புதுச்சேரி

அவதூறு பேசியதாக பா.ம.க. வழக்கு: திருமாவளவன் நேரில் ஆஜராக விலக்கு அளித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு
- திருமாவளவன் அவதூறாக பேசியதாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- திருமாவளவன் தரப்பு வக்கீல் கார்த்திகேயன் மனு தாக்கல் செய்திருந்தார்.
சேதராப்பட்டு:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த 2014-ம் ஆண்டு ஏ.எப்.டி.மில் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக பா.ம.க.வை சேர்ந்த மதியழகன் என்பவர் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருமாவளவன் அவதூறாக பேசியதாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக திருமாவளவன் ஒருமுறை நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்நிலையில் திருமாவளவன் தரப்பு வக்கீல் கார்த்திகேயன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் இந்த வழக்கு தொடர்பாக திருமாவளவன் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நீதிபதி சேரலாதன் அளித்த உத்தரவில், பா.ம.க.வை சேர்ந்த மதியழகன் தாக்கல் செய்த இந்த வழக்கு விசாரணையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் ஆஜராக விலக்களிப்பதாக உத்தரவிட்டார்.