இந்தியா

காமேனி கொலை: ஜம்மு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் இடையே கடும் மோதல்
- ஷியா முஸ்லிம் சமூகத்தினர் காமேனியைத் தங்கள் ஆன்மீகத் தலைவராக கருதுகின்றனர்.
- கூட்டத்தை கலைக்கக் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.
ஈரானில் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கடந்த சனிக்கிழமை அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஷியா முஸ்லிம் சமூகத்தினர் காமேனியைத் தங்கள் ஆன்மீகத் தலைவராகக் கருதுவதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று, ஸ்ரீநகரின் மையப்பகுதியான லால் சவுக்கில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அங்கு வந்தனர்.
இதற்கிடையே இன்று ஸ்ரீநகரின் பட்டமாலு பகுதியில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
அங்கு காமேனியின் உருவப்படங்கள் மற்றும் கருப்புக்கொடிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
தடைகளை மீறி முன்னேற முயன்ற போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் மீது கற்களை வீசித் தாக்கினர்.
வன்முறையைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தப்பட்டது. மேலும் கூட்டத்தை கலைக்கக் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.
நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து, பல பகுதிகளில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன மற்றும் கூடுதல் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.





