சிறப்புக் கட்டுரைகள்

கைரேகை சாஸ்திரம் கூறும் வாழ்வியல் பலன்கள்
- கைரேகை சாஸ்திரத்தை நுணுக்கமாக ஆராய்ந்து உலகுக்குச் சொன்ன மேதை சீரோ.
- இவ்வாறு பெண்களுக்கு இருந்தால் மூன்றுக்கு ஒரு பங்கு சுப பலனும் மூன்றுக்கு இரண்டு பங்கு பாவ பலனும் உண்டாகும்.
"உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்பார்கள்". இது கைரேகை சாஸ்திரத்தை பொறுத்தவரையில் சத்தியமான ஒன்று. கைரேகை சாஸ்திரம் என்பது ஒருவரின் கையில் உள்ள ரேகைகளை வைத்து அவரது குணாதிசயங்கள், கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய விவரங்களைச் சொல்வதாகும்.
19ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் கைரேகை சாஸ்திரத்தை நுணுக்கமாக ஆராய்ந்து உலகுக்குச் சொன்ன மேதை சீரோ. இவர் இந்தியாவுக்கு வந்து, கைரேகை சாஸ்திர நிபுணர்களோடு் கலந்துரையாடி, ஆராய்ச்சி செய்து இந்த சாஸ்திரத்தை எளிய முறையில் எல்லோரும் அறியச் செய்தார். இவரைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் பல்வேறு அறிஞர்கள் இந்த சாஸ்திரத்தைப் பயின்று, அந்தந்த நாட்டு மக்களின் கலாசாரத்தை அனுசரித்து பலன்கள் சொல்லி வருகிறார்கள்.
எனினும் இது, சுமார் 5000 வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் முனிவர் பெருமக்களால் அறியப்பட்டு, உலகுக்கு அருளப்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். வால்மீகி மகரிஷி எழுதிய 'ஆண்களுக்கான ரேகை சாஸ்திரம்' என்ற நூலில் கைரேகை சாஸ்திரம் தொடர்பான விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மகாபாரத காலத்தில், பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் இந்த சாஸ்திரத்தைப் பரப்பினார். இந்தியாவில் இருந்து இந்த சாஸ்திரம் திபெத், எகிப்து, பெர்ஸியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகமானது.
''மனிதனின் கைகளில் உள்ள ரேகைகள் வெறும் கோடுகள் அல்ல; அது அவன் வாழ்க்கை வழிமுறை பற்றி இறைவனால் எழுதப்பட்ட வாசகங்கள்'' என்று கூறியுள்ளார் கிரேக்க நாட்டு அறிஞர் அரிஸ்டாடில்.
ஜோதிடர் அ.ச.இராமராஜன்
கி.மு. 350ல் உலகையே வென்ற மாமன்னன் அலெக்சாண்டர் இந்த சாஸ்திர அறிவு பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ராணுவ வீரர்களைத் தேர்ந்தெடுக்கும்போது தக்க அறிஞர்களைக் கொண்டு வீரர்களின் கைரேகைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தே முடிவெடுப்பது அலெக்சாண்டரின் வழக்கம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நமது உள்ளங்கையில் உள்ள ரேகைகள்தான் நமது தோற்றம், குணாதிசயங்கள், செயல்திறன், அறிவுத்திறன், ஆற்றல் திறன், வாழ்க்கை முறை ஆகியவற்றை விளக்க வல்லவை ஆகும்.
தோல்வி மனப்பான்மை, மனச்சோர்வு, செயலின்மை, சோம்பேறித்தனம் இவை நீங்கி, புதிய உற்சாகம், செயல்படும் திறன், தன்னம்பிக்கை, வெற்றிக்காக உழைக்கும் ஊக்கம் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொண்டு, 'தன் கையே தனக்குதவி' என திட சித்தத்துடன் முன்னேறவும், ஓரளவு நமது எதிர்காலத்தை நாமே ஊகித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ளவும் கைரேகை ஜோதிடம் நமக்கு உதவுகிறது.
இந்த கைரேகையை எப்படி பார்த்து கணிப்பது என்பது பற்றி விரிவாக காண்போம்.
ஆண்கள் என்றால் வலது கையில் பார்க்க வேண்டும். பெண்கள் என்றால் இடது கையில் பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். இது பொதுவாகச் சொல்லக் கூடியது தான். எனினும் அனுபவ ரீதியாகப் பார்க்கும் போது இரண்டு கையிலும் உள்ள ரேகையை பார்த்தால் தான் துல்லியமாக நாம் கணக்கிட்டுச் சொல்ல முடியும்.
ஆண்களுக்கு இடக்கை ரேகையைப் பார்த்து நாற்பது வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், வலக்கை ரேகையைப் பார்த்து நாற்பது வயதிற்கு பிறகு நடக்கப்போகிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் பெண்களுக்கு வலக்கை ரேகையைப் பார்த்து நாற்பது வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், இடக்கை ரேகையைப் பார்த்து நாற்பது வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும்.
ஓர் ஆடவரின் இடக்கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலவீனமாக இருக்க, அவரது வலக்கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால், அவர் நாற்பது வயது வரை பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து, பின்னர் வாழ்நாளில் படிப்படியாக அவர் வெற்றியை ஈட்டுவார் என்கிறது கை ரேகை சாஸ்திரம். அதுவே, இரண்டு கைகளில் உள்ள ரேகைகளும், மேடுகளும் பலமாக இருந்தால் அந்த நபர் வாழ்நாள் முழுவதும் நல்ல சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவார். எனினும் இவ்வாறு அமைவது என்பது அதிசயம்.
ஆண்களுக்கு வலக்கை ரேகை சிறப்பாக இருக்க, இடக்கை ரேகை அம்சங்கள் பலவீனமாக இருந்தால் இவர்களுக்கு மூன்றுக்கு இரண்டு பங்கு சுப பலனும் மூன்றுக்கு ஒரு பங்கு பாவ பலனும் உண்டாகும் என அறிய வேண்டும். இவ்வாறு பெண்களுக்கு இருந்தால் மூன்றுக்கு ஒரு பங்கு சுப பலனும் மூன்றுக்கு இரண்டு பங்கு பாவ பலனும் உண்டாகும். அதாவது ஆண்களுக்கு வலக்கை ரேகையும், பெண்களுக்கு இடக்கை ரேகையும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்ல வேண்டும்.
கைரேகை சாஸ்திரமும் ரேகைகளும்: ஆண்களுக்கு வலக்கை ரேகையையும், பெண்களுக்கு இடக்கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் ஆய்வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும்.
பொதுவாக கைகளில் காணப்படும் முக்கியமான ரேகைகள்:
1. ஆயுள் ரேகை
2. புத்தி ரேகை
3. இதய ரேகை
4.சுக்கிரனின் வட்டப்பாதை (இது அனைவர் கையிலும் இருக்காது)
5. சூரிய ரேகை
6. புதன் ரேகை
7. விதி ரேகை
கைரேகை மேடுகள்:
மேடுகளின் படி விரல்களையும்
குருவிரல் (ஆட்காட்டி விரல்),
சனி விரல் (நடு விரல்),
சூரிய விரல்(மோதிர விரல்),
புதன் விரல் (சுட்டு விரல்)
என்கிறார்கள்.
ஆனால் கட்டை விரலை சுக்கிரவிரல் என்று கூறவில்லை.
ஒவ்வொரு ரேகைகள் குறித்தும் விரிவான தகவல்களை இனிவரும் தொடர்களில் பார்க்கலாம்...
செல்: 9965799409