இந்தியா

துயரம்... உயர் படிப்பிற்காக முதல்முறையாக விமான பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் மரணம்
- பல இடங்களில் கடன் வாங்கி மகளின் கனவை நிறைவேற்றி உள்ளார்.
- பயல் காதிக் படித்து முடித்ததும் நல்ல வேலைக்கு சென்றால் குடும்பம் வறுமையில் இருந்து மீளும் எனவும், கடனை திருப்பி செலுத்தி விடலாம் எனவும் தந்தை நினைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஷ்வாஸ் குமார் என்பவரை தவிர விமானத்தில் பயணித்த 241 பேரும், மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதியதில் 10 மாணவர்கள், பொதுமக்கள் 33 பேர் என மொத்த 274 பேர் உயிரிழந்துள்ளனர்
நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான விமான விபத்தாக பதிவாகி உள்ளது. இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களை கண்டறிவதற்காக டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் பலரையும் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்துகிறது.
முதல்முறையாக விமான பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் மரணம்:
குஜராத் மாநிலம் ஹிமாத்நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான பயல் காதிக் விபத்துக்குள்ளான விமானத்தில் தான் வெளிநாட்டுக்கு முதல்முறையாக பயணம் செய்துள்ளார். உதய்பூரில் பிடெக் முடித்துள்ள காதிக், இதையடுத்து எம்டெக் படிப்பதற்காக லண்டன் செல்ல முடிவு செய்தார். இதற்காக அவரது தந்தையான ஆட்டோ ஓட்டுநர் பல இடங்களில் கடன் வாங்கி மகளின் கனவை நிறைவேற்றி உள்ளார். இவர் குடும்பத்தில் இருந்து மேற்படிப்புக்காக வெளிநாட்டிற்கு விமானத்தில் சென்ற முதல் நபர் ஆவார்.
படிப்பு நேரம் போக மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்து வந்த வருமானத்தில் குடும்பத்திற்கு பெரும் உதவியாக அவர் இருந்துள்ளார். பயல் காதிக் படித்து முடித்ததும் நல்ல வேலைக்கு சென்றால் குடும்பம் வறுமையில் இருந்து மீளும் எனவும், கடனை திருப்பி செலுத்தி விடலாம் எனவும் தந்தை நினைத்துள்ளார். லண்டன் செல்வதற்காக தயாரான பயல் காதிக் சம்பவத்தன்று காலை 10 மணிக்கே விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்து அவரை வழியனுப்பி வைத்தனர். ஆனால் விதியோ... பயல் காதிக் விமான விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இவரது இழப்பு அவரது குடும்பத்தினரை மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
விமான நிலையத்திற்கு வெளியே குடும்பத்தினருடன் பயல் காதிக் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.