சினிமா செய்திகள்

துரந்தர் பார்ட் 2 ரிலீஸ் அப்டேட்
- சமீபத்தில் துரந்தர் திரைப்படம் ஓடிடி-யில் வெளியானது
- துரந்தர் பார்ட் 2 டீசர் இன்று வெளியாகிறது
இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.
திரையரங்குகளில் வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், கடந்த ஜனவரி 30ஆம் தேதி இந்தப் படம் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதும், இதற்கான பணிகள் கிட்டத்தட்ட முழுமை பெற்றுவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், "துரந்தர்: தி ரிவெஞ்ச்" (Dhurandhar: The Revenge) திரைப்படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. துரந்தர்: தி ரிவெஞ்ச் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
துரந்தர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்ற நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





