புதுச்சேரி

புதுச்சேரியில் மீண்டும் பரபரப்பு- வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மீனவர்
- சிறுமியின் தாய் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து பூவரசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பெண் பிள்ளைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால்பேட்டை வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் பூவரசன் (வயது 45). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவர் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார். அவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். பூவரசன் அடிக்கடி அந்த பெண் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூவரசன் வழக்கம் போல் அந்த பெண் வீட்டுக்கு சென்றார். அப்போது அந்த பெண் வீட்டில் இல்லை. அவருடைய மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பூவரசன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த சிறுமி வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து பக்கத்து வீட்டில் தஞ்சம் புகுந்தார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே பூவரசன் அங்கிருந்து சென்று விட்டார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து பூவரசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியில் கடந்த 10 நாட்களில் 3 சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். தற்போது மீண்டும் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் பெண் பிள்ளைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.