இந்தியா (National)
சி.ஆர்.பி.எப். பள்ளி அருகே குண்டுவெடிப்பு- டெல்லியில் பரபரப்பு
- குண்டுவெடிப்புக்கான காரணத்தை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
- அருகாமையில் உள்ள கடைகளின் பெயர் பலகையும் சேதமடைந்துள்ளது.
டெல்லி ரோகினியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது, ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
வெடிவிபத்தைத் தொடர்ந்து தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை சரியாக 7.47 மணிக்கு சிஆர்பிஎப் பள்ளி அருகே பிரஷாந்த் விகாரில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மூத்த காவல் துறை அதிகாரி அமித் கோயல் வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்தில் நடத்திய சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்த வெடிவிபத்து காரணமாக அருகில் நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடிகள் சேதமடைந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அருகாமையில் உள்ள கடைகளின் பெயர் பலகையும் சேதமடைந்துள்ளது.