தோள்பட்டை வலி என்பது பல்வேறு காரணங்களால் வரலாம்.
* ரோட்டேட்டர் சுற்றுப்பட்டை வலி: தோளின் சுழற்சியை உருவாக்கும் நான்கு முக்கிய தசைகள் சுப்ரா ஸாபின்டஸ், இன்ப்ரா ஸ்பின்டஸ், டெரெஸ் மைனர் மற்றும் சப் ஸ்கேபுலாரிஸ் ஆகும். இந்த தசைகள், டெல்டாய்டு தசையுடன் சேர்ந்து, தோள்பட்டை மூட்டை உறுதிப்படுத்துவதற்கும் பரந்த அளவிலான கை அசைவுகளை செயல்படுத்துவதற்கும் முக்கியமானவை ஆகும். தசைப்பிடிப்புகள் காயங்களினால் இவைகளின் இயக்கம் குறையும் பொழுது தோள்பட்டையின் உள்பகுதியில் மந்தமான வலியாகவோ அல்லது திடீரென கூர்மையான வலியாகவோ வெளிப்படும். இந்த வலியினால் தோள் பட்டையில் குறைந்த அளவிலான இயக்கம், முதுகுக்கு பின்னால் கை வைத்து எட்டுவது, தலைமுடியை சீவுவது ஆகியவை கடினமாகிறது.
* கிழிவுகள்: தோள்பட்டையை சுற்றியுள்ள தசை நார்கள், சவ்வுகள் இவை கிழிவதினால் கடுமையான வலி ஏற்படுகிறது.
* டென்டினைடிஸ்: தோள் பட்டையை சுற்றியுள்ள தசைநாண்களில் ஏற்படும் அழற்சி, வீக்கம் வலி மற்றும் விறைப்பை ஏற்படுத்தும்.
* திடீரென ஏற்படும் விபத்துகள், காயங்களினால் தோள்பட்டை மூட்டைச் சுற்றியுள்ள எலும்புகள், தசைகள் மற்றும் தசைநாண்களில் ஏற்படும் பாதிப்புகள்.
* பர்சைடிஸ்: தோள்பட்டை மூட்டை மெத்தை போன்று தாங்கி உயவுடன் சுழலச் செய்யும் திரவம் நிறைந்த பைகளில் ஏற்படும் வீக்கம்.
* எலும்பு தேய்மானம்: தோள்பட்டை மூட்டில் உள்ள குருத்தெலும்புகளில் ஏற்படும் சிதைவு.
* உறைந்த தோள்பட்டை (புரோஷன் ஷோல்டர்): இது மூட்டைச் சுற்றியுள்ள இணைப்பு திசுக்களில் இறுக்கம் மற்றும் விறைப்பை ஏற்படுத்துகிறது.
* தசைச் சுளுக்குகள்: சமநிலையற்ற படுக்கையில் படுப்பது, அதிக பாரத்தை தூக்குவது இவற்றால் தோள்பட்டையைச் சுற்றியுள்ள தசைகளில் ஏற்படும் பிடிப்புகள் கடுமையான வலியை தரும்.
* கீல்வாதம்: கீல்வாத நோய்களிலும் தோள் பட்டையில் வீக்கத்துடன் வலி உருவாகிறது.
* கழுத்து எலும்பு, நரம்புகளில் ஏற்படும் வலி, மார்பு அல்லது வயிறு போன்ற பிற பகுதிகளிலிருந்து தோன்றும் வலிகளும் தோள்பட்டையில் வலியை ஏற்படுத்தும்.
சித்த மருத்துவ தீர்வுகள்:
1) அமுக்கரா சூரணம் 1 கிராம், சிவனார் அமிர்தம்-200 மி.கி., முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம்-200 மி.கி. இவைகளை மூன்று வேளை வெந்நீர் அல்லது பாலில் உணவுக்கு பின்பு சாப்பிட வேண்டும்.
2) அஸ்வகந்தா லேகியம் 1-2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.
3) வலியுள்ள இடத்தில் கற்பூராதி தைலம், வாதகேசரி தைலம் இவைகளை தேய்த்து வெந்நீரில் ஒற்றடம் இட வேண்டும்.