புதுச்சேரி:
தமிழகம், புதுவை சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட பிரசாரத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கியுள்ளார். அவர் வார இறுதி நாட்களில் தமிழகத்தின் மாவட்டம்தோறும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் வருகிற அக்டோபர் 11-ந் தேதி காலை புதுச்சேரிக்கு வர உள்ளார். இதனையொட்டி த.வெ.க. மாநில நிர்வாகிகள் புதியவன், நிரேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரசாரம் நடத்த அனுமதி கோரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் மனு அளித்தனர். புதுவை காவல்துறை சார்பில் கலந்து ஆலோசித்த பின் மீண்டும் அழைப்பதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து த.வெ.க.வினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
அவர்களிடம் விவரத்தை கேட்டு அறிந்த முதலமைச்சர் ரங்கசாமி மனுவை மாவட்ட கலெக்டருக்கு கையெழுத்திட்டு பரிந்துரை செய்தார்.
வருகிற 11-ந் தேதி சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு காலை 11 மணிக்கு வரும் விஜய்க்கு த.வெ.க.வினர் காலாப்பட்டில் வரவேற்பு தருகின்றனர். அங்கிருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பஸ்சில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் அவர், புதுவை அஜந்தா சிக்னல், எஸ்.வி.பட்டேல் சாலை, அண்ணா சாலை, சோனாம்பாளையம், மரப்பாலம் பகுதிகளில் விஜய் ரோடு ஷோ நடத்தவும், சோனாம் பாளையம் வாட்டர் டேங்க் அருகே விஜய் பேசவும் அனுமதி கோரி உள்ளனர்.
தொடர்ந்து பஸ்சில் அரியாங்குப்பம், மண வெளி, கன்னியகோவில் வழியாக மக்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி விஜய் கடலூர் செல்கிறார். விஜய் பிரச்சாரத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளிக்கும் என தெரிகிறது.