புதுச்சேரி

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதலில் தேசிய அளவில் புதுச்சேரிக்கு முதலிடம்
- பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது பற்றி அனைத்து மாநிலங்களும் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்தது.
- 15 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை அமைச்சகம் 6 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறது.
இந்த கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், சுற்றுச்சூழல் துறை செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கடந்த மாதம் 27-ந்தேதி தேசிய சிறப்பு ஆய்வு கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது பற்றி அனைத்து மாநிலங்களும் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில் பிளாஸ்டிக் பறிமுதல் செய்ததில் தேசிய அளவில் புதுச்சேரி மாநிலம் முதலிடமும், பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவதில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. இங்கு கடந்த 2024-ம் ஆண்டில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் 1,305 ஆய்வுகள் நடத்தப்பட்டு, சுமார் 15 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் டெல்லி முதலிடமும், மராட்டியம் 2-வது இடமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.