ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதல் முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் இரண்டு வெளிநாட்டினரும் அடங்குவர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து மகாராஷ்டிராவின் சிவசேனா (UBT) எம்பி சஞ்சய் ராவத் காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் அமித் ஷா ஒரு தோல்வியடைந்த உள்துறை அமைச்சர், அவர் பதவி விலக வேண்டும் என்று கோரினார்.
அவர் கூறியதாவது, பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நாடு முழுவதிலுமிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். அவர்களில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆறு பேர் அடங்குவர்.
பயங்கரவாதிகள் சுடுவதற்கு முன்பு தங்கள் மதத்தைக் கேட்டதாகப் பாதிக்கப்பட்ட சிலரின் குடும்ப உறுப்பினர்கள் கூறினர். பயங்கரவாதிகள் மக்களைக் கொல்வதற்கு முன்பு மதத்தைக் கேட்டால் அதற்கு பாஜகவின் வெறுப்பு அரசியலே காரணம்.
வெறுப்பு அரசியல் ஒருநாள் பெரிய பூமரங் போன்று வெடிக்கும். வேறு யாரும் அதற்குப் பொறுப்பல்ல. மேலும் இது மேற்கு வங்காளத்திலிருந்து ஜம்மு-காஷ்மீருக்குப் பரவிவரும் வெறுப்பின் விளைவு. ஆளும் கூட்டணியினர் அரசை அமைப்பதிலும், கவிழ்ப்பதிலும் எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைப்பதிலுமே 24 மணி நேரமும் மும்முரமாக ஆலோசித்து வருகின்றனர்.
அதன்பின்பு மக்களை எவ்வாறு பாதுகாப்பார்கள்? நாட்டின் வரலாற்றில் அமித் ஷா ஒரு தோல்வியுற்ற உள்துறை அமைச்சர். முழு நாடும் அவரது ராஜிநாமாவை எதிர்பார்க்கிறது. ஒருநாள் கூட அந்தப் பதவியை வகிக்க அவருக்கு உரிமை இல்லை.
பஹல்காமில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். ஆனால் அங்கு ஒரு பாதுகாப்புக் காவலர் கூட இல்லை.
இருப்பினும், அமித் ஷா ஸ்ரீநகரில் தரையிறங்கியபோது, அவரது பாதுகாப்புக்காக 75 வாகனங்கள் கொண்ட ஒரு கான்வாய் இருந்தது. 500க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீசார் இருந்தனர். அவருடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவும் இருந்தது. ஒருவருக்கு இவ்வளவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஒரு பாதுகாப்புக் காவலர் கூட இல்லை. இதெல்லாம் ஏன் நடந்தது? ஏனென்றால், இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள இரண்டு லட்சம் பணியிடங்களை மோடி அரசு நிரப்பவில்லை. பாதுகாப்புத் துறையின் பட்ஜெட்டை அவர்கள் குறைத்துள்ளனர்.
காஷ்மீரின் மீதான தனது கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, மோடி அரசு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை நீக்கி, ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியது. எனவே, நேற்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு முழுப் பொறுப்பாகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலுமாக முடிவுக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக நடக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. மோடி-அமித் ஷா நாடாளுமன்றத்தில் நம் அனைவரிடமும் (பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக) பொய் சொல்கிறார்கள்" என்று தெரிவித்தார்.