இந்தியா

அகமதாபாத் விமான விபத்து... மீட்பு பணிகள் நிறைவு - கருப்புப்பெட்டி மீட்பு
- விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
- பிரதமர் மோடி அகமதாபாத் விமான நிலையத்தில் உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட AI-171 விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 7 மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அகமதாபாத் விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று பிரதமர் மோடி சந்திதார். சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான ரமேஷ் விஷ்வாஸ் குமாரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்ட பிரதமர் மோடி, அகமதாபாத் விமான நிலையத்தில் உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல், அதிகாரிகள் பங்கேற்றனர். மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்பாக அவர் ஆலோசனை வழங்கினார்.
இந்த நிலையில் அகமதாபாத் விமான விபத்து தொடர்பான மீட்பு பணிகள் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து கருப்பு பெட்டியை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் தகவல்களை ஆராய்ந்து பார்த்தால்தான், கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பதும், விமான விபத்துக்கான காரணமும் தெரியவரும்.