சிறப்புக் கட்டுரைகள்

இஸ்லாமிய பக்தரின் கடனை அடைத்த செந்திலாண்டவன்!
- மீராக்கண்ணுவை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
- குலசேகரப்பட்டினம் பகுதியை ஆட்சி செய்து வந்த குறுநில மன்னன் கனவில் முருகப்பெருமான் தோன்றினார்.
திருச்செந்தூர் முருகப்பெருமான் இந்துக்களுக்கு மாத்திரம் சொந்தமானவன் அல்லன். அவன் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவன். அவனுக்குச் சாதி, மத பேதமில்லை. இதற்குச் சான்றாக எம்பெருமான் இசுலாமியர் ஒருவருக்கு அருளிய நிகழ்ச்சி விளங்குகிறது.
திருச்செந்தூர் அருகே உடன்குடி பக்கமுள்ள காலன் குடியிருப்பு பகுதியில் மீராக்கண்ணு புலவர் என்னும் இஸ்லாமியப் பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். பனை ஓலையில் பாய் தயாரித்து அதை வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்று அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தார்.
அதில் போதிய வருமானம் கிடைக்காததால் பலரிடம் கடன் வாங்கத் தொடங்கினார். ஆனால் வாங்கிய கடனை திருப்பித்தர இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் கடன் தொல்லை அதிகமானது. கடன் கொடுத்தவர்கள், அதிக வட்டியுடன் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டனர்.
ஆனால், மீராக்கண்ணு புலவர் வாங்கிய கடனை வட்டியுடன் திரும்பக் கொடுக்க இயலவில்லை. எனவே கடன் கொடுத்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கில் மீராக்கண்ணுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட்டது. மீராக்கண்ணுவை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மீராக்கண்ணு புலவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், திருச்செந்தூர் முருகன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். வறுமையில் வாடிக் கொண்டிருந்த அவர் சிறைத்தண்டனையில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாத அவர் திருச்செந்தூர் முருகப்பெருமானை சரண் அடைந்தார். முருகன் மீது பாடல் ஒன்றை இயற்றி பாடினார்.
முருகனே! முதல்வா! முக்கண் மூர்த்தி
தன் மைந்தா வேலா
உருகிய உள்ளமோடு ஒருதரம் முருகா
என்றால்
முருகிநின் றுரைத்தும் போகூழ்
முரணழிந் தாகூ ழாகி
மருவிடும் என்ற வாய்மை மறைந்ததோ
என்பால் ஐயா!
இந்தப் பாடலைக் கேட்டதும் முருகன் உருகிப் போனார். தனது அடியார் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அருள் பாலிக்கும் முருகப்பெருமான், மீராக்கண்ணு புலவருக்கும் உதவ முன்வந்தார்.
அன்று இரவு காலன்குடியிருப்பு கிராமத்துக்கு உட்பட்டிருந்த குலசேகரப்பட்டினம் பகுதியை ஆட்சி செய்து வந்த குறுநில மன்னன் கனவில் முருகப்பெருமான் தோன்றினார். 'கடன் தொல்லையில் சிக்கி தவிக்கும் எனது பக்தரான மீராக்கண்ணு புலவருக்கு தேவையான பணத்தை எனது கோவில் உண்டியலில் இருந்து எடுத்துச் செலுத்திவிடு. அவரை சிறைத்தண்டனையில் இருந்து காத்திடு' என்று உத்தரவிட்டு மறைந்தார்.
கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்த குறுநில மன்னன், நீதிமன்றத்தின் கைது உத்தரவை நிறுத்திவைத்தான். மீராக்கண்ணு புலவர், சம்பந்தப்பட்டவர்களுக்கு தரவேண்டிய கடன் தொகையையும் கேட்டறிந்தான்.
அதே சமயத்தில் முருகப்பெருமான் புலவர் மீராக்fகண்ணு கனவில் தோன்றி, 'நாளை உமது கடனை வட்டியும் முதலுமாக யாமே அடைப்போம்' 'கோவிலில் சுவாமி தரிசனம் செய்து முடித்து வந்ததும் தங்கள் பணம் உங்கள் கைக்கு வந்துசேரும்' என்று கூறி மறைந்தார்.
பொழுது புலர்ந்ததும் புலவர் மீராக்கண்ணு, திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். அவர்களுக்கு முன்னதாகவே அங்கு வந்து மன்னர் காத்திருந்தார்.
தொடர்ந்து, உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. உண்டியலில் எண்ணப்பட்ட பணமும், மீராக்கண்ணு புலவரின் கடன் தொகையும் சரிசமமாக இருந்ததைக் கண்ட மன்னன் மேலும் வியந்தான். முருகப்பெருமானின் ஆணைப்படி, அந்த தொகையைக் கொண்டு மீராக்கண்ணுபுலவரின் கடன் முழுவதையும் கொடுக்கச் செய்தான்.
முருகன் கனவில் கூறியபடியே எல்லாம் சிறப்பாக நிகழ்ந்தன. இதில் குறிப்பிடப்பட வேண்டிய ஆச்சர்யமான விஷயம், புலவர் வணிகருக்குச் செலுத்த வேண்டிய தொகையை மீறி அதில் ஒரு பைசாவும் மீதம் இல்லை என்பதுதான். திருச்செந்தூர் ஆண்டவன் செந்திலாண்டவனின் கருணையை எண்ணி ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருமே கசிந்துருகினர்.
எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தன்னை நம்புகிறவர்களை திருச்செந்தூர் முருகன் கைவிடமாட்டான் என்பதற்கு இந்த உண்மைச் சம்பவமே சாட்சி. தன்னை முழு மனதுடன் நம்பும் எவரையும் கை தூக்கி விடும் தெய்வமாகக் கந்தப்பெருமான் இருக்கின்றான் என்பதற்கு, மீராக்கண்ணு புலவர் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றார்.
பாம்பன் சுவாமிக்கு அருளிய முருகன்!
பாம்பன் சுவாமி என்னும் பெயர் பெற்ற ஸ்ரீகுமர குருதாச சுவாமிகள் ஆறுமுகப் பெருமானிடம் அசையாத பக்தி கொண்டவர். 'சண்முக கவசம்' என்னும் நூலினைப் பாடி ஆறுமுகப் பெருமானை வழிபட்டவர். 27.12.1923 வியாழக்கிழமையன்று காலை சென்னை தம்பு செட்டித் தெருவில் நடந்து சென்ற போது ஒரு குதிரை வண்டியின் சக்கரம் ஏறியதால் சுவாமிகளின் கணுக்கால் எலும்பு முறிந்தது.
மருத்துவமனைக்கு சுவாமிகளைக் கொண்டு சென்றனர். அடிகளைச் சோதித்த மருத்துவர்கள் சுவாமிகளுக்கு வயதாகி விட்டதால் முறிந்த எலும்பு பொருந்தாது என்றனர். துறவியாக இருந்து புளி, காரம் சேர்க்காமல் சாப்பிடவே தாலும் உடைந்த எலும்பு பொருந்தாது என்றனர்.
சுவாமிகளோ தாம் இயற்றிய சண்முக கவசத்தைப் பாராயணம் செய்யுமாறு சுற்றிலுமுள்ள பக்தர்களிடம் கூறினார். அவ்வாறே அன்பர்கள் பாராயணம் செய்தனர். அந்த பாடல் பாடப்படும் போதெல்லாம் மயிலொன்று தன் சிறகால் அவரது காலை வருடுவதை உணர்ந்தார்.
சுவாமிகளின் அடியார்கள் மருத்துவமனையிேலயே நாள் தோறும் சண்முக கவசத்தைத் தொடர்ந்து பாராயணம் செய்து வேண்டினர்.
உரிய நாளில் மருத்துவர்கள் கால் கட்டைப் பிரித்தனர். வியப்பில் மூழ்கினர். எலும்புகள் நன்றாகக் கூடி இருந்தன. சுவாமிகள் எழுந்து நன்றாக நடந்தார். சீடர்களின் நம்பிக்கையைச் செந்திலாண்டவன் காப்பாற்றி விட்டான்.
அதுபோல பாம்பன் சுவாமிகள் பாடிய 'பஞ்சாமிர்த வண்ணம்' என்னும் நூல் சுவையுடையது. அதைப் பாடக் கேட்டால் பஞ்சாமிர்தம் உண்பது போன்ற சுவையை உணரலாம். இந்த பாடல் மூலம் திருச்செந்தூரில் முருகன் நிகழ்த்திய அற்புதம் ஒன்று நடந்தது.
திருச்செந்தூர் கோவிலில் "கவுண்டர் மண்டபம்" என்று ஒன்று உண்டு. அங்கு நாள் தோறும் அனந்த சுப்பையர், வி.என்.சுப்பிரமணிய அய்யர், முத்தம்மை என்ற மூதாட்டி மூவரும் பஞ்சாமிர்த வண்ண நூலைப் பாராயணம் செய்வது வழக்கம். "பஞ்சாமிர்த வண்ணமும்" பாம்பன் சுவாமிகள் இயற்றியதே. இவர்கள் பாராயணம் செய்வதை ஓர் இளைஞன் தூண் மறைவில் இருந்து கேட்பான். இதைக் கவனித்த முத்தம்மை, "மறைந்து இருந்து கேட்பானேன், அருகில் வரலாமே" என்று சொல்லிக் கொண்டே திரும்பிப் பார்த்தாள் முத்தம்மை. இளைஞனைக் காணவில்லை.
மறுநாள் அதிகாலை 3 மணி இருக்கும். முத்தம்மை வீட்டுக் கதவை யாரோ தட்டினர். முத்தம்மை கதவைத் திறந்தாள். மண்டபத்தில் கண்ட அதே இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
"நான் யாரென்று தெரியவில்லை என்றாயே, எனக்கு இந்த ஊர்தான். வா, என் இருப்பிடத்தைக் காட்டுகிறேன்" என்றான். அப்போதுதான் இந்த இளைஞனுடன் ஓர் மங்கையும் நிற்பதைக் கண்டாள் முத்தம்மை.
இளைஞனும் பெண்ணும் முன்னே நடந்தனர். முத்தம்மை பின் தொடர்ந்தாள். கல்யாண மண்டபத்தை அடைந்ததும் குமரன், ஏ, கிழவி, இதுதான் என் இருப்பிடம், 'பஞ்சாமிர்த வண்ணத்தை' இசையோடு பாடும் இடத்தில் எல்லாம் நான் இருப்பேன். அதனால்தான் அன்று ஆலயத்தை விட்டுக் கவுண்டர் மண்டபத்திற்கு வந்து இருந்தேன்" என்று கூறி மறைந்தான் வள்ளி மணாளன்.
முத்தம்மை அடைந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்லை. திருச்செந்தூர் முருகன் தன்னை வெளிப்படுத்தி காட்சிக் கொடுத்ததை நினைத்துப் பூரித்தார்.
அவ்வையிடம் "அருந்தமிழ்ப் பாடல்" கேட்க "சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என்று திருவிளையாடல் புரிந்தவன் அல்லவா? அத்தகைய முருகன் திருச்செந்தூரில் முத்தம்மையிடம் நிகழ்த்திய அற்புதமும் சிறப்பாக இன்றும் பேசப்படுகிறது.
இதே போன்று இன்னொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.