என் மலர்

    இந்தியா

    அகமதாபாத் விமான விபத்துக்கு நிபுணர்கள் கூறும் 5 காரணங்கள்...
    X

    அகமதாபாத் விமான விபத்துக்கு நிபுணர்கள் கூறும் 5 காரணங்கள்...

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விமானத்தில் உள்ள 2 என்ஜின்களில் ஒரு என்ஜின் மட்டும் செயல் இழந்து இருந்தால் விமானத்தை தொடர்ந்து இயக்கி இருக்க முடியும்.
    • விபத்துக்குள்ளான விமானம் புறப்பட்டதும் விமானத்தின் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

    அகமதாபாத் விமான விபத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பது இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது. விமான நிலைய ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு உயரே பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் பலரது கண் எதிரில் திடீரென கீழே இறங்கிய விமானம் அரசு கல்லூரி வளாகத்தில் விழுந்து வெடித்து சிதறியது ஏன் என்பது தெரியவில்லை.

    அகமதாபாத் நகரையே உலுக்கும் வகையில் எழுந்த வெடிகுண்டு போன்ற சத்தத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது. விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்பும், அடர்கரும்புகையும் எழுந்தததை கண்ட மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீள நீண்ட நேரம் ஆனது.

    விபத்துக்குள்ளான விமானம் சுமார் 800 மீட்டர் வரையே உயரே பறந்தது. அதற்கு பிறகு அந்த விமானத்தால் தொடர்ந்து உயரே பறக்க இயலவில்லை. அந்த இடத்தில்தான் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அது என்ன கோளாறு என்பதைதான் நிபுணர்களால் உடனடியாக கண்டுபிடிக்க இயலாத நிலை உள்ளது.

    இந்த விபத்துக்கு பொதுவாக 5 விதமான காரணங்கள் கூறப்படுகிறது. பெரும்பாலான நிபுணர்கள் விமானத்தில் உள்ள 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் செயல் இழந்து இருக்கலாம் என்பதை பிரதானமான காரணமாக சொல்கிறார்கள்.

    விமான என்ஜின்கள் செயல் இழந்ததால் விமானம் மேல் எழுந்து பறப்பதற்கு தேவையான உந்து விசையை விமானத்தால் பெற இயலவில்லை என்று கருதப்படுகிறது. விமானத்தில் உள்ள 2 என்ஜின்களில் ஒரு என்ஜின் மட்டும் செயல் இழந்து இருந்தால் விமானத்தை தொடர்ந்து இயக்கி இருக்க முடியும்.

    ஒரு என்ஜினியுடன் விமானத்தை 330 நிமிடங்கள் இயக்குவதற்கு போயிங் ட்ரீம் லைனர் ரக விமானத்தில் வாய்ப்புகள் இருப்பதாக அந்த விமான தயாரிப்பு நிறுவனம் கூறி உள்ளது. ஆனால் விபத்துக்குள்ளான விமானத்தில் அதற்கு சாத்தியம் இல்லாமல் போய் விட்டது.



    அந்த ஒரு என்ஜின் இயங்கும்போது விமானம் அந்தரத்தில் சற்று தடுமாறும். என்றாலும் விமானத்தை திருப்பி தரை இறக்கி இருக்க முடியும். ஆனால் விபத்துக்குள்ளான விமானம் தடுமாறவில்லை. நிலையாக ஒரே சீராக தாழ்வாக பறந்து விழுந்துள்ளது. இதனால் தான் 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் பழுதாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இது தவிர விமானம் மேலே பறக்க தொடங்கிய சில வினாடிகளில் பறவைகள் மோதி இருக்கலாம். அதனால் விமான என்ஜின் செயல்இழந்து இருக்கலாம் என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது. ஆனால் விபத்துக்குள்ளான விமானம் போயிங் ட்ரீம் லைனர் என்பதால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    ஏனெனில் போயிங் ட்ரீம் லைனர் ரக விமானங்களில் என்ஜின்கள் மிகப்பெரியதாக இருக்கும். விமான வகைகளில் இந்த ரக விமானத்தின் என்ஜின் உலகிலேயே பெரியது. எனவே சின்ன பறவைகள் மோதுவதால் அது செயல் இழந்து இருக்காது என்ற கருத்தும் உள்ளது.

    ஆனால் விமான போக்குவரத்து நிபுணர்களில் ஒருவரான கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறுகையில், "அகமதாபாத் விமான நிலைய ஓடுதளம் அருகே மிகப்பெரிய அளவில் புற்கள் வளர்ந்துள்ளன. அந்த புற்கள் இடையே நிறைய பூச்சிகள் காணப்படுகின்றன. அந்த பூச்சிகளை சாப்பிடுவதற்கு ஏராளமான பறவைகள் வருவது உண்டு. எனவே அந்த பறவைகள் விமானத்தின் 2 என்ஜின் பகுதிக்குள் மோதி இருக்கலாம் என்ற வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

    மூன்றாவதாக விமான சக்கரங்கள் உள்இழுக்கப்படுவதை ஒரு காரணமாக நிபுணர்கள் கருதுகிறார்கள். விபத்துக்குள்ளான விமானம் புறப்பட்டதும் விமானத்தின் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அந்த சக்கரங்கள் வெளியிலேயே இருந்துக் கொண்டு இருந்தன. லேண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான சக்கரங்கள் பழுதாகி இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.



    இது தொடர்ச்சியாக அடுத்தடுத்து விமானத்துக்குள் தொழில்நுட்ப கோளாறை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

    நான்காவதாக விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கலாம் என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது. எடை அதிகமாக இருந்ததால் விமானத்தின் இறக்கைகள் விமானம் மேல் எழும்பி பறக்க ஒத்துழைக்கவில்லை என்ற கருத்து நிலவுகிறது.

    போயிங் ட்ரீம்லைனர் விமானங்கள் சராசரியாக 227.9 டன் அளவுக்கு எடையை தூக்கும் ஆற்றல் கொண்டது. நேற்று விபத்து ஏற்பட்டபோது இதை விட கூடுதல் எடை இருந்ததா? என்பது பற்றி ஆய்வு நடந்து வருகிறது. கூடுதல் எடை ஏற்றப்பட்டு இருந்தால் அதுவும் விபத்துக்கு ஒரு காரணமாக கூறப்படலாம்.

    ஆனால் பெரும்பாலான நிபுணர்கள் இதை மறுக்கிறார்கள். விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால் விமானம் ஓடு தளத்தில் பறக்க சாத்தியம் இருந்து இருக்காது என்று கூறியுள்ளனர். என்றாலும் இந்த காரணம் அடிப்படையிலும் ஆய்வு நடந்து வருகிறது.

    ஐந்தாவதாக விமானத்தில் எரிபொருள் சப்ளையில் அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று போயிங் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். எரிபொருள் தொடர்ந்து கிடைக்காத நிலையில் 2 என்ஜின்களும் செயல் இழந்து இருக்கலாம் என்ற கருத்தும் காணப்படுகிறது. இந்த 5 விதமான காரணங்களில் உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து வருகிறது.

    இந்த விசாரணைகள் நடந்து முடிய நீண்ட காலம் தேவைப்படும் என்றும் எனவே உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிய சில மாதங்கள் ஆகலாம் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×