இந்தியா

உலகின் 5வது நாடு... 80 கி.மீ. வேகத்தில் சென்றால் சாலையில் ஒலிக்கும் ஏ.ஆர்.ரகுமான் பாடல் - எங்கு தெரியுமா?
- கார் கண்ணாடி மூடப்பட்டிருந்தாலும் கூட, இந்த இசை காருக்குள் இருப்பவர்களுக்குத் தெளிவாகக் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- சாலையில் 'ரம்பிள் ஸ்டிரிப்ஸ்' பயன்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையின் தர்மவீர் பகுதியில் இந்தியாவின் முதல் "மெலோடி சாலை" திறக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் முதல் இசை சாலை திறக்கப்பட்டுள்ளது. தர்மவீர் பகுதியில் உள்ள கடற்கரை சாலையில் அமர்சன்ஸ் கார்டன் முதல் பிரீச் கேண்டி வரையிலான பகுதியில் வாகனங்கள் 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் செல்லும்போது, ஏ.ஆர்.ரகுமானின் புகழ்பெற்ற "ஜெய் ஹோ" பாடல் தானாகவே ஒலிக்கும் வகையில் சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சிக்குட்பட்ட இந்த சாலையை நேற்று முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தனர். ஹங்கேரி நாட்டு நிபுணர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், சாலையை இசைக்கருவிப்போல மாற்றியுள்ளது.
எவ்வாறு சாலையில் ஒலி எழும்பும்?
சாலையில் மின்னணு ஸ்பீக்கர்களுக்குப் பதிலாக 'ரம்பிள் ஸ்டிரிப்ஸ்' பயன்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் மணிக்கு 70–80 கி.மீ. என்ற வேகத்தில் இந்தப் பள்ளங்களின் மீது உருண்டு செல்லும்போது, அதன் உராய்வினால் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அதிர்வுகள் ஒலி அலைகளை உருவாக்கி, எந்தப் பாடல் பொருத்தப்பட்டுள்ளதோ அப்பாடலின் குறிப்பிட்ட இசைப்பகுதி ஒலிக்கும்.
கார் கண்ணாடி மூடப்பட்டிருந்தாலும் கூட, இந்த இசை காருக்குள் இருப்பவர்களுக்குத் தெளிவாகக் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஓட்டுநர்களுக்கும், பயணிகளுக்கும் ஒரு புது அனுபவத்தை தருகிறது. இதன்மூலம் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய உலகின் ஐந்தாவது நகரமாக மும்பை உள்ளது. இதேபோல ஹங்கேரி, ஜப்பான், தென் கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த யோசனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் ஷெவாலேவால் முன்மொழியப்பட்டது.





