உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி இறுதி வரை மகா கும்பமேளா நடைபெற்றது.
அப்போது மௌனி அமாவாசை தினமான ஜனவரி 29 அன்று அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 37 பேர் இறந்ததாக உ.பி. அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பிபிசி நடத்திய ஆய்வில் அன்றைய தினம் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக பிபிசி செய்தியாளர்கள் 11 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சந்தித்து தகவல்களை பெற்றனர்.
அதன்படி அவர்கள், ஜனவரி 29 அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்த 82 பேரின் உறவினர்கள் தெளிவான ஆதாரங்களை வழங்கியுள்ளனர்.
இருப்பினும், உறுதியான ஆதாரங்கள் கிடைக்காததால், இன்னும் பல இறப்புகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிப்ரவரி 19 அன்று சட்டமன்றத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த புள்ளிவிவரங்களின்படி, குளிக்கும் இடத்தில் 30 பேரும், மற்ற இடங்களில் ஏழு பேரும் இறந்தனர். இறந்த 37 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் ஆதித்யநாத் அறிவித்தார்.
பிபிசி நடத்திய விசாரணையில், முதலமைச்சர் அறிவித்த நிதியுதவியை 37 குடும்பங்கள் நேரடியாகப் பெற்றதாகக் கண்டறியப்பட்டது. பணம் நேரடியாக அவர்களின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது அல்லது காசோலைகள் வழங்கப்பட்டன.
இருப்பினும், இது தவிர, 26 குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்தப் பணத்தை காவல்துறை அதிகாரிகள் வழங்கினர். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படாதவர்களின் குடும்பங்கள் இவர்கள். கூட்ட நெரிசலால் அல்ல, நோயால் இறந்ததாகக் கூறும் ஆவணங்களில் பலரை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்ததாகவும் அறிக்கை கூறுகிறது.
இந்த சம்பவத்தில் இறந்த மேலும் 19 பேரின் குடும்பங்களையும் பிபிசி அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் யாருக்கும் அரசு உதவி கிடைக்கவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கைகள், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் பேரிடர் நடந்த இடத்தின் புகைப்படங்கள் உள்ளிட்ட சான்றுகள் அவர்களிடமிருந்து பெறப்பட்டன. கூடுதலாக, நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை பேரழிவின் அளவை விளக்குகின்றன.
இந்த அறிக்கை வெளியானதன் மூலம், உத்தரப் பிரதேச அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்த தகவல்களை வெளியிடாததன் மூலம் அரசின் வெளிப்படைத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது.
அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டபோதும் கும்பமேளாவில் நடந்த மிகப்பெரிய சோகம், அரசு அமைப்பின் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி உள்ளது.