இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேல் தங்களை தாக்கும் என உளவுத்துறை தகவல் கிடைத்ததாக ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) தெரிவித்தது. அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஈரான் ராணுவத் தாக்குதலுக்கு உள்ளானால், அதன் ஆயுதப் படைகள் உடனடியாக இஸ்ரேலின் "ரகசிய அணுசக்தி நிலையங்களை" குறிவைக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி இஸ்ரேல் ஈரான் மீது இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
ஒரு தொலைக்காட்சி அறிக்கையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேலின் நலன் கருதி ஈரானின் அச்சுறுத்தலை முறியடிக்க இலக்கு வைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் "எங்களுக்கு எதிரான அச்சுறுத்தலைத் தடுக்கும் பணியை முடிக்க தேவையான வரை இந்த நடவடிக்கை தொடரும்" என்று நேதன்யாகு அறிவித்தார்.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இந்த தாக்குதலை, "உடனடி அச்சுறுத்தல்களை நடுநிலையாக்குவதை நோக்கமாகக் கொண்ட முன்கூட்டிய தாக்குதல்" என்று விவரித்தார்.
மேலும், ஈரான் திருப்பி தாக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இஸ்ரேல் முழுவதும் சிறப்பு அவசரகால நிலையை காட்ஸ் அறிவித்தார்.
இதற்கிடையில், இன்று அதிகாலை நேரத்தில் தலைநகர் தெஹ்ரானின் பல பகுதிகளில் உரத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய தாக்குதல்கள் இராணுவ உள்கட்டமைப்பு அல்லது அணுசக்தி தொடர்பான வசதிகளை குறிவைத்திருக்கலாம் என்ற நம்பப்படுகிறது. குண்டுவெடிப்புகளுக்கான ஆதாரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என்று ஈரானின் அரசு ஊடகமான IRIB குறிப்பிட்டது.
இஸ்ரேல் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக பலரால் நம்பப்படுகிறது, இருப்பினும் அது இதை ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை அல்லது மறுக்கவில்லை.
இந்த சூழலில் ஈரான் திருப்பி தாக்கினால் விளைவு விபரீதமாக இருக்கும் என கருதப்படுகிறது. இதற்கிடையே, ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.