வெண்டைக்காய் பொரியல் வழ வழன்னு இல்லாமல், மொறு மொறுன்னு இருக்க, வதக்கும் போது சிறிது தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள். சாப்பிட ருசியாக இருக்கும்.
வாழைத்தண்டு, வாழைப் பூவை நறுக்கியதும், அரிசி களைந்த நீரில் போட்டு விட்டு பிறகு மோர் கலந்த நீரில் அலசி பின்பு பொரியல் செய்தால், நிறம் மாறாமலும் துவர்ப்பு குறைவாகவும், சுவை அதிகமாகவும் இருக்கும்.
புது அரிசியில் சாதம் வடிக்கும் போது, குழைவாக ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும். சாதம் உதிரி உதிரியாக இருக்க ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும்.
ரவா தோசை செய்யும் போது, ஒரு கரண்டி கடலை மாவு சேர்த்து கரைத்து தோசை வார்த்தால், ஓட்டல் தோசை போல் பொன்னிறத்தில் மொறு மொறு என்று இருக்கும். எள்ளு, மிளகாய்ப் பொடியில் நல்லெண்ணெய் ஊற்றி அதை சாப்பிட்டால் சுவையோ சுவை தான்.
சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, பசும்பாலுடன் அரை கப் தேங்காய் பாலும் ஊற்றி கிளறினால் சுவை நன்றாக இருக்கும்.
இட்லி, தோசைக்கு மிளகாய்ப் பொடி அரைக்கும் போது சிவப்பு மிளகாய், கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, பெருங்காயக் கட்டி இவற்றை வறுத்ததும், ஒரு கப் கொத்தமல்லி விதை மற்றும் சுத்தமான கருப்பு எள் 100 கிராம் இரண்டையும் வறுத்து, உப்பு சேர்த்து பின் அம்மியில் அரைத்து வைத்துக் கொண்டால்.... ஒரு மாதம் வரை வாசனையும் சுவையும் நன்றாக இருக்கும்.
கோதுமை மாவு அரைக்கும் போது அதனுடன் வெள்ளை கொண்டைக் கடலை மற்றும் சோயா பீன்ஸ் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் மிருதுவாகவும் ருசியாகவும், சத்து மிகுந்தும் இருக்கும்.
ரசம் மணக்க வேண்டுமா? புளிக் கரைசலுடன் பழுத்த தக்காளியை மிக்சியில் அரைத்து சேர்த்து ரசம் வைத்து, கீழே இறக்கி இளம் கொத்துமல்லித் தழையை தூவி விடுங்கள். வீடே கமகமனு இருக்கும்.
சமைத்த சாதம் மீந்து விட்டதா? அதில் உப்பு போட்டு, ஒரு டம்ளர் பால் ஒரு ஸ்பூன் தயிர் ஊற்றிப் பிசைந்து `ஹாட் பேக்' கில் எடுத்து வைத்து விடுங்கள். மறுநாள் காலை சூப்பர் தயிர் சாதம் ரெடியாக இருக்கும். எலுமிச்சை அல்லது மாங்காய் ஊறுகாய் கொண்டு சாப்பிட்டால், அமிர்தமாக இருக்கும்!