சிறப்புக் கட்டுரைகள்

நீலத்திரைக் கடல் ஓரத்திலே..!
- புகழ் பெற்ற அருவிகள் இங்கு மக்கள் அனைவரையும் வருக வருக என்று அழைக்கின்றன.
- சிவபிரான் வருவார் என்று காத்திருந்த குமரியம்மன் அவர் வராததால் எல்லையற்ற கோபம் கொண்டாள்.
இந்தியாவின் அற்புதமான ஒரு நகராகத் திகழ்வது கன்னியாகுமரி நகர். இந்து மா கடல் தெற்கிலும் வங்காள விரிகுடா கிழக்கிலும் அரபிக்கடல் மேற்கிலும் இருக்க இந்த முப்பெரும் கடலின் சங்கம இடத்தில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது.
இங்குள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவை நமது பாரம்பரியத்தை விளக்கிக் கொண்டிருக்கின்றன.
அருகில் சுசீந்திரம், திருக்குற்றாலம், தென்காசி, திருநெல்வேலி, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கும் சென்று புத்துணர்ச்சி பெறலாம். இவற்றை இங்கு பார்ப்போம்.
திருக்குற்றாலம்
குற்றால அழகினையும், சிறப்பினையும் பற்றி குற்றாலத்தை அடுத்துள்ள மேலகரத்தில் 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த திரிகூட ராசப்பக் கவிராயர் தான் இயற்றிய குற்றாலக் குறவஞ்சியில் அற்புதமாகக் கூறியுள்ளார்.
எடுத்துக்காட்டிற்கு ஒரு பாடல்:
வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்;
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்;
கானவர்கள் விழி எறிந்து, வானவரை அழைப்பார்;
கவன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்;
தேன் அருவித் திரை எழும்பி, வானின் வழி ஒழுகும்;
செங்கதிரோன் பரிக் காலும் தேர்க் காலும் வழுகும்;
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே!
குற்றாலக் குறவஞ்சி பாடல் எண் 67
தென்காசியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள குற்றாலத்தின் எழிலையும் அருவிகளின் வனப்பையும், இயற்கைச் சூழலையும் மலையின் புனிதத்தையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஒன்பது புகழ் பெற்ற அருவிகள் இங்கு மக்கள் அனைவரையும் வருக வருக என்று அழைக்கின்றன. பேரருவி, ஐந்தருவி, புலி அருவி ஆகியவற்றில் ஜனக்கூட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். குற்றால மலையின் மீது ஏறி செண்பகா தேவி மற்றும் தேனருவியை நெருங்கினால் அங்கு விழும் நீர்வீழ்ச்சிகளையும் கண்டு ஆனந்திக்கலாம்.
புராண வரலாற்றின் படி சிவ-பார்வதி திருமணத்தின் போது தேவர்கள் அனைவரும் ஒருமிக்க கைலாசத்தில் கூடவே, வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. உடனே சிவபிரான அகத்திய முனிவரை நோக்கி தென்திசை ஏகி பூமியை சமனப்படுத்துமாறு பணிக்க அகத்தியர் பொதிய மலை வந்தார். பூமியும் சமனமாயிற்று.
அகத்தியர் பொதிய மலையிலிருந்து தமிழ் மொழியைப் பரப்பும் அரிய செயலில் ஈடுபட்டார்.
சிவபிரான் கோவில் கொண்டுள்ள இடம் குற்றாலம். அருவியில் குளித்து புத்துணர்ச்சி பெற்று ஆன்மீக எழுச்சி பெற குற்றால நாதரை தரிசிக்கலாம்.
இங்குள்ள காற்றில் ஆக்ஸிஜனின் அளவு அபரிமிதமாக இருப்பதால் சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் இங்கு வந்து தங்கி அதை உடனே போக்கிக் கொள்வது வழக்கம். அற்புதமான அரிய வகை மூலிகைகளில் பட்டுத் தவழ்ந்து வரும் தென்றல் இதமாக உடல் மீது படுவதாலும் மூலிகைக் காற்றை சுவாசிப்பதாலும் அனைத்து விதமான நோய்களும் போய்விடும் என்பது நிபுணர்களின் அறிவுரை!
தென்காசி
இறைவர் : காசி விஸ்வநாதர்
இறைவி : உலகம்மை நாயகி
பொங்கி வரும் குற்றால நீர்வீழ்ச்சியிலிருந்து உருவாகி ஒடும் சிற்றாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். திருக்குற்றாலத்திற்கு ஆறு கிலோமீட்டர் முன்னதாகவே இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது.
இங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் எழுந்தது குறித்து சுவையான ஒரு வரலாறு உண்டு.
பிற்காலப் பாண்டிய மன்னர்களில் பெரிதும் போற்றப்பட்டு நல்லாட்சி செய்தவன் பராக்கிரம பாண்டியன். கி.பி. 1422ம் ஆண்டு வாக்கில் இவன் தென்காசியைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.
அவன் வடக்கில் காசி சென்று விஸ்வநாதரைத் தரிசிக்க விழைந்த போது அவன் கனவில் சிவபிரான் தோன்றி எனக்கு தென்காசியில் ஒரு கோவில் கட்டுக என்று அருள் பாலித்துக் கூறினார்.
உடனே 15 ஏக்கர் பரப்பளவில் சுமார் 17 ஆண்டுகளில் மிகப் பெரும் கோவிலை அமைத்தான் பராக்கிரம பாண்டியன்.
திருச்செந்தூர் (அறுபடை வீடுகளில் இரண்டாவது)
சூரபன்மனை வதம் செய்ய முருகன் தன் பரிவார தேவதைகளுடன் வந்து முகாமிட்ட தலம் திருச்செந்தூர். சூரனை அடியோடு அழித்து அவனைச் சேவற் கொடியாக மாற்றிக் கொண்ட தலம் இது என்பதால் இதற்கு ஜயந்தி நகரம் என்ற பெயர் உண்டு.
சூரனை வதம் செய்ததும் தன் பரிவார தேவதைகளுக்கு முருகன் தன் பன்னிரு கைகளினாலேயே விபூதி பிரஸாதம் வழங்கினார். முருகனின் பன்னிரு கைகளின் ஸ்தானத்தை இன்று பன்னீர் இலை பெற்று, திருச்செந்தூர் இலை பிரஸாதம் என்று பக்தர்களின் கைகளுக்கு வந்து சேர்கிறது.
இது அலைவாய்த் தலம் என்பதால் இங்கு வழிபடும் போது நமது மனதில் எழுகின்ற எண்ணங்கள் ஓய்ந்து மன அமைதி கூடும்; இறையருள் சித்திக்கும். கடற்கரை ஓரம் அமைந்துள்ள திருச்செந்தூர் தல தரிசனம் வெற்றியைத் தரும்; வளமான வாழ்க்கையைத் தரும்! லட்சக்கணக்கில் பக்தர்கள் இங்கு கூடுவது இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் ஒன்றாகும்.
ச.நாகராஜன்
திருநெல்வேலி
தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் தன்பொருனை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இது அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்தத் தலமானது சில காலம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகவும் திகழ்ந்த தலமாகும்.
இறைவன்: நெல்லையப்பர் வேணுவன நாதர் உள்ளிட்ட பல பெயர்கள் இறைவி: காந்திமதியம்ம, வடிவுடையம்மை
இந்த நகரின் பழம்பெருமை சொல்லி முடியாது. இறைவன் திருவிளையாடல் நடத்தியதால் திருநெல்வேலி என்ற பெயர்க் காரணம் ஏற்பட்டது என்பது பற்றியு புராண வரலாறு உண்டு.
கன்யாகுமரி
பாரதத்தின் தென் கோடியில் உள்ள இந்தத் தலம் நாகர்கோவிலிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடம் இது. இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.
முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்னும் அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிய பிரம்மா அவன் முன் தோன்றி அவனுக்கு வரம் அளிக்கத் திருவுள்ளம் கொண்டார். ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் வரக் கூடாது என்று அந்த அசுரன் வேண்ட, அந்த வரத்தை அருளினார் பிரம்மா. மிக்க வலிமை உடைய அசுரன் கன்னிப் பெண்ணால் தனக்கு அழிவு ஏற்படவே முடியாது என்ற எண்ணத்தால் தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான். தேவர்கள் திருமாலை அணுக அவர் பாணாசுரனின் வரம் பற்றி விளக்கி சிவனை அணுகுமாறு கூறினார்.
சிவபிரானை அணுகிய தேவர்கள் தங்களின் குறையை முறையிட்டனர். சிவபிரான் இந்த அசுரனை அழிக்கத் தகுதி வாய்ந்தவள் தேவியே என்று கூற, தேவர்கள் தேவியை நோக்கித் தவம் புரிந்து வேண்டினர். அவர்களுக்கு அருள் புரிய எண்ணிய தேவி கன்னியாகுமரி தலத்தில் ஒரு பெண்ணாக அவதரித்தாள்.
கன்னியாக இருந்த தேவி சிவபிரானை மணக்க எண்ணிக் கடும் தவம் புரிந்தாள். அப்போது அருகில் சுசீந்திரத்தில் தாணுமாலயனாக இருந்த சிவபிரான் தேவியை மணக்க எண்ணினார். மணம் முடிந்தால் தங்கள் துயர் தீராதே என்று இதனால் தேவர்கள் பயந்தனர்.
ஆனால் தேவரிஷியான நாரதர் இதுவும் சிவபிரானின் அருள் விளையாடலே என்பதை உணர்ந்தார். சிவபிரானின் முன், அவர் ஒரு கோரிக்கையை வைத்தார். மணம் முடிக்கும் இடத்திற்கு மாப்பிள்ளையான சிவபிரான் சூரியோதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே வந்து விட வேண்டும் என்றும் அப்படி வரவில்லை எனில் மணம் நடக்காது என்றும் அவர் கூற அதை அப்படியே சிவபிரான் ஏற்றார்.
மண நாளன்று தாணுமாலயன் கன்னியாகுமரி இருந்த இடத்தை நோக்கி வரும் போது நாரதர் சேவல் வடிவில் இருந்து கூவினார்.
சிவபிரான் விடிந்து விட்டது என்பதால் தன் இருப்பிடம் திரும்பினார். தன்னை மணக்க சிவபிரான் வருவார் என்று காத்திருந்த குமரியம்மன் அவர் வராததால் எல்லையற்ற கோபம் கொண்டாள்.
திருமணத்திற்கென வைக்கப்பட்டிருந்த பண்டங்களையும் வண்ண மலர்களையும் கடற்கரைப் பரப்பில் வீசினாள்.
இதுவே கன்னியாகுமரி கடற்கரை வண்ணமயமாக இன்றும் காட்சி அளிப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாணாசுரன் கன்னியாகுமரியின் அழகில் மயங்கித் தன்னை மணக்குமாறு கோரினான். தேவி மறுத்தாள். ஆனால் தேவியை மணக்க எண்ணிய அசுரன் அவள் அருகில் வந்த போது தேவியானவள் வானுயரும் வடிவம் எடுத்து அசுரனைக் காலில் போட்டு வதம் செய்தாள்.
தேவர்கள் பூ மழை பொழிந்து தேவியின் உக்கிரத்தைத் தணித்தனர். தேவி சாந்தம் அடைந்து சிவபிரானை நோக்கிக் கடும் தவம் செய்ய ஆரம்பித்தாள். குமரி அம்மன் என்றும் பகவதி அம்மன் என்றும் துர்க்கை என்றும் பல்வேறு பெயர்கள் தேவிக்கு உண்டு.
தன் யோக சக்தி அனைத்தையும் அம்மன் தனது மூக்குத்தியில் இறக்கி வைத்திருப்பதால் அந்த மூக்குத்தி ஜொலிக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது. தூரத்தில் வரும் கப்பல்கள் மூக்குத்தி ஒளியால் வழி காட்டப்பட்டு வந்தன. சில மாலுமிகளோ மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்கம் என்று எண்ணி விபத்துக்குள்ளாயினர். ஆகவே கோவிலின் முன்புற வாயில் மூடப்பட்டு, வடக்குப் புறமாக வாயில் வைக்கப்பட்டது.
கிழக்கு நோக்கி கொண்டு பகவதி அம்மன் உள் மண்டப கர்பக்ருஹத்தில் எழுந்தருளியுள்ளாள். ஒரு கரத்திலே இலுப்பைப் பூ மாலையை தரித்து மற்றொரு கரத்தைத் தொடை மீது அமர்த்தி தவக்கோலத்தில் அம்மன் காட்சி அளிக்கிறாள்.
இங்கிருந்து சூரியோதயத்தைக் கண்டு மகிழ்வது சிறப்பாகும்.
கன்னியாகுமரி ஹிந்து மதத்தின் எழுச்சிக்கு வழி கோலிய அற்புதத் தலமாகும். இங்கு தான் ஸ்வாமி விவேகானந்தர் தனது பாரத யாத்திரையின் போது வந்து 1892 டிசம்பரில் அருகிலிருந்த பாறைக்கு நீந்திச் சென்று மூன்று நாட்கள் தவம் புரிந்தார். அலைகடலின் மீது தோன்றிய ராமகிருஷ்ணர் அவரை வா என்று அழைக்கவே அவர் அமெரிக்கா செல்ல இறுதி முடிவு எடுத்தார்; அங்கு சென்றார். உலகையே வென்றார். அவர் தவம் புரிந்த இந்தப் பாறையில் விவேகானந்தர் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்ல படகு வசதிகளும் உண்டு. இந்தப் பாறையின் முக்கிய சிறப்பு அம்சம் இங்கு தேவியின் ஸ்ரீ பாதம் அமைந்திருப்பது தான். தேவி தவம் புரிந்த பாறை இது என்பதால் இது ஸ்ரீபாதப்பாறை என்று அழைக்கப்படுகிறது. தேவியின் பாதச் சுவடு உள்ள இடம் தரிசனம் செய்யக் கூடியபடி அழகுற பாதுகாக்கப்பட்டிருக்கிறது;
இங்கு தான் உலகப் பொதுமறையான திருக்குறளை இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவரின் சிலையும் உள்ளது.
இப்படி தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு பயணம் மேற்கொள்பவர்கள் குற்றாலம், தென்காசி, திருச்செந்தூர், திருநெல்வேலி, சுசீந்திரம், கன்னியாகுமரி ஆகிய புகழ்பெற்ற இடங்களுக்குச் செல்ல நல்லதொரு பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். புத்துணர்ச்சியோடு தெய்வ அருளையும் பெறலாம்.
தொடர் முடிகிறது.
ஸ்ரீநகர், ஜெய்பூர், கோவா, கோவளம், மைசூர், விசாகப்பட்டினம், வழியாக ஒரிஸா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், பீஹார், ஹிமாசல் ப்ரதேசத்தில் உள்ள பல இடங்களுக்கும் சென்று கைலைமலை நாதனை தரிசித்து, தேவி கன்னியாகுமரியையும் தரிசித்ததோடு இந்தப் பயணத் தொடர் முடிவடைகிறது. ஊக்கமூட்டிய வாசகர்கள், மாலைமலர் நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.