உலகம்

போர் முடிந்ததும் உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து விலகுவேன்: ஜெலன்ஸ்கி
- ரஷியாவுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டால் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வேன்.
- கடினமான காலகட்டத்தில் நாட்டுடன் இருக்க வேண்டும், நாட்டுக்கு உதவ வேண்டும் என்று மிகவும் விரும்பினேன்.
உக்ரைன் அதிபராக இருக்கும் ஜெலன்ஸ்கி, ரஷியா உடனான போர் முடிவுக்கு வந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகுவேன். மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டும். ரஷிய போர் காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழு அளவில் உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதில் இருந்து தற்போது வரை சண்டை நீடித்து வருகிறது. ஜெலன்ஸ்கி கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து அதிபராக இருந்து வருகிறார்.
"ரஷியாவுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டால் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வேன். ஏனென்றால், தேர்தல் எனது இலக்கு அல்ல. மிகவும் கடினமான காலகட்டத்தில், என் நாட்டுடன் இருக்க வேண்டும், என் நாட்டுக்கு உதவ வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். போர் முடிவடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு" என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.