இந்தியா

நோயாளிக்கு பதிலாக அவரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்.. ராஜஸ்தானில் ஷாக்
- ஜெகதீஸுக்கு ஏற்கனவே முடக்கு வாதம் உள்ளதால் அவரால் பேச முடியாது.
- மருத்துவர்கள் இடது காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் சேர்ந்தவர் மணிஷ். இவருக்கு சமிபத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் கோட்டா பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்களின் அவரின் இடது காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய நாள் குறிக்கப்பட்டிருந்தது. மணிஷுக்கு துணையாக அவரது தந்தை ஜெகதீஸ் மருத்துவமனையில் உடன் இருந்தார். ஜெகதீஸுக்கு ஏற்கனவே முடக்கு வாதம் உள்ளதால் அவரால் பேச முடியாது.
சம்பவத்தன்று மணிஷ் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே ஜெகதீஸ் இருந்தார். அங்கு வந்த மருத்துவர்கள் சிலர் ஜெகதீஸ் என்பவரை சிகிச்சைக்காக அழைத்துள்ளனர்.
அப்போது இவர் தனது கையை உயர்த்தினார். பின்னர் அந்த மருத்துவர்கள் ஜெகதீஸை ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்துச் சென்று அவரது கையில் அறுவை சிகிச்சை செய்ய தொடங்கினர்.
இதனை அறிந்த அவரது மகன் மணிஷ் அதிர்ச்சியடைந்தார். இதனால் உடனடியாக அங்கு சென்ற மணிஷ் மருத்துவர்களிடம் வாக்கு வாதம் செய்தார்.
இதனையடுத்து அவரது தந்தைக்கு கையில் 6 தையல் போடப்பட்டு திருப்பி அனுப்பி உள்ளனர். நோயாளி என நினைத்து மற்றொரு நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.