இந்தியா

விமான விபத்து: மருத்துவ விடுதியில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த தனது தாய் மற்றும் 2 வயது மகளை தேடும் நபர்..!
- விமானம் மருத்துவ விடுதியில் பயங்கரமாக மோதியது.
- விடுதியில் இருந்து பலர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவமனை கட்டிட வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
விமானம் மோதிய கட்டிடத்தில் பி.ஜே. மருத்துவ கல்லூரியின் மருத்துவ விடுதி உள்ளது. மதிய நேரம் என்பதால் பயிற்சி மருத்துவர்கள் ஏராளமானோர் (சுமார் 60 பேர்) மெஸ்சில் உணவு அருந்தி கொண்டிருந்தனர். விமான விபத்தில் இந்த மெஸ் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விபத்து ஏற்பட்டபோது மெஸ்சில் சமையல் வேலை செய்யும் பெண்மணி, தனது இரண்டு வயது பேத்தியுடன் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களது உடலை தேடும் நிலை, அந்த பெண்மணியின் மகனுக்கு ஏற்பட்டுள்ளது.
விடுதி மெஸ்சில் சமையல் ஊழியராக ஷர்லாபென் தாகூர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வழக்கம்போல் சப்பாத்தி, கறி சமைத்துள்ளார். ஷர்லாபென் தாகூர், தனது மகனின் 2 வயது மகளையும் (பேத்தி) அன்றைய தினம் அழைத்துச் சென்றுள்ளார்.
வழக்கமாக சமைக்கும் உணவை ஷர்லாபென் தாகூர் மகன், மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று ஸ்டாஃப்கள் மற்றும் மருத்துவர்களுக்கு வழங்குவார். அதேபோல் விபத்து நடைபெற்ற நேற்றைய தினம் உணவு வழங்க சென்றபோதுதான் விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானம் மோதி பலத்த சேதம் அடைந்தது, வழக்கமாக அவரது தாயார் இருக்கும் இடம். இதனால் தனது மகளுடன் தாய் இறந்திருக்கலாம் என அஞ்சுகிறார். இன்னும் கட்டிட இடிபாடுகள் முற்றிலுமாக அகற்றப்படவில்லை. முற்றிலுமாக அகற்றப்பட்டால்தான் விடுதியில் இருந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது தெரியவரும்.
இதனால் தனது தாய் மற்றும் இரண்டரை வயது மகளை கவலையுடன் தேடிவருகிறார்.