஞ்ச் ஷேர் செய்ய ஆரம்பித்து டூவீலரை ஷேர் செய்யும் அளவுக்கு நெருக்கமானது.

    இருவரும் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் போய் வரும் அளவிற்கு நெருக்கமானார்கள். ஒரு நாள், திவ்யாவிற்கு பார்த்தாலே பிடிக்காமல் போன அந்த டேவிட்டை சந்தித்தாள் மேரி.

    இவள் போன அன்று மேரியின் அம்மா மதிய சமையல் செய்து கொண்டு இருக்க, திவ்யாவும், மேரியும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க..

    திடீரென்று வாசலில் ஆட்டோ சத்தமும் தொடர்ந்து, வெளியே ஷூ கழட்டும் சத்தமும் கேட்டது.

    சற்று நேரத்தில், அச்சு அசலாய் 'பஞ்சு மிட்டாய் சேல கட்டி' பாட்டில் வரும் நடிகர் நெப்போலியன் உயரத்தில் கையில் சூட்கேஸ் மற்றும் முதுகில் லேப்டாப் பேக்குடன் உள்ளே நுழைந்தான் டேவிட்.

    அனிச்சையாய் திவ்யா எழுந்து நிற்க மேரி, "உட்கார்டி..." என இழுத்து திய்வாவை அமர வைத்தவள், டேவிட்டிடம் "என்னண்ணா பஸ் லேட்டா...? 9 மணிக்கு வர்ரேன்ன... 10.15க்கு வர...?" என கேட்க,

    "ஆமா... பஸ் லேட்..." என ஒற்றை வரியில் பதில் அளித்த டேவிட், திவ்யாவை மீண்டும் ஒரு லுக் விட்டு படியேறி மேலே சென்றான்.


    திவ்யாவுக்கு அவனை பார்த்ததும் பிடிக்கவில்லை. "இதென்ன கறுப்பா... 6 அடி உயரத்துல... இதுல முறுக்கி விட்ட மீசை வேற..." என யோசித்தவள், மேரியிடம் திரும்பி, "உங்க அண்ணன் இன்னிக்கு ஊர்ல இருந்து வரார்னு சொல்லவே இல்ல..." என கேட்க..

    "மறந்துட்டேன்டி... அவனை திருச்சிலே இருந்து திருநெல்வேலிக்கு மாத்திட்டாங்க... இனிமே அய்யாவுக்கு இங்கதான் வேலை... இனி எங்க வீட்டுல டி.வி. பாக்றதுலே எங்க ரெண்டு பேருக்கும் சண்டைதான்..." என கூறிய மேரி தொடர்ந்து,

    "ஆமா... நீ ஏண்டி எங்க அண்ணனை பார்த்து பேஸ்து அடிச்சு நிக்கிற..." என கேட்க,"எனக்கு உங்க அண்ணனை பார்த்தாலே பிடிக்கலை..." என சொல்ல நினைத்தவள் அதை தவிர்த்து, "ஒண்ணுமில்லையே... திடீர்ன்னு பார்த்தனா... அதான்..."என இழுக்க, "கூச்சமாக்கும்..." என அவள் தோளை இழுத்து சிரித்தாள் மேரி.

    டைனிங் டேபிள்.

    மேரியின் அம்மா சமையல் தனி ருசி. எப்போது, திவ்யா மேரியின் வீட்டிற்கு வந்தாலும், மேரியின் அம்மா, திவ்யாவுக்கு பிடித்த மெனுவை செய்து விடுவாள்.

    அன்றும் மதிய சாப்பாட்டை அப்படி சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது தான் அந்த 'கிட்டார்' வாசிக்கும் சத்தம் கேட்டது. அருமையான டியூன். அதை கேட்க கேட்க ஏதோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

    "யாருடி அது கிட்டார் வாசிக்கிறது..." திவ்யா மேரியிடம் கேட்டாள்.

    "வேற யாரு... என் தத்து புத்திரன்தான். ஊருலேருந்து வந்து 'ப்ரெஷ்அப்' ஆயிட்டு வரேன்னு போனான்... இந்தா... கிட்டார் எடுத்துட்டு உட்கார்ந்துட்டார்ல... இனி அய்யா மூணு மணிக்குத்தான் கீழ வருவாரு..."என மேரியின் அம்மா அங்கலாய்க்க,

    அப்போது தன் ரூமிலிருந்து வெளிப்பட்ட மேரியின் அப்பா - "விடு லிசா... வீட்டுக்கு வந்திருக்க பொண்ணு முன்னாடி பையனை பத்தி உயர்வா சொல்லாம... இப்படி அங்கலாய்கிறீயே...?" என்றவர், திவ்யாவிடம் திரும்பி, "யம்மாடி... என் பையன் டேவிட்டுக்கு மியூசிக்குனா ரொம்ப இஷ்டம்... ஒரு இசைக்குழு கூட வெச்சிருக்கான்.

    இயக்குநர் A. ெவங்கடேஷ்

    இயக்குநர் A. ெவங்கடேஷ்


    ஓய்வு நேரங்கள்ல இசைக்குழுவோட கச்சேரி பண்றதுதான் பொழுதுபோக்கே! கேள்வி பட்டிருப்பியே...'கீதாலயா இசைக்குழு' - இவன் நடத்துறதுதான்.."என கூற அவரையே ஆச்சரியமாய் பார்த்தாள் திவ்யா.

    தொடர்ந்து மேரியின் அப்பா, "ஏதோ படிச்ச படிப்புக்கு ஒரு பிரைவேட் கம்பெனியில் ஹெச்.ஆராக ஆகி, ஹியூமன் ரிசோர்ஸ்ல அட்மீனா வேலை பார்க்கிறானே தவிர... மனசெல்லாம் இசை மேலத்தான்... எப்படி கிடார்ல விளையாடுறான் பாரு..." என்றவர், தன் மனைவி லிசாவிடம் "சோத்த போடுடி... பசிக்குது..." என அவரும் டேபிளில் அமர்ந்தார்.

    'என்னது? அவனும் ஹெச்.ஆர்.டிபார்மெண்ட்லதான் வேலை பார்க்கிறானா... எனக்கும் இசைன்னா பிடிக்கும்... டேவிட்டுக்கும் இசை பிடிக்கும் கிறாங்க... என்ன இது ஒற்றுமை...' என தனக்குள் திவ்யா யோசிக்க...

    அவள் யோசிப்பதையே கண் கொட்டாமல் பார்த்த மேரி "என்னடி... ஆஜானுபாகுவா ஆறடி உயரமும், மிலிட்டரிக்காரன் மாதிரி முறுக்கிவிட்ட மீசையுமா பார்த்த ஆளுக்குள்ள இப்படி ஒரு மென்மையான இசை ஆர்வமான்னா யோசிக்கிறியா...?"

    மேரி கேட்க... 'இல்லை' என தலையாட்டினாள், உள்ளுக்குள்ள 'ஆமா ' என சொல்ல நினைத்து!

    இப்படித்தான் நடந்தது - அவளுக்கும் டேவிட்டுக்குமான முதல் சந்திப்பு.

    'க்ரீச்' என்ற சத்தத்துடன் கார் நின்றது. கோவில் வாசலில் அவள் அண்ணன் மிரட்டிவிட்டு போன பிறகு, பழைய நினைவுக்கு சென்ற திவ்யா, நினைவு கலைந்து பார்த்தாள்.

    வந்து நின்ற கார்ல இருந்து திவ்யாவின் அம்மாவும், அப்பாவும் இறங்கினர். கழுத்தில் தாலியுடன் தன் மகள் டேவிட் மற்றம் நண்பர்களுடன் நிற்பதை பார்த்தவர்கள், அவர்களை நோக்கி வேகமாய் வந்தனர்.

    அப்பாவும் அம்மாவும் தன்னை நோக்கி வருவதை பார்த்து சற்று பதட்டம் அடைந்த திவ்யா, பக்கத்தில் இருக்கும் டேவிட்டை பார்க்க, டேவிட்டும் அவளை குழப்பமாக பார்க்கிறான் .

    "இவங்க எப்படி நாம இந்த கோவிலில் இருக்கும்னு தெரிஞ்சு வந்தாங்க?" டேவிட் கேட்க, உடனே செந்தில் "நான்தான் அவங்களுக்கு வாட்ஸப்ல மெசேஜ் போட்டேன்... உங்க அண்ணனுக்கு நீ இந்த கோவிலில் இருக்கீங்கன்னு அனுப்புன இல்ல... அப்பவே இவங்களுக்கும் மெசேஜ் போட்டு விட்டேன்..."- என கூற ,

    அருகில் வந்த திவ்யாவின் பெற்றோர் ,திவ்யா கழுத்தில் புது தாலியுடன் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். மகளை ஆதரவாய் கட்டி அணைத்த திவ்யாவின் அம்மா ராஜேஸ்வரி, "திவ்யா... நாங்க திருச்செந்தூருக்கு போயிட்டு இருக்கும்போது, நல்ல வேலையா செந்தில் தம்பி கல்யாணம் திருச்செந்தூர் கோவிலில் இல்ல.. இந்த கோவிலுக்கு வந்துட்டோம்னா மெசேஜ் அனுப்புச்சு.. நாங்க வண்டிய திருப்பி இங்க வர்றதுக்குள்ள நீ கல்யாணத்தையே முடிச்சிட்ட..."-எனக்கூற,

    "அதான்... அவன் அண்ணன் துரத்திட்டு வந்திருப்பான் ! அவளுக்கு என்ன பண்ணனும்னு தெரிஞ்சிருக்காது... டக்குனு இந்த கோவில் வாசல நிப்பாட்டி, கல்யாணத்த முடிச்சுட்டா...! அப்படித்தானம்மா?" என அவள் அப்பா கேட்க, "ஆமாப்பா..." என தலை அசைத்தாள திவ்யா.

    "சார்... நல்ல குடும்பம் சார் உங்க குடும்பம்! ஒரு பக்கம் அண்ணன் வில்லனா மாறி,' தங்கச்சி இன்னொரு மதத்துக்காரன கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு 'குறுக்க கட்டைய போட்டுக்கிட்டு எப்படா சண்டை போடுவேன்னு திரிகிறான்... அவள பெத்த நீங்க ரெண்டு பேரும் அண்ணனுக்கு தெரியாம சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க... இந்த கதை எங்க போய் முடியுமோ" என கூறுகிறான் செந்தில்.

    பக்கத்துல வந்த லாரன்ஸ், "டேய் திவ்யாவோட அப்பா ஆரம்பத்துல இந்த கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதுக்கப்புறம் திவ்யா அம்மா கூட சேர்ந்து சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாரு... ஆனா திவ்யாவோட அண்ணன் கூட சேர்ந்துக்கிட்டு லவ்வ எதிர்க்கிற மாதிரி நடிச்சுக்கிட்டு அதே சமயத்துல அவ அண்ணனுக்கு தெரியாம திவ்யா காதலுக்கும் இந்த கல்யாணத்துக்கும் சப்போர்ட் பண்ணாங்களே... அதுதாண்டா அவங்க பண்ண டிராமாவுலே ஹைலைட்...!" எனக் கூற ,எல்லோரும் சிரிக்கிறார்கள்.

    "அப்புறம் என்னங்க... கல்யாணம் முடிஞ்சாச்சு... வாங்க பக்கத்து ஓட்டல்ல போய் காலைல டிபன் முடிச்சுடுவோம்..."- என லாரன்ஸ் கூற, எல்லோரும் அங்கிருந்து நகருகிறார்கள்.

    ஆனால் முகம் நிறைந்த வன்மத்துடனும் தன்னை எதிர்த்து தனக்குப் பிடிக்காத மதத்து காரனை திவ்யா கல்யாணம் முடித்து விட்டாள் என்ற கோபத்துடனும் தன் சகாக்களுடன் ஒரு மதுபான கடைக்குள் நுழைந்து, வாங்குன சரக்கு பாட்டிலை திறந்து தண்ணி கூட கலக்காமல் 'கடகட 'என்று குடித்தான் திவ்யாவின் அண்ணன் பெருமாள்.

    பக்கத்தில் இருந்த பெருமாளின் நண்பன் "இனிமே என்ன பெருமாள் பண்ண போற ?" என கேட்க," கல்யாணம் முடிஞ்சாலும் அவங்க இந்த ஊர்ல தான வாழனும்... எப்படி நிம்மதியா வாழ்கிறார்கள் என நானும் பார்க்கிறேன்..."- எனக்கூறி, மீண்டும் சரக்கை மடமட என பெருமாள் குடிக்க ,

    இப்படி வன்மத்துடன் அண்ணன் காத்துக் கொண்டிருக்கிறான் என தெரியாமல் கல்யாணத்துக்கு ஒத்துழைத்த டேவிட் நண்பர்களுடனும், அம்மா அப்பாவுடனும் சந்தோஷமாக டேவிட் அருகில் அமர்ந்திருக்க சந்தோசமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.

    (தொடரும்) E-Mail: director.a.venkatesh@gmail.com

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெற்றோர் மிகுந்த பக்தியோடு சிவலிங்கத்தை விழுந்து வணங்கி பட்டினத்தாராகிய லிங்கத்திற்கு ஒரு கோயில் அமைத்தார்கள்.
    • உண்மையில் யோகிகளும் சித்தர்களும் உடலை நீக்குவது மரணமல்ல. சாகாநிலை அது.

    கடவுளையே தீவிரமாக பக்தி செய்பவர்கள் கடவுளுடன் கலந்து கடவுளாகவே மாறி விடுகிறார்கள். ஒவ்வொரு மகானும் கடவுளுடன் கலக்கும் அவர்கள் வாழ்வின் நிறைவுத் தருணம் பல வகைகளில் அமைகிறது.

    மனித வடிவெடுத்து வந்த கடவுளான ராமபிரான் சரயூ நதியில் கலந்து வைகுந்தம் சென்றார். ராமன் வைகுந்தம் செல்வதற்கு முன்பாகவே நிலமகளான சீதை தான் எந்த நிலத்திலிருந்து பிறந்தாளோ அந்த நிலத்திற்குள் புகுந்து பின் விண்ணை அடைந்தாள்.

    திருமாலின் இன்னோர் அவதாரம் ஸ்ரீகிருஷ்ணர், மரத்தில் அமர்ந்திருந்த அவரின் வெண்ணிறப் பாதங்களைப் பார்த்துப் புறா என எண்ணித் தவறுதலாக ஜரா என்ற வேடன் அம்பெய்ய விண்ணில் கலந்தார் கிருஷ்ணர். இவையெல்லாம் மனித வடிவெடுத்த கடவுளர்கள் மறுபடி விண்ணுலகம் போன சரித்திரம்.

    அதுபோலவே பக்தர்களும் வாழ்வின் நிறைவில் கடவுளுடன் கலந்து கடவுளாகவே மாறுகிறார்கள்.

    ஆண்டாள் திருவரங்கத்தில் அரங்கனுடன் கலந்து மறைந்ததையும் மாணிக்க வாசகர் சிதம்பரம் நடராஜர் சன்னிதிக் கருவறையில் வெட்டவெளியில் பலர் முன்னிலையில் கலந்து மறைந்ததையும் தென்னக வரலாறு சொல்கிறது.

     

    வட இந்தியாவில் கண்ணன் மேல் பக்தி செய்த மீரா, இறுதியில் கண்ணனுடனேயே கலந்து மறைந்ததை மீராவின் திருச்சரிதம் தெரிவிக்கிறது.

    மகான்கள் பலர் விந்தையான முறைகளில் தங்கள் வாழ்வை நிறைவு செய்திருக்கிறார்கள். கபீர் தாசர் சித்தி அடைந்த பின் அவர் உடலை ஒரு போர்வையால் மூடி வைத்திருந்தார்கள்.

    சற்று நேரம் கழித்து அந்தப் போர்வையைத் திறந்து பார்த்தபோது அந்த இடத்தில் சடலத்திற்கு பதிலாக ரோஜா மலர்களே நிறைந்திருந்தன என்ற செய்தி கபீர்தாசர் வரலாற்றில் வருகிறது.

    பட்டினத்தார் சிவனுடன் கலந்து சிவமாகவே மாறிய அவரின் கடைசித் தருணம் ஆச்சரியகரமானது. ஒருநாள் சென்னையில் திருவொற்றியூர்க் கடற்கரையில் சிறுவர்களுக்கு விளையாட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தார் அவர்.

    அவர் காண்பித்த சித்து விளையாட்டைக் கள்ளம் கபடமில்லாத சிறுவர்கள் மகிழ்ச்சியோடு அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

    தன்னை ஒரு கூடையால் மூடச் சொல்வார். சிறுவர்கள் அவ்விதமே மூடுவார்கள். பின் வேறோரிடத்தில் இருந்து தோன்றுவார் அவர். இப்படிப் பலமுறை நிகழ்ந்தது.

    ஒருமுறை தன்னை மூடச் சொன்ன அவர் எந்த இடத்திலிருந்தும் நெடுநேரம் தோன்றவே இல்லை. சிறுவர்கள் திடுக்கிட்டார்கள். பின் சந்தேகத்தோடு மெல்லக் கூடையைத் திறந்து பார்த்தார்கள்.

    உள்ளே பட்டினத்தார் இல்லை. ஆனால் அங்கே ஒரு சிவலிங்கம் மண்ணில் முளைத்து கம்பீரமாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. ஓடோடிச் சென்று தங்கள் தாய், தந்தையரை அழைத்துவந்து விவரம் சொன்னார்கள்.

    பெற்றோர் மிகுந்த பக்தியோடு சிவலிங்கத்தை விழுந்து வணங்கி பட்டினத்தாராகிய லிங்கத்திற்கு ஒரு கோயில் அமைத்தார்கள். அப்படி எழுந்ததுதான் சென்னையில் உள்ள பட்டினத்தார் சமாதிக் கோயில்.

     

    மகான் ஸ்ரீஅரவிந்தர் சித்தி அடைந்தபோது அவர் மருத்துவ ரீதியாக இறந்துவிட்டார் என்றே மருத்துவ அறிக்கை சொல்லிற்று. ஆனால் மருத்துவர்களே பார்த்து ஆச்சரியப்படும் ஒரு விஷயம் அரவிந்தரின் உடலில் நிகழ்ந்தது.

    சுமார் 111 மணிநேரம் ஸ்ரீஅரவிந்தரின் உடலில் அவர் காலமானதற்கான எந்தப்புற அறிகுறியும் தென்படவில்லை. அது மட்டுமல்ல, ஒரு பொன்மயமான ஒளி அந்த உடலைச் சுற்றி மெலிதாகப் படர்ந்திருந்தது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ஏழை எளியர்வர்கள் பலர், அந்த ஒளியை வியப்போடு தரிசித்துச் சென்றார்கள்.

    அரவிந்தரின் பொன்னுடலை சமாதி செய்விக்க வேண்டுமே? அவர் உடலைச் சுற்றியிருந்த பொன்னொளி விலகுவதற்காக பாண்டிச்சேரி அன்னை காத்திருந்தார். அன்னையின் மனத்தில் அடக்கம் செய்விக்கலாம் என உத்தரவு கிடைத்த பின்னரே அவர் அரவிந்தரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்தார்.

    அரவிந்தரின் உடல் மரப் பேழையில் வைத்து மண்ணில் இறக்கப்பட்டது. அப்போது, `ஸ்ரீஅரவிந்தரே! தெய்வ சக்தியை மண்ணிற்குக் கொண்டுவர வேண்டும் என வாழ்நாள் முழுதும் உழைத்தீர்களே, இப்போது உடலைவிட்டு நீங்கி விட்டீர்களே? இனி நீங்கள் கனவுகண்ட அந்தச் செயல் எவ்விதம் நடக்கும்?` என ஓர் அன்பர் கண்ணீரோடு வேண்டினார்.

    அப்போது `ஹொபே ஹொபே ஹொபே` என அவர் காதில் ஸ்ரீஅரவிந்தரின் குரல் தெள்ளத் தெளிவாய்க் கேட்டது. ஹொபே என்ற வங்காளச் சொல்லுக்கு நடக்கும் என்பது பொருள். அரவிந்தர் கண்ட கனவெல்லாம் நனவாகும் என அவர் புரிந்துகொண்டார்.

    ரமணர் சித்தி அடைந்த நேரம்: 1950 ஏப்ரல் 14 இரவு 8.47 மணி. மிகச் சரியாக அதே நேரத்தில் ஆகாயத்தில் ஒரு வால்நட்சத்திரம் கீழைத் திசையிலிருந்து புறப்பட்டுப் பெரும் ஒளியோடு விண்ணில் சென்று மறைந்தது. இந்த அதிசய நிகழ்வை எழுத்தாளர் கல்கி தம் கட்டுரையொன்றில் பதிவு செய்திருக்கிறார்.

    பரமஹம்ச யோகானந்தர் தம் உடலை விட்டு நீங்கும்முன் அவ்விதம் நீங்கப் போவதை முன்னரே அறிவித்தார். அப்பொழுது, அவர்முன் சுமார் எழுநூறு பேர் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மகாசமாதி அடைந்தார்.

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    தான் உடலை விடும் முன்பே, 'நான் உயிரை விடப்போகிறேன்' என்று அவர் அறிவித்திருந்த ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் எனப் பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர். வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

    பின்னர், 'இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்' என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து, அவ்விதம் அமர்ந்தவாறே தன் உடலை நீத்தார் அவர் மருத்துவர்களுக்கு விளங்கிக் கொள்ள இயலாத ஒரு புதிராக இருந்தது அந்நிகழ்வு. மருத்துவ விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உடலை விட்டு உயிர் பிரியும்.

    இதயமோ, நுரையீரலோ, வேறு முக்கியமான ஓர் உறுப்போ பழுதுபட்டால் உயிர் நீங்கும் என்பதுதான் மருத்துவ விஞ்ஞானம் சொல்வது.

    ஆனால் ஆரோக்கியமாக எல்லோரிடமும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும் ஒருவர், 'இப்போது நான் போகப்போகிறேன்' என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டு, தம் உடலை விட்டு நீங்குவதை அவர்கள் எங்கும் அதுவரை பார்த்திருக்கவில்லை.

    அவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? உலகம் காரண காரிய அறிவை மட்டுமே நம்புகிறது. ஆனால் அதைத் தாண்டிய நம் அறிவுக்கு எட்டாத விஷயங்கள் பல உண்டு. அதைப் பலர் அறிய வேண்டும் என அவர் நினைத்திருக்க வேண்டும்.

    தான் உடலை நீக்கிய நிகழ்வின் மூலம் அறிவுக்கு எட்டாத ஆன்மிகத்தை அவர் உறுதிப்படுத்தினார்.

    அவர் உடலை உகுத்த பின்னரும் நூற்றுப் பதினோரு மணிநேரம் அந்த உடல் எந்தவித மாறுபாட்டையும் புலப்படுத்தாமல் உயிரோடிருந்தபோது எப்படி இருந்ததோ அப்படியே வாடாமல் வதங்காமல் இருந்தது என்பதும் ஆச்சரியமே.

    பரமஹம்ச யோகானந்தரின் குருவான யுக்தேஸ்வரகிரி மகராஜும் உடலைத் துறக்கப் போவதை முன்கூட்டியே அறிவித்தார்.

    அவர் உடலைத் துறந்தபின் அடுத்த நாளே தன் சீடர் பரமஹம்ஸ யோகானந்தருக்கு உடலோடு காட்சி கொடுத்தார் என்பதும் விந்தைதான்.

    ஒவ்வொரு யோகியும் தன் உடலைக் கைவிட்டு விண்ணில் கலக்கும் நிலை ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. மகா சமாதி என்று அந்த நிகழ்வைக் குறிப்பிடுகின்றனர்.

    ஒரு சட்டையைக் கழற்றுவதைப் போலத் தங்கள் உடலை மகான்கள் நீக்கிவிடுவர். குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே என்று சொல்கிறது வள்ளுவம். உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பு, முட்டையைத் தனியே விட்டுவிட்டு ஒரு பறவை வெளியேறுவதைப் போன்றதுதான் என்கிறார் வள்ளுவர்.

    உண்மையில் யோகிகளும் சித்தர்களும் உடலை நீக்குவது மரணமல்ல. சாகாநிலை அது. மரணமில்லாப் பெருவாழ்வு என்றே அந்நிலை சொல்லப்படுகிறது. அதாவது அவர்கள் செயலாற்றுவதற்கு இனி அவர்களின் உடல் தேவையில்லை. அவ்வளவுதான். மற்றபடி அவர்கள் செயல்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

    வடலூர் வள்ளல் பெருமான் தம் கடைசிக் காலத்தில் பல அரிய சொற்பொழிவுகளை ஆற்றியதோடு முக்கியமான அறிவுரைகளையும் அடியவர்களுக்கு வழங்கினார். பின்னர் இறுதியாய்ப் படுக்கையில் மெல்லச் சாய்ந்துகொண்டார்.

    தமது உருவம் எவருக்கும் புலப்படாதிருந்து சில காலத்திற்குப் பிறகு பிரணவ தேகமாக குருநிலை பெறும் என்றும் அதன்பின்னர் சித்துகள் புரியும் என்றும் குறிப்பிட்டார்.

    முன்னரே அவர் உத்தரவிட்டபடி, அவர் தங்கியிருந்த அறையின் கதவுகள் மூடப்பட்டன. சாளரங்களும் மூடப்பட்டன. அறையில் காற்றுப் போவதற்கும் இடமில்லை.

    சிறிதுகாலம் சென்றபின் கதவைத் திறந்து பார்த்தபோது, அங்கு வெறும் வெளிதான் இருந்தது. வள்ளலாரின் உருவத்தின் சின்னச் சுவடு கூட அங்கே தென்படவில்லை. வள்ளலார் தாம் சொன்னபடியே தம் உடலைப் பஞ்ச பூதங்களில் கரைத்து, உலகெங்கும் நிறைந்துவிட்டார்.

    மகான்கள் கடவுளைப் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து கடவுள் சக்தியைத் தங்களில் இறக்கிக் கொண்டு கடவுளாகவே மாறி விடுகிறார்கள். அவர்கள் உடலை உகுத்தாலும் அந்த உடலில் தங்கியிருந்த தெய்வ சக்தி உடலிலிருந்து வெளிப்பட்டு எங்கும் நிறைகிறது.

    அந்த தெய்வ சக்தி, குறிப்பிட்ட மகானின் அடியவர்களைக் கவசமாய் இருந்து காக்கிறது. மகான்களைப் பூஜித்து அவர்கள் அருளை வேண்டிப் பெறுவதன் மூலம் நம் மனம் சாந்தி அடைகிறது.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலகம் முழுவதும் 73.3 கோடி மக்கள் பசி, பட்டினியை எதிர்கொள்கின்றனர்.
    • 280 கோடி மக்களால் சத்தான உணவுகளை வாங்க முடியவில்லை

    உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.

    உலகம் முழுவதும் பசி, பட்டினியை போக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தான் 1979 ஆம் ஆண்டிலிருந்து உலக உணவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டிற்கான உலக உணவு தினத்தின் கருப்பொருள் "ஆரோக்கியமான நாளைக்காக இன்றைய பாதுகாப்பான உணவு" என்பதாகும்.

    உலகம் முழுவதும் 73.3 கோடி மக்கள் பசி, பட்டினியை எதிர்கொள்வதாகவும் கிட்டத்தட்ட 280 கோடி மக்களால் சத்தான உணவுகளை வாங்க முடியவில்லை என்று ஐநா சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு இந்த நிலைமை மோசமடைந்துள்ளது.

    உலக உணவு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், நடப்பு ஆண்டிற்கான உலக பட்டினி குறியீடு அறிக்கையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கையை விட மோசமான இடத்துக்கு இந்தியா சென்றுள்ளதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

    19 வது உலக பட்டினி குறியீட்டு அறிக்கையான இதில் இந்தியா 105 ஆவது இடத்தில் உள்ளது. அதன்படி தீவிரமான பசி- பட்டினி பிரச்சனைகள் கொண்ட நாடாக இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையின் மூலம் இந்தியாவில் குழந்தைகளிடையே, ஊட்டச்சத்துக் குறைபாடு பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. குழந்தை வளர்ச்சி குன்றிய விகிதம் 35.5 சதவீதமாகவும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாகவும் ஊட்டச்சத்து குறைபாடு 13.7 சதவீதமாக உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் ஏதேனும் ஒரு அங்கத்தில் டாட்டாவின் தயாரிப்பு இருக்கிறது என்பது வெளிப்படை உண்மையாகும்.
    • வாழ்நாளில் திருமணம் என்ற எண்ணத்திற்கே அவர் இடம் வைக்கவில்லை.

    இந்திய தொழில் துறையை உலக அரங்கில் உயரத்தில் ஏற்றிய தொழிலதிபரும், ஆகச் சிறந்த மனிதப் பண்புகளைக் கொண்டிருந்தவரும், அனைத்துயிர்களையும் நேசித்தவரும், சமூக சேவையில் உளமார ஈடுபட்டவருமான ஒரு உத்தமர் ரத்தன் டாடா அவர்கள். இவரது வாழ்க்கை அனைவராலும் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டிய அற்புதமான ஒரு வாழ்க்கையாகும்.

    பிறப்பும் இளமையும்:

    டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஷெட்ஜி நுசர்வாஞ்சி டாடாவின் மகனான ரத்தன்ஜி டாடா அவர்களால் தத்தெடுக்கப்பட்ட நேவல் டாடாவின் மகனான ரத்தன் டாடா 1937-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி மும்பையில் பிறந்தார்.

    இளமையில் கடுமையான துன்பங்களை இவர் சந்திக்க வேண்டியதாக இருந்தது. இவரது பத்தாவது வயதில் பெற்றோர்கள் பிரியவே, இவர் பாட்டி நவஜ்பாய் டாடாவின் அரவணைப்பில் வளர்ந்தார்.

    தொழிலில் முனைப்பு:

    1962-ல் கட்டிடக் கலையில் பட்டத்தைப் பெற்ற இவர் டாட்டா ஸ்டீலில் வேலை பார்க்க ஆரம்பித்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த அவருக்கு ஐபிஎம் நிறுவனத்தில் வேலை தயாராகக் காத்திருந்தது. அதை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு டாட்டா ஸ்டீலில் வேலை பார்க்க விண்ணப்பித்தார். அதற்கு தன்னைப் பற்றிய விவரங்களை தானே ஒரு டைப்ரைட்டரில் அடித்து விண்ணப்பித்து வேலையைப் பெற்றார்!

    அடித்தளத்து தொழிலாளர்களுடன் இணைந்து அவர்களுடன் வேலை பார்க்க ஆரம்பித்த இவருக்கு தொழிலாளர்களின் கஷ்டங்களும் புரிந்தன; பணியில் உள்ள நுட்பங்களும் தெரிந்தன.

    ஒரு முறை நிறுவனத்தின் மேலாளர்களுடன் மும்பையிலிருந்து நாசிக்கிற்குக் காரில் பயணப்பட்டபோது காரின் ஒரு டயர் பஞ்சரானது. கார் நிறுத்தப்பட்டது. டயரை சரிபார்த்துப் பொருத்தும் அந்த இடைப்பட்ட நேரத்தில் மேலாளர்கள் ஓய்வாக அரட்டை அடிக்க ஆரம்பித்தனர். அப்போது அவர்கள் தங்கள் கூட இருந்த சேர்மனைக் காணோமே என்று திடுக்கிட்டுத் தேட ஆரம்பித்தனர். ரத்தன் டாடா டயரைப் பொருத்திக் கொண்டிருந்த டிரைவர் பக்கத்தில் இருந்து அவருக்கு உதவி செய்து கொண்டிருந்ததைப் பார்த்து நெகிழ்ந்தனர்.

    படிப்படியாக தொழிலகத்தில் உயர்ந்த ரத்தன் டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பை 1991-ம் ஆண்டில் ஏற்றார். 2012 முடிய அந்தப் பொறுப்பைத் திறம்பட வகித்தார்.

    உலகளாவிய விதத்தில் உயர்வு:

    இவரது தலைமைப் பொறுப்பில் டாட்டா குழுமம் உலகம் போற்றும் விதத்தில் உயர்ந்தது. இதற்கான காரணம் இவரது அயராத உழைப்பும், தீர்க்கதரிசனப் பார்வையும், தீவிர நாட்டுப்பற்றும், மேதைத் தன்மையுமே காரணங்களாக அமைந்தன.

    2007-ல் டாட்டா நிறுவனம் பிரிட்டனின் ஸ்டீல் நிறுவனமான கோரஸை வாங்கியது.

    1999-ல் அவர் போர்டு நிறுவனத்தைப் பெற முயற்சி எடுத்தபோது போர்டின் தலைவரான பில் போர்டு, "உங்களுக்கு எதுவுமே தெரியாதே! எதற்காக பயணிகளின் காரைச் செய்யும் பிரிவை ஆரம்பித்தீர்கள்?" என்று அவரிடம் கூறினார். இதை மனதில் உள்வாங்கிக் கொண்ட டாட்டா 2008, ஜூன் மாதம் பொருளாதார நெருக்கடியால் போர்டு திவாலாகும் நிலைமையில் இருந்தபோது போர்டின் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவரை வாங்க முன் வந்தார். அப்போது பில் போர்டு மனதார நன்றி தெரிவித்து "நீங்கள் எனக்கு ஒரு பேருதவியைச் செய்து விட்டீர்கள்" என்று நெகிழ்ந்து கூறினார். "ஒன்றுமே தெரியாதவர்', 'எல்லாம் தெரிந்தவரைக்' காப்பாற்றிய இந்த சம்பவம் அவரது பெருந்தன்மையைக் காட்டியது!

     

    டாட்டா குழுமம்:

    உப்பிலிருந்து உயரப்பறக்கும் விமானம் வரை டாட்டா குழுமம் தொடாத துறைகளே இல்லை எனலாம். ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் ஏதேனும் ஒரு அங்கத்தில் டாட்டாவின் தயாரிப்பு இருக்கிறது என்பது வெளிப்படை உண்மையாகும். டாட்டா ஸ்டீல், டாட்டா கெமிக்கல்ஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (கணினித் துறை), டாட்டா மோட்டார்ஸ், டைடான் கம்பெனி, இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி, டாட்டா பவர், ஏர் இந்தியா, டாட்டா காபிடல், டாட்டா கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களின் முதலீடு சுமார் 29 டிரில்லியன் ரூபாய் ஆகும். (ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பின்னால் 12 சைபர்களைப் போட்டு வரும் எண்ணாகும்) இந்த நிறுவனங்களில் சுமார் பத்து லட்சத்து இருபத்தியெட்டாயிரம் பேர்கள் வேலை பார்க்கின்றனர்.

    21 வருடங்களில் தன் உழைப்பாலும் திறமையாலும் டாட்டா நிறுவனங்களை உலக தரத்திற்கு நிகராக உலகில் பேசப்படும் குழுமமாக ஆக்கினார் ரத்தன் டாடா. குழுமங்களின் வருமானத்தை தனது 21 வருட காலப் பணியில் நாற்பது மடங்கு உயர்த்திக் காட்டினார் அவர்.

    அவர் தலைமையில் நூறு நாடுகளில் தனது கிளைகளை அமைத்தது டாட்டா குழுமம்.

    'எதையும் இந்தியாவில் தயாரித்துக் காட்டு" என்பது அவரது தேசபக்தியின் அடிப்படையில் எழுந்த ஒரு லட்சியமாகும்!

    அவர் ஒரு திறமையான பைலட்டும் கூட. 2007-ல் F 16 பால்கன் விமானத்தில் பறந்த முதல் இந்தியராக அவர் திகழ்ந்தார்.

    மும்பை பயங்கரவாதிகளின் தாக்குதல்:

    2008 நவம்பர் 26-ம்தேதி மும்பை பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. 166 பேர்கள் கொல்லப்பட்டனர். டாடா குழுமத்தில் ஒன்றான தாஜ்மஹால் பாலஸ் ஹோட்டலில் 33 பேர்கள் தாக்குதலுக்கு உள்ளாயினர், இறந்தனர்.

    நேரடியாக தனது காரில் பாதுகாவலர் யாருமின்றி துணிச்சலுடன் ரத்தன் டாடா ஓட்டலுக்கு வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார்.

    தாக்குதலுக்கு உள்ளானவர்களின் குடும்பத்தினருக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதற்குமான உதவியை அவர் தந்தார்.

    நாய்களின் மீது பேரன்பு:

    நாய்களின் மீது பரிவும் பேரன்பும் கொண்டிருந்தார் ரத்தன் டாடா. பிரம்மாண்டமான நட்சத்திர ஹோட்டலான தாஜ்மஹாலுக்கு வருகை தந்த ஒருவர் அங்கு பிரதான வாயில் அருகே நின்று கொண்டிருந்த தெருநாய் ஒன்றைப் பார்த்து ஆச்சரியம் கொண்டார்.

    "இது ஏன் இங்கு இருக்கிறது?" என்று ஆவல் கொண்டு கேட்டபோது அவருக்குக் கிடைத்த பதில் : "இந்த ஓட்டல் கட்டும் ஆரம்ப காலத்திலிருந்தே இது இங்கு இருக்கிறது. இதை ஒருவரும் தொந்தரவு செய்யக் கூடாது என்பது டாடாவின் உத்தரவு"

    2018-ல் டாட்டாவிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற விருதான வாழ்நாள் விருது ஒன்றை இங்கிலாந்து இளவரசர் பிரின்ஸ் சார்லஸ் அளிக்க முன் வந்து அவரை அழைத்தார். ஆனால் அந்த விருதை வாங்க டாட்டா செல்ல இருந்த தனது பயணத்தை ரத்து செய்து விட்டார்.

    காரணம் அவரது வளர்ப்பு நாய் ஒன்றிற்கு உடல்நிலை சரியில்லை. அதைப் பாதுகாப்பதற்காக அவர் விருது பெறும் பயணத்தையே ரத்து செய்தார்.

    டாட்டா குழுமத்தின் மும்பை தலைமையகத்தை அழகுற புனருத்தாரணம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது அந்தத் திட்டத்தை ரத்தன் டாட்டாவிடம் காட்டியபோது அவர் கேட்ட கேள்வி: "அது சரி, அங்குள்ள நாய்கள் எல்லாம் எங்கே போகும்?" என்பது தான்!

    உடனே திட்டமிட்டவர்கள் அதற்கென வசதியான கூண்டுகள் அமைக்கப்படும் என்றனர். உடனே டாடா, "முதலில் அதன் வடிவமைப்பை எனக்குக் காட்டுங்கள்" என்றார். அதைப் பார்த்து மகிழ்ந்த பின்னரே கட்டிடத்தைப் பெரிதாகக் கட்ட அவர் இசைந்தார்.

     

    பெரும் நன்கொடையாளர்:

    மிகப் பெரிய அளவில் நன்கொடைகளைத் தந்த பெரும் நன்கொடையாளராக அவர் திகழ்ந்தார்.

    இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்திற்கு அல்ஜெமீர் வியாதியைக் குணமாக்குவதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ள அவர் 75 கோடி ரூபாய் வழங்கினார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு உதவ 235 கோடி ரூபாய் அளித்தார். அத்தோடு 2020-ல் கோவிட்- 19 தொற்று நோய் பரவிய காலத்தில் 500 கோடி ரூபாயை நிவாரண நிதிக்கென அளித்தார். தாஜ் பப்ளிக் சேவை நல அறக்கட்டளை ஒன்றை நிறுவி தாஜ்மஹால் ஓட்டல் மீது மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கானோருக்கு உதவி செய்ய 419 கோடி அளித்தார். இப்படி அவர் அளித்த நன்கொடைகளுக்கு ஒரு கணக்கே இல்லை.

    இந்தியாவின் மீது அவர் அபாரமான பற்று கொண்டிருந்தார். இந்தியாவில் வாழும் மத்தியதர வர்க்கத்தினர் உலகில் வாழும் ஏனைய மக்களுடன் அதே சவுகரியத்துடன் வாழவில்லையே என்று அவர் கவலை கொண்டார். அதனால் அவர்கள் சொந்தமாக கார் ஒன்றை வாங்கிப் பயணிப்பதற்காக ஒரு லட்ச ரூபாயில் டாட்டா நேனோ என்ற கார் திட்டத்தை உருவாக்கி வெற்றிகரமாக அமல்படுத்தினார்.

    திருமணம்:

    வாழ்நாளில் திருமணம் என்ற எண்ணத்திற்கே அவர் இடம் வைக்கவில்லை. பிற்காலத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் நான்கு முறை திருமணத்திற்கான பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்தன என்றும் ஏதோ ஒரு காரணத்திற்காக அது தனக்கு ஒத்துவரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

     

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    விருதுகள்:

    வாழ்நாள் முழுவதும் அவரைத் தேடி விருதுகள் வந்து குவிந்தன. 2000-ம் ஆண்டில் இந்தியாவின் ஐம்பதாவது குடியரசு தினத்தில் அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

    2008-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

    2007-ம் ஆண்டில் பார்சூன் இதழ் வெளியிட்ட உலகின் ஆற்றல் மிக்க தொழிலதிபர்கள் பட்டியலில் டாட்டா இடம் பெற்றார். 2008-ம் ஆண்டில் உலகின் புகழ் பெற்ற இதழான டைம் இதழ் வெளியிட்ட உலகில் செல்வாக்கான நூறு பேர்கள் கொண்ட பட்டியலில் இடம் பெற்றார். 2008-ல் சிங்கப்பூர் அரசு தனது கவுரவ குடிமகன் சிறப்பை அவருக்கு வழங்கியது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு விருதுகளை வழங்கியுள்ளன.

    மறைவு:

    வயதானதன் விளைவாக வரும் மருத்துவ நிலையின் காரணமாக மருத்துவ சோதனைகளை மேற்கொள்வதற்காக அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் 2024 அக்டோபர் 9-ம் நாள் பிரீச் கேண்டி மருத்துவமனையில் தனது 86-ம் வயதில் அவர் காலமானார்.

    அரசு மரியாதையுடன் அவரது உடல் அக்டோபர் பத்தாம் நாளன்று வொர்லியில் தகனம் செய்யப்பட்டது.

    பொன்மொழிகள்

    வாழ்நாள் முழுவதும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தி வந்தார். அவரது குறிப்பிடத்தகுந்த பொன்மொழிகளில் சில இதோ:

    ஏற்ற இறக்கங்கள் ஒரு வாழ்வில் இன்றியமையாதது. இவை நம்மை மேலே கொண்டு செல்ல அமைந்தவை. ஈசிஜியில் கூட அது நேர்கோட்டைக் காட்டினால் உயிர் இல்லை என்று அர்த்தமாகும். நீங்கள் மற்றவருடன் பழகும்போது அன்பு, இரக்கம், தயை ஆகியவற்றின் சக்தியைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

    மற்றவர்கள் உங்கள் மீது விட்டெறியும் கற்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதை வைத்து பிரம்மாண்டமான கட்டிடத்தை அமையுங்கள். சவால்களை விடாமுயற்சியுடன் வளைந்து நெகிழ்ந்து எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் அவையே வெற்றிக்கான படிக்கட்டுகள்.

    டாட்டா சால்ட் முதல் ஏர் இந்தியா முடிய!

    உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது பழமொழி. உப்பிட்டதோடு விமானத்தில் ஏற்றி உயரப் பறக்கவும் வைத்த உத்தமரான ரத்தன் டாடாவை நினைத்துப் போற்றுவது நமது கடமை அல்லவா!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தந்தைக்கு ‘ஓம்’ என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.
    • முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்று பல பொருள் உண்டு.

    முருகனே செந்தில் முதல்வனே மாயோன்

    மருகனே ஈசன்மகனே ஒருகைமுகன் தம்பியே

    நின்னுடைய தண்டை கால் எப்பொழுதும்

    நம்பியே கைதொழுவேன் நான்

    கடவுள் ஒருவரே. ஆனால்

    அவதாரங்கள் பல.

    ஒவ்வொரு கடவுளுக்கும் அவதார சிறப்பு மற்றும் தனித்துவம் இருக்கிறது. அதர்மம் தலை தூக்கும்போது அதை அழிக்கவே அனைத்து கடவுள்களின் அவதாரங்களும் நிகழ்ந்துள்ளன. முருகப்பெருமானின் அவதார நோக்கமும் இதுதான்.

    ஆனால் முருகனின் அவதாரம் பல்வேறு சிறப்புகள் கொண்டது.

    குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் முருகனின் அவதாரம் தமிழர்களின் வாழ்வோடும், உணர்வுகளோடும் பின்னி பிணைந்தது. முருக வழிப்பாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் இதை உணர முடியும். இதன் மூலம் தமிழர்களுக்காகவே அவதரித்த தெய்வமாக முருகப்பெருமான் கருதப்படுகிறார்.

    இதனால்தான் சங்க காலத்துக்கும் முன்பே நம் ஆதி தமிழர்கள் முருகப்பெருமானை தமிழ்க் கடவுள் என்று போற்றி இருக்கிறார்கள். சங்க காலத்தில் தமிழர்கள் முருகனை வணங்குவதில் பல புதுமைகள் சேர்ந்தன.

    என்றாலும் பழமைக்கு பழமையாய், புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான். முருகு என்ற சொல்லில் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம். எனவே தமிழே முருகன், முருகனே தமிழ் என்பார்கள்.

    முருகன் 'ஓம்' எனும் பிரணவப் பொருளாகவும் விளங்குகிறான். பிரணவம் என்றால், 'சிறந்த புதிய ஆற்றலைத் தருவது' என்று பொருள். முருகன் தன்னை நாடி, தேடி வருபவர்களுக்கு புதிய ஆற்றலை வற்றாமல் கொடுக்கிறான்.

    தந்தைக்கு 'ஓம்' என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.

    ஓம் என்பது அ, உ. ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கை யால் உண்டானது. அ- படைத்தல் உ- காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும். எனவே முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும். அ, உ, ம என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துகளுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது.

    முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ, உ, ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவாக உள்ளான்.

    சத்து, சித்து, ஆனந்தம் சச்சிதானந்தமாக முருகப் பெருமான் கைலாச மலையில் வீற்றுள்ளார்.

    இந்தப் பிறவியில் கைமேல் பலன் தருவது முருகன் திரு வருள். ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும். கவலைகள் விலகும். வினைகளும், பயமும் விலகும்.

    மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். குறிஞ்சி நிலக்கடவுளாக முருகன் கருதப்படுகிறான். இதன் காரணமாக 'குன்று தோறாடும் குமரன்' என்று முருகனை சொல்வார்கள்.

    முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்று பல பொருள் உண்டு. முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்ததாகும். தமிழ்மொழியில் மெய்யெ ழுத்துகள் கண்களாகவும், வில்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் இன எழுத்துக்கள் ஆறுமுகங்களாகவும், அகர முதலிய எழுத்துக்கள் பன்னிரண்டும் தோள்க ளாகவும், தனிநிலை எனப்படும் ஆயுத எழுத்து ஞான வேலாகவும் விளங்குகிறது.

    முருகன் உருவம் சிவந்த மேனியும், அபய வரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும், திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளிதேவி வலது பக்கத்தி லும், நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய் வானை இடது பக்கத்திலும் அமைய பெற்றதாகும்.

    முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.

    தெய்வ யானை கிரியா சக்தியாகவும் வள்ளி இச்சா சக்தியாகவும் வேல் ஞான சக்தியாகவும் மயில் ஆணவம் என்றும் சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள். அந்த அளவுக்கு முருகனின் அவதாரம் சிறப்பிக்கப்படுகிறது.

     

    இந்த அவதாரத்துக்கு மூலமாக இருந்தவர் சிவபெருமான். சிவபெருமானின் நெற்றிக் கண் தீப்பொறியில் இருந்து 6 குழந்தைகளாக சரவண பொய்கையில் முருகன் அவதரித்தார். அன்னை பார்வதி தேவி அந்த 6 குழந்தைகளையும் சேர்த்தெடுத்து ஞானப்பாலூட்டி வளர்த்தாள். இவர் விநாயகப்பெருமானின் இளைய சகோதரன், ஐயப்ப சுவாமியின் அண்ணன்.

    திருமாலின் மருமகன், இந்திரனின் மாப்பிள்ளை, தேவயானை எனும் தேவியின் கணவன். வள்ளிக்குற மகளின் காதலன், வீரபாகு முதலான நவ வீரவாகுத்தேவர்கள் 9 பேரின் தோழன், தேவர்களுக்கு இன்னல்கள் விளைத்த தாரகாசூரன், சிங்கமுகன், சூரபதுமன் முதலான அசுரர்களை அழித்தவன்.

    அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன், அவ்வைப் பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன். நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர், கச்சியப்பசிவசாரியார் போன்ற ஞானிகளுக்கே தமிழ் நூல்கள் எழுத பாதித்த சற்குரு.

    அப்பனுக்கே ஞானம் சொன்ன சுப்பன். தமிழகத்திற்கும் தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் உண்மையான தமிழ்த்தலைவன்.

    சித்தர்கள் பரம்பரையை துவக்கி வைத்த பெருமை முருகனுக்கு உண்டு. முருகனை மந்திரவடிவிலும், யந்திர வடிவிலும், யாக நெருப்பிலும், பற்பல சிற்ப வடிவிலும், ஓவிய வடிவிலும், தமிழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.

    முருகப்பெருமானைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டுமானால் கச்சியப்பரின் கந்தபுராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, அருணகிரியாரின் திருப்புகழ், குமரகுருபரரின் கந்தர்கலிவெண்பா முதலான படைப்புகளை சலிப்பே இல்லாமல் படித்து, அதை நுணுக்கமாக ஆராய வேண்டும். அப்போது தான் முருகன் யார் என்பது மிகத்தெளிவாக தெரியவரும்.

    சிவபெருமானின் ஈசானம், சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம் என்ற ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர ஆறுமுகங்கள் ஆனது என்பார்கள்.

    எப்போதெல்லாம் நம் உள்ளத்தில் பயம் தோன்றுகிறதோ அப்போது முருகனை நினைத்தால் போதும்..... ஆறுமுகம் தோன்றி நம் அச்சத்தைப் போக்கும்.

    முருகனின் ஆறுமுகத்தின் செய்கைகள் பலராலும் போற்றப்பட்டுள்ளன.

    ஏறுமயில் ஏறி விளையாடுவது ஒரு முகம்,

    அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒரு முகம்,

    சூரபத்மனை வதைத்து அழியாத பேரின்ப வாழ்வினைத் தருவது ஒருமுகம்,

    உயிர்களின் மன இருளைப் போக்கி ஒளிர்படர்வது ஒருமுகம்,

    வள்ளி, தெய்வானைக்கு மோகம் அளிப்பது ஒருமுகம்.

    வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம் என்று ஆறுமுகங்களின் பண்புகளை அருணகிரிநாதர் பாடுகிறார்.

    வீடு பேற்றைப் பெற இயலாதபடி தடுப்பவர்களாக நம்முள் ஆறு பகைவர்கள் உள்ளனர். காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியங்கள் என்ற ஆறும்தான் அவை.

    நம் உடம்பில் ஆறு ஆதாரங்கள் உள்ளன. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், ஆநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்பவை அந்த ஆறு ஆதாரங்கள்.

    மனிதனின் உடலும், மனமும் சர்வ சக்தியான குண்டலினியை இயக்கிட மேற்குறிப்பிட்டபடி ஆறு ஆதார சக்கரங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இயக்கம் உள்ளது. இந்த ஆறு சக்கரங்களும் ஒருங்கிணைந்து செயலாற்றும்போதுதான் மனமும், உடலும் ஒருங்கிணைந்து சர்வசக்தியின் மீது ஒருநிலையில் லயிக்கிறது. ஆனால் இதற்குத் தடை யாகத்தான் மேற்குறிப்பிட்ட ஆறு பகைவர்களும் உள்ளனர்.

    எனவே ஆறுமுகனுக்குரிய ஆறெழுத்தான 'சரவணபவ' என்பதை கூறி வந்து ஆறு படை வீடுகளுக்கும் சென்று நல்ல எண்ணங்களுடனும் நம்மிடம் உள்ள ஆறு பகைவர்களும் நம்மை விட்டு நீங்க வேண்டும் என்று வேண்டி வணங்க வேண்டும்.

    முருகனுக்குப் படை வீடு ஆறு. அவை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி ஆகும். ஒவ்வொரு படை வீடும், நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு சக்கர ஆதாரத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

    மூலாதாரம் - திருப்பரங்குன்றம், சுவாதிஷ்டானம்- திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்). மணிபூரகம்- திருவாவினன்குடி (பழநி). அநாகதம் - திருவேரகம் (சுவாமிமலை), விசுத்தி- குன்றுதோன்றாடல் (திருத்தணி), ஆக்ஞை - பழமுதிர்ச்சோலை. இந்த ஆறு ஆதாரங்களிலும் உள்ள அசுர சக்தியை ஆறுபடை வீடுகளில் ஒவ்வொரு தலத்திலும் இருக்கும் முருகப் பெருமானின் அருட்சக்தி அழித்து உய்வு பெறலாம்.

    பல கோடி பிறவிகளில் செய்த புண்ணி யங்கள் திரண்டு ஒன்றுபட்டால் தான் முருக பக்தி உண்டாகும். முருகன் அருள் வேண்டி பக்தர்கள் பலவித விரதங்கள் இருந்தாலும், அதில் முதன்மையாக சஷ்டி விரதம் உள்ளது.

    திருசெந்தூரில் சூரனுடன் முருகன் 6 நாட்கள் சண்டையிட்டபோது, அவரது அன்பர்கள் விரதம் இருந்த தியானித்தனர். அன்று தொடங்கிய இந்த பாரம்பரிய சக்திமிகு விரதத்தை இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடை பிடிக்கிறார்கள்.

    திருச்செந்தூர் கந்த தலத்தில் சஷ்டி விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும். வேலை வணங்குவதே வேலை என்று முருகனுடன் மனம் ஒன்றுபவர்களை முருகன் நிச்சயம் ஆட்கொள்வார்.

    எனவேதான் திருச்செந்தூர் தலத்து முருகனை, நினைத்ததை நடத்தி தரும் முருகன் என்கிறார்கள். திருச்செந்தூர் முருகனின் சிறப்புகள், தனித்துவத்தை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை பார்க்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பானுப்பிரியாவை பார்க்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கும்.
    • ‘மீனா, நீ நல்லா பாடுவாய் என்று கேள்விப்பட்டேன். ஒரு பாட்டு பாடு’ என்றார்.

    கன்னட ஸ்டார் விஷ்ணு வர்தனோடு நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் அதிக அளவில் கைவசம் இருந்ததால் அவருடன் நடிப்பதற்கு வாய்ப்பு வந்த போதெல்லாம் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனது. இந்த சூழ்நிலையில் தமிழில் மிகப்பெரிய வெற்றிப்படமாக வெளிவந்த 'நாட்டாமை' படத்தை கன்னடத்தில் ரீமேக் பண்ணுவதற்கு தயாராகி கொண்டிருந்தார்கள். ஹீரோ விஷ்ணுவர்தன் என்றார்கள். தயாரிப்பாளர் விஜயகுமார். எப்படியாவது இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டேன்.

    கன்னடத்தில் 'சிம்ஹத்ரிய சிம்ஹா' என்ற பெயரில் தயாரித்தார்கள். இந்த படத்தில் விஷ்ணுவர்தனுக்கு 3 வேடங்கள். சிங்கம் எப்படி தனது ராஜ்ஜியத்தை கட்டி ஆள்கிறதோ அதேபோல் 48 கிராமங்களின் குழுக்களுக்கு தலைவராக இவரும் நரசிம்ஹகடா (விஷ்ணு வர்தன்) அந்த கிராமங்களை கட்டி ஆள்வார். கதை முழுவதும் அவரை சுற்றியே சுழலும்.

    பானுப்பிரியாவும் ஒரு ஜோடி. பானுப்பிரியாவை பார்க்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். காலையில் ஒருநாளும் சாப்பிட மாட்டார். அதற்கு பதிலாக கொஞ்சம் உலர் பழங்களை மட்டும் சாப்பிட்டுவிட்டு நடிக்க கிளம்பி விடுவார்.

    இவருக்கு பசிக்காதா? இரவில் என்னதான் சாப்பிட்டாலும் காலையில் பசிக்கும். சாப்பிடாமல் எந்த வேலையும் ஓடாது.

    பானுப்பிரியாவால் மட்டும் எப்படி பசியை தாங்கி கொள்ள முடிகிறது என்று எனக்குள் எழுந்த கேள்விக்கு அவரிடமே நேரடியாக பதில் கேட்டேன்.

    Intermittent fasting diet என்பது இப்போது பிரபலமாகி விட்டது. ஆனால் இந்த முறையை பானுப்பிரியா அப்போதே கடை பிடித்தார்.

    அதாவது முந்தைய நாள் இரவு 8 மணிக்கு சாப்பிட்டால் மறுநாள் காலை 8 மணிக்கு காலை உணவை சாப்பிட மாட்டார்கள். மதியம் தான் சாப்பிடுவார்கள். இதை அப்போதே அவர் கடை பிடித்தது ஆச்சரியமாக இருந்தது. மைசூரு அரண்மனையில்தான் படப்பிடிப்பு நடந்தது. எனக்கும், பானுபிரியாவுக்கும் அந்த அரண்மனையிலேயே தங்குவதற்கு அறையும் கொடுத்து இருந்தார்கள். இருவரும் ஒன்றாக தங்கியிருந்ததால் அவரது உணவு கட்டுப்பாட்டை பார்த்து நானே ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.

    மாலையில் நேரம் கிடைக்கும்போது அந்த அரண்மனையில் இருக்கும் கடைகளுக்கு சென்று அணிகலன்களை பார்ப்பதும், வாங்குவதும் தான் எங்கள் வேலை.

    தயாரிப்பாளர் விஜயகுமார் ரொம்ப பெரிய மனதுக்காரர். செலவை பற்றி யோசிக்க மாட்டார். அவரை பொறுத்தவரை காட்சி நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் கொண்டவர். காஸ்ட்யூமை பொறுத்தவரை சில பாடல் காட்சிகள் மற்றும் காட்சிகளுக்கு நான்கைந்து சேலை வரை தேவைப்படும். எனவே கொஞ்சம் குறைந்த விலை புடவைகளையே 'செலக்ட்' பண்ணுவேன். ஆனால் அவர் விடமாட்டார். விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை. அதை எடுத்துக்கோம்மா... காட்சிக்கு நல்லா இருக்கும்ல என்பார்.

    நல்லாத்தான் சார் இருக்கும். ஆனால் விலை ரொம்ப அதிகமாக இருக்கு சார். வேண்டாம் என்பேன்.

    அவர் விடமாட்டார். விலையை பற்றி யோசிக்காதே. நமக்கு காட்சி நல்லாயிருக்கணும் எடுத்துக்கோ என்பார்.

    தயாரிப்பாளர்தான் சொல்லிவிட்டாரே என்று நாங்களும் விலையை பார்க்காமல் காஸ்ட்யூமை செலக்ட் பண்ணுவோம். அவருடைய நல்ல மனதுக்கு காட்சிகளும் நன்றாக அமைய வேண்டும் என்று உயிரை கொடுத்து நடித்தோம்.

    கன்னட நாட்டாமை வளர்ந்து கொண்டிருந்தார். இரவில் ஓட்டலில் தங்கியிருந்தபோது ஒருநாள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம்.

    அப்போது விஷ்ணுவர்தன் 'மீனா, நீ நல்லா பாடுவாய் என்று கேள்விப்பட்டேன். ஒரு பாட்டு பாடு' என்றார்.

    அய்யய்யோ வேண்டாம் சார். ஆடுவேன், நடிப்பேன், அதுதான் எனக்கு தெரிந்தது. பாட்டெல்லாம் வராது சார். பிளீஸ்... வேண்டாம் என்றேன்.

    ஆனால் அவரும் மற்றவர்களும் விடுவதாக இல்லை. பாடு மீனா... பாடு மீனா... என்று பிடிவாதமாக இருந்தார்கள்.

    வேறு வழியில்லை. எனக்கு தெரிந்த ராகத்தில் 'யமுனை ஆற்றிலே... ஈர காற்றிலே... கண்ணனோடுதான் ஆட...' பார்வை பூத்திட... பாதை பார்த்திட பாவை ராதையோ வாட...' என்ற பாடலை பாடினேன். கைதட்டி உசுப்பேற்றினார்கள். அத்தோடு விடவில்லை. ஒரு இந்தி அல்லது ஆங்கில பாடலும் பாட வேண்டும் என்று அடம் பிடித்தார்கள்.

    அய்யய்யோ இது என்னடா வம்பா போச்சு என்றபடி 'டைட்டானிக்' படத்தில் வரும். 'மை ஹார்ட் வில் கோ ஆன் எவரி நைட் இன் மை டிரீமஸ். ஐ.சி.யூ., ஐ.பீல்.யூ...' என்ற பாடலை பாடினேன். நண்பர்கள் ஒரே இடத்தில் இப்படி கூடி ஒருவருக்கொருவர் கலாய்த்து ஆடி, பாடி பொழுதை போக்கினால். வேலை செய்த அலுப்பெல்லாம் மறைந்து மனம் முழுக்க சந்தோஷம் நிறைந்து விடுமல்லவா? அன்று அப்படித்தான் மனமெல்லாம் சந்தோஷம் நிறைந்தது. அதனால்தான் அந்த நினைவுகள் இன்றுவரை மறக்கவில்லை.

    மறக்காத இன்னும் பல நினைவுகளுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொடரும்...)

     

    16 வயதினிலே இசை ஆல்பத்தில்...

    பாரதிராஜா சாரின் மகன் மனோஜ் என்னை அணுகி 16 வயதினிலே என்ற பெயரில் ஒரு இசை ஆல்பம் பண்ண போகிறேன். அதில் நீங்கள் பாட வேண்டும் என்றார். மனோஜ், இது சரியா வராது. என் குரல் 'கீச்' குரல் என்று தயங்கினேன். இல்லை, உங்கள் குரல் நல்லா இருக்கு. 'முயற்சி செய்யுங்கள். நல்லா வரவில்லை என்றால் விட்டு விடலாம். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

    அவருடைய வற்புறுத்தலால் பாடினேன். இசை ஆல்பமும் வெற்றிகரமாக வந்தது. மீனா... அசத்திபுட்டே... என்று எனக்கு நானே காலரை தூக்கி விட்டுக்கொண்டேன். 

    ×