என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    கட்டாயம் தவிர்க்க வேண்டிய கடன்கள்
    X

    கட்டாயம் தவிர்க்க வேண்டிய கடன்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெலுங்கானாவில் நடந்த தொடர் தற்கொலைகள் இந்த ஆப்களின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின.
    • ஆப் கடன் வலையில் சிக்குவது 21 வயது முதல் 40 வயது வரை உள்ள தினக்கூலிகள், விவசாயக்கூலிகள், மாணவர்கள், மற்றும் சிறுவணிகர்கள்.

    மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வத்தை நோக்கிய நம் பயணத்தில் தடைக்கல்லாக மறிக்கும் கடனை படிக்கல்லாக மாற்றும் சூட்சுமம் என்ன என்று பார்த்து வருகிறோம். நல்ல கடன்கள் எவை, கெட்ட கடன்கள் எவை, அவை நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்று கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில் கட்டாயம் தவிர்க்கவேண்டிய மிக மோசமான கடன்கள் குறித்தும், பழக்கங்கள் குறித்தும் பார்க்கலாம்.

    அளவுக்கு மீறி பொருட்களைக் கடனில் வாங்கிக் குவிப்பவர்கள் ஒரு சிலரே. கல்வி, பிசினஸ், வீடு வாங்குதல் போன்ற பெரும் செலவுகளை சமாளிக்க முடியாமல் கடன் வாங்குபவர்கள்தான் அதிகம். அவர்களுக்குக் கடன் தர வங்கிகள், என்.பி.எப்.சி.க்கள் போன்ற நிதி நிறுவனங்கள் தயாராக உள்ளன. சரியான ஆவணங்கள், நியாயமான வட்டி விகிதம், மென்மையான அணுகுமுறை போன்றவற்றை இந்த நிறுவனங்களில் காணலாம். நம்மில் பெரும்பாலானோர் இந்த நல்ல கடன்களைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறியுள்ளோம்.

    ஆனால் இதுவரை மென்மையான போக்கைக் கடைப்பிடித்த வங்கி போன்ற நிதி நிறுவனங்களும் இப்போது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. ஏனெனில், சமீப காலங்களில் பொது மக்களின் சிறுகடன்கள் ஒழுங்காகத் திருப்பிக் கட்டப்படாததால் நிதி நிறுவனங்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. ஆகவே இந்த நிறுவனங்கள் போன், கடிதம், இமெயில் போன்ற பலவழிகளிலும் முயன்று பார்த்துவிட்டு, நீண்ட காலமாகக் கட்டப்படாத கடன்களை வசூலிக்கும் பொறுப்பை ஏஜன்டுகளிடம் தந்துவிடுகின்றன.

    இந்த வசூல் ஏஜன்டுகள் விதிமுறைகளை மீறி, கடனாளிகளின் வீடு, பணியிடம் போன்றவற்றுக்குச் சென்று அவர்களை வதைக்கின்றனர். கடன் தொல்லையில் தான் தவிப்பதை வெளியில் சொல்லும் தைரியம் இன்னும் பலபேருக்கு வரவில்லை. கடனை திரும்பிக் கட்ட வழி இல்லாமல், ரெக்கவரி ஏஜன்டுகளின் தொல்லை பொறுக்க இயலாமல் தற்கொலைக்கு முயல்பவர்கள் அநேகம். வேறு சிலரின் நிலைமை இன்னும் மோசம். அவர்கள் மாதச் செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலையில்தான் உள்ளனர். வங்கிகளிலும், என்.பி.எப்.சி.க்களிலும் இந்தக் கடன் கிடைக்காது என்பதால் தவிக்கும் இவர்களை கண் சிமிட்டி இழுப்பவை பிரபல பிளே ஸ்டோர்களில் கூட ஒளிந்திருக்கும் விபரீத ஆப்கள்.

    முகம் தெரியாத நிறுவனங்கள் தரும் ஆப்களை டவுன்லோட் செய்வதன் மூலம் சிறு கடன்களைப் பெற்று, அவற்றைத் திருப்பித் தர இயலாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகித் தவிக்கும் மக்கள் ஏராளம். தெலுங்கானாவில் நடந்த தொடர் தற்கொலைகள் இந்த ஆப்களின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின.

    கிரெடிட் கார்டுகளில் வட்டி விகிதம் 36 சதவீதம். இதுவே மிக அதிகம். ஆனால் கடன் ஆப்களில் வட்டி விகிதம் அதை விடப் பல மடங்கு அதிகம். வங்கிக் கடனைத் திருப்பிக் கட்ட குறைந்த பட்சம் ஒரு வருட காலம் அவகாசம் தருவார்கள். ஆனால் இந்த ஆப் கடன்களுக்கான காலம் ஏழு நாட்கள் முதல் ஒரு மாதம் வரை மட்டுமே. வங்கிகளில் பிராசஸிங் சார்ஜஸ் 1 சதவீதம்-3 சதவீதம் என்றால், இந்த ஆப்களில் அது 15 சதவீதம் முதல் 20 சதவீதம், அவற்றுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வேறு விதிக்கப்படும்.

    சுந்தரி ஜகதீசன்

    ஆனால் இது எதையும் புரிந்து கொள்ளாமல், அவசர காலத்தில் உடனடியாக கடன் கிடைப்பது ஒன்றையே கவனத்தில் கொண்டு, மக்கள் இவற்றில் கடன் பெறுகின்றனர். ஒருமுறை இந்த வலையில் விழுந்துவிட்டால் கரையேறுவது சிரமம். உதாரணமாக தினக்கூலியில் வாழ்க்கை நடத்தி வந்த ஒரு பெயின்டருக்கு ஒரு முறை மருத்துவச் செலவுக்காக மூவாயிரம் ரூபாய் தேவைப்பட்டுள்ளது. முறையாக மாதச் சம்பளம் இல்லாததால் வங்கிக் கடன் கிடைக்கவில்லை. மிகுந்த தவிப்பில் இருந்த அவருக்கு ஒரு என்.பி.எப்.சி. நிறுவனம் நடத்தும் போன் ஆப், வெறும் ஒரு போட்டோ ஐ.டி., ஆதார் நம்பர் மற்றும் ஒரு செல்பி புகைப்படம் –இவற்றைப் பெற்றுக் கொண்டு, இரண்டே மணி நேரத்தில் கடன் தந்தது.

    கடன் கிடைத்த களிப்பில் அவர் கவனிக்காத விஷயம் –ரூ.3000 கடனை ஒரே வாரத்தில் ரூ.4300 ஆக அவர் திருப்பித் தரவேண்டும் என்பது. அந்த ஏழே நாள் கடனுக்காக பிராசஸிங் சார்ஜஸ், வட்டி, ஜி.எஸ்.டி என்று அவர் அதிகமாக தரவேண்டிய தொகை ரூ.1300. இவற்றை பொருட்படுத்தாமல் அவர் கடனை அடைப்பதும், மீண்டும் பெறுவதுமாக இருந்தார். ஒருமுறை அவருக்கு வருமானம் குறைந்ததால், அவரால் குறித்த காலத்தில் அந்தக் கடனை அடைக்கமுடியவில்லை. அவருக்கு ஒரு நாளைக்கு ஒரு சதவிகிதம் என்ற ரீதியில் விதிக்கப்பட்ட பெனால்ட்டி மட்டுமே ரூ.5600 ஆக வளர்ந்து நின்றது. பிறகு ஆரம்பித்தது நரகவேதனை.

    கடன் நிறுவனமான ஃபோன் ஆப், அவரது போனில் உள்ள அவரது உறவினர் மற்றும் நட்பு வட்டாரங்களைத் தொடர்பு கொண்டு அவரின் நல்ல பெயரை நாசப்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் மூலம் பொய்யான போலீஸ் அறிக்கைகள் மற்றும் சட்ட நோட்டீஸ்கள் அவருக்கு அனுப்பப்பட்டன. மானத்துக்கு அஞ்சி தற்கொலையின் விளிம்பு வரை சென்ற அவர், மிகப் பெரும் போராட்டத்தின் பிறகே அந்தக் கடன் வலையில் இருந்து தப்ப முடிந்தது. இந்தப் புதிய ரக டிஜிட்டல் கந்து வட்டி முதலைகளால் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உயிருடன் விழுங்கப்படுகின்றனர். பல எளிய மக்களுக்கு டிஜிட்டல் அறிவோ, ஆங்கில அறிவோ இருப்பதற்கில்லை; ஆனால் மிக ஆபத்தான கடன்கள் போன் ஆப் வடிவில் எளிதாகக் கிடைக்கின்றன.

    இந்த ஆப் கடன் வலையில் சிக்குவது 21 வயது முதல் 40 வயது வரை உள்ள தினக்கூலிகள், விவசாயக்கூலிகள், மாணவர்கள், மற்றும் சிறுவணிகர்கள். அவர்களில் பலர் இதில் உள்ள ஆபத்து புரியாமல் நான்கைந்து ஆப்களை டவுன்லோடு பண்ணி வைத்துக் கொண்டு, அத்தனையிலும் கடன் பெற்று வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். இந்த ஆப்களில் பல, இந்தியாவில் ரெஜிஸ்டர் செய்யப்பட்டவை அல்ல; வெளிநாடுகளில், முக்கியமாக சீனாவில் இருந்து இங்குள்ள என்.பி.எப்.சி.களின் துணையுடன் இயங்குபவை. இவற்றைக் கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது.

    "கடன் வாங்குவதைக் குறைக்கவேண்டும் என்பது புரிகிறது; ஆனால் சிறிதும், பெரிதுமாக ஏற்கெனவே உள்ள கடன்களில் இருந்து எப்படி மீள்வது?" என்று கேட்கிறீர்களா? இதற்கு சில வழிகள் உண்டு. முதலில் உங்கள் கடன்களை சிறியதில் இருந்து பெரியது வரை பட்டியலிடுங்கள். கையில் கிடைக்கும் உபரித் தொகைகள் எவ்வளவு சிறியதானாலும் அவற்றை சிறு கடன்களை அடைக்க உபயோகப்படுத்துங்கள். இதன் மூலம் கடன்களின் எண்ணிக்கை குறைந்து ஒரு சில பெரிய கடன்கள் மட்டுமே மீதம் இருக்கும். கடன்களின் எண்ணிக்கை குறையக் குறைய உங்கள் உற்சாகம் அதிகரித்து மனம் கடன் கட்டுவதிலேயே குவிந்து நின்று உங்களை மீட்கும்.

    அல்லது உங்கள் கடன்களை வட்டி விகிதவாரியாகப் பட்டியலிடுங்கள். அதிக வட்டி வசூலிக்கும் கடனைக் குறி வைத்து சீக்கிரம் அடைக்கமுடிந்தால் உங்கள் வட்டிச்செலவு குறையும். அந்தப் பணத்தையும் சேர்த்து அடுத்தடுத்த கடன்களை வேகமாக அடைக்கமுடியும்.

    அல்லது நகைக் கடன், அடமானக் கடன் போன்று வட்டிவிகிதம் குறைவாக இருக்கும் ஒரு கடனில் பெரிய தொகையை எடுத்து அதிக வட்டி விகிதம் விதிக்கும் கடன்களை அடைப்பதன் மூலம் கடன்கள் எண்ணிக்கையையும், வட்டிச்செலவையும் குறைக்கலாம். சிலர் கிரெடிட் கார்ட், ஆப் கடன் போன்று 40 சதவீதம் வட்டி விகிதம் உள்ள கடன்கள் இருக்கும்போது, அவற்றை அடைக்காமல் 7 சதவீதம் தரும் வங்கி எப்.டி., 10 சதவீதம் தரும் மியூச்சுவல் பண்ட் ஆகியவற்றில் சேமித்துக் கொண்டு இருப்பார்கள். இவர்கள் சேமிப்பை சற்று நிறுத்தி வைத்து, அந்தத் தொகையையும் கடன்களின் எண்ணிக்கையைக் குறைக்க உபயோகிப்பது நல்லது.

    கடன் கொடுத்த நிறுவனத்திற்கும், கடனாளிகளுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு, கடனை அடைப்பதற்கு உதவும் கடன் ஆலோசனை மையங்கள் தற்போது நம் நாட்டிலும், பெரிய நகரங்களில் செயல்படத் துவங்கியுள்ளன. கடனாளியின் சார்பாக கடன் நிறுவனங்களை அணுகி, கட்ட வேண்டிய தொகையைக் குறைப்பதற்கு ஆலோசகர்கள் வழி வகுக்கிறார்கள். இதனால் கடன் வாங்கியவர், கொடுத்தவர் என இரு பாலாருமே பயன் அடைகிறார்கள். ஆனால் இவற்றைத் தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த கவனம் தேவை.

    இந்தக் கடன் வலைகளில் இனி விழக்கூடாது என்றால் கீழ்க்காணும் முறைகளைப் பின்பற்றலாம். வெள்ளம் போல் இன்று வரும் வருமானம், காலம் முழுவதும் தொடரும் என்று எண்ணிக் கொண்டு கடன்களை வாங்கிக் குவிக்கக்கூடாது. ஒரு சமயத்தில் ஓரிரண்டு கடன்கள் மட்டுமே இருக்கலாம். ஒரு கடன் முடிந்தபின் அடுத்த கடனை வாங்கலாம்.

    நம் வருமானத்தில் கடன் இ.எம்.ஐ. 30 சதவீதத்துக்கும் மிகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வருமானத்தில் இத்தனை பர்சென்ட் செலவு, இத்தனை பர்சென்ட் சேமிப்பு என்று முடிவு செய்து, அதனைப் பின்பற்றினால், வருமானம் கூடக்கூட செலவும், சேமிப்பும் சீராக அதிகரிக்கும்; அதன் மூலம் லைப்ஸ்டைலும் உயரும். எளிதில் கிடைக்கிறதே என்பதற்காகக் கடனை வாங்கி அதனை அநாவசிய செலவுகளில் ஊதித் தள்ளும் ஒரு சாரார் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. –அநாவசியமாகக் கடன் வாங்கக்கூடாது என்ற கட்டுப்பாடும், சரியாகக் கடனைக் கட்டும் ஒழுக்கமும் நம்மிடம் இல்லையெனில் செல்வந்தர் ஆவது பற்றி நாம் கனவு கூடக் காணமுடியாது என்பதே அது.

    உங்களிடம் எத்தனை கடன்கள் உள்ளன என்று பட்டியலிடுங்கள். அவற்றில் எதை முதலில் அடைக்கலாம் என்று திட்டமிட்டு செயல்படுங்கள்.

    ஆல் த பெஸ்ட்!

    Next Story
    ×