சிறப்புக் கட்டுரைகள்

உத்திரட்டாதி நட்சத்திர பலன்கள்
- சனியின் ஆதிக்கம் பெற்ற இவர்கள் அடிப்படை கல்வி சுமாராக படிப்பார்கள்.
- உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசியில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். பத்ரா என்ற நட்சத்திர கூட்டத்தின் பிற்பகுதி உத்திரட்டாதி. இதன் சமஸ்கிருத பெயர் உத்திர பத்ரா பாதம் என்பதாகும். இதன் வடிவம் வானில் பார்ப்பதற்கு முரசு போல் காட்சியளிக்கும். எனவே இதன் தமிழ் பெயர் முரசு.
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொது பலன்கள்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். எந்த செயலையும் அவசரமாகவோ, பரபரப்பாகவோ செய்ய மாட்டார்கள். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பார்கள். வாழ்நாள் முழுவதும் பிறருக்காகவே வாழ்வார்கள். உறவுகளால் கெட்ட பெயர் அவமானம் உண்டு. அதே நேரத்தில் எவ்வளவு தாழ்ந்த நிலைக்கு போனாலும் உழைத்து முன்னேறிவிடுவார்கள். இவர்களுக்கு வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை வரப்பிரசாதமாக அமையும். இவர்கள் சுகத்தையும், துக்கத்தையும் சரிசமமாக பாவிப்பார்கள். பார்வைக்குக் கடின மனமும், பிடிவாதமும் உடையவராகத் தோன்றினாலும், சகிப்புத்தன்மை நிறைந்தவர்கள்.
எதையும் நன்கு ஆராயும் மனதை உடையவர்கள். எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் தனது முழு ஆதிக்கத்தை செலுத்துவார்கள். சாமர்த்திய சாலிகளான இவர்கள் எல்லா காரியங்களிலும் வெற்றி காண்பார்கள். இவர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றி கொள்வார்கள். தெய்வ நம்பிக்கை இவர்களிடம் அதிகம் உண்டு. மற்றவர்களை துல்லியமாக எடை போடுவதில் திறமை சாலிகள்.
எடுத்துச் கொண்ட காரியங்களை எவ்வளவு எதிர்ப்புகளும் தடைகளும் வந்தாலும், அவைகளைப பற்றிக் கவலைப்படாமல் செய்து முடிப்பார்கள்.
இவர்கள் வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும், தங்கள் உழைப்பினால் பெரும் செல்வத்தைச் சேர்க்கிறார்கள். சிலர் அரசு உத்தியோகத்தில் இருப்பார்கள். உயர் அதிகாரிகளை தன் வசப்படுத்தி பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற அனைத்து தேவைகளை நிறைவு செய்யும் தந்திரசாலிகள். ஒரு இடத்தில் லட்சம் பேர் வேலை பார்த்தால் கூட இவர்களின் தனித்திறமை மிளிரும். நல்ல வளர்ச்சியை அடைவார்கள். தங்களைப் பற்றி பலர் வியப்போடு பேசக்கூடிய சூழ்நிலையை அமைத்து மிக சுலபமாக பிரபலமாகி விடுவார்கள்.
கல்வி
சனியின் ஆதிக்கம் பெற்ற இவர்கள் அடிப்படை கல்வி சுமாராக படிப்பார்கள். குரு தசா ஆரம்பித்த பிறகு படிப்பில் கவனம் கூடும். இவர்கள் வக்கீல், நீதிபதி, புரோக்கர், புரோகிதர், குரு குல கல்வி, மத போதகர், வங்கி பணி, ஆச்சாரியர்கள் போன்ற கல்வி கற்கலாம். உயிரியல் கல்வி குழந்தைகள் தொடர்பான கல்வி மைக்ரோபயாலஜி, பொருளாதார நிபுணர், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட படிப்புகள், கெமிக்கல் தொடர்பான கல்வி பயோகெமிஸ்ட்ரி எலக்ட்ரிக்கல் என்ஜினியர், ஆர்க்யாலஜி, வரலாறு, புவியியல் சார்ந்த கல்விகள் அனைத்தும் மெக்கானிக் சார்ந்த கல்விகள், பிட்டர் ஐடிஐ, மூலிகை செடி ஆய்வு, பாரம்பரியத்தைப் பற்றி படிப்பது பாதுகாப்பு, எரிபொருள் சார்ந்த படிப்புகள் சிறப்பாக இருக்கும்.
தொழில்
அடி தட்டில் இருந்து உழைத்து உயர்ந்தவர்களாக இருப்பார்கள். உழைப்பின் அவசியத்தை உணர்ந்தவர்கள். தேவைப்படும் இடத்தில் உழைப்பையும், புத்தி சாதுர்யத்தையும் இணைந்து பயன்படுத்துபவர்கள். எப்படியும் உயர்ந்த பதவி, தொழிலை அடைய வேண்டும் என்று கடுமையாக உழைப்பார்கள். கற்பனைச் சக்தியும், கூர்மையான அறிவும் உண்டு. ஆன்மிகம், மதப்பிரசங்கம், அரசியல், ஆடிட்டிங், விவசாயம், கட்டிடங்கள் கட்டுதல், ஆராய்ச்சி தொழில், பொறியியல் துறை, சுரங்கத் தொழில், விவசாயம், மின்னியல் துறை, மாந்திரீகம், ஜோதிடம், பூமித்தொழில், தாதுப் பொருட்கள் சம்பந்தமான தொழில், உலோகங்கள் மற்றும் கருவிகள் சம்பந்தமான தொழில் பலன் தரும். மர வியாபாரம், ஆன்மீகத்துறை, வங்கித் தொழில் சட்டம், மற்றும் நீதித்துறை, அறநிலையத்துறை, நிதித்துறை, கல்வித்துறை, ஆயுத சாலை, போர்பயிற்சி சமூக சேவை தர்ம ஸ்தாபனங்கள் நடத்தலாம்.
ஐ.ஆனந்தி
தனம்
குருவின் வீட்டில் உள்ள சனியின் நட்சத்திரம் உத்திரட்டாதி என்பதால் தாராள தன வரவு இருக்கும் சேமிப்பு என்பது இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் சம்பாதிப்பார்கள். உழைப்பினால் பெரும் செல்வத்தைச் சம்பாதிக்கும் யோகம் நிரம்பியவர்கள். பணம் சேர்ப்பதில் கைதேர்ந்தவர்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் தன் முயற்சியால் வெகு விரைவில் பெருந் திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்துவார்கள். எப்போதும் உயர்வான சிந்தனைகள் நிறைந்தவர்கள். இவர்கள் முதலீடு போட்டுச் செய்யும் சுயதொழில் செய்யாத வரை எந்த பாதிப்பும் இருக்காது. முதலீடு அதிகம் உள்ள தொழில் நினைத்துப் பார்க்க முடியாத அசுர வளர்ச்சியும் எதிர்பாராத நேரத்தில் மீள முடியாத வீழ்ச்சியும் உண்டாக்கும்
குடும்ப வாழ்க்கை
யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிட மாட்டார்கள். தொழிலில் கூட்டாளிகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு நிரந்தர நட்பும் கிடையாது, விரோதியும் கிடையாது. இவர்களுக்கு எப்பொழுது எப்படி கோபம் வரும் என்று யாராலும் கூற முடியாது. பிடிவாத குணம் இவர்களிடம் அதிகம் உண்டு. குடும்பம் உறவுகளின் அன்பு உண்டு.
குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். 27 வயதிற்கு மேல் திருமணம் நடக்கும். சிலருக்கு திருமண ஆசையிலிருந்து விடுபட்ட பின் திருமணம் நடக்கும். பலர் திருமணம் நடந்தும் இல்லற சன்னியாசியாகவே வாழ்கிறார்கள் வெகு விரைவில் குடும்ப பந்தத்திலிருந்து விடுபடுவார்கள்.
தசா பலன்கள்
சனி தசா: இது ஜென்ம தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 19 ஆண்டுகள். பிறந்த கால நட்சத்திர பரிமாணத்திற்கு ஏற்ப பிறப்பு கால தசா மாறுபடும். தந்தையின் ஆதரவு குறையும். சிலர் குடும்பத்தை பிரிந்து வாழ்வார்கள். செயல்திறன் குறைவுபடும். ஞாபகமறதி இருக்கும். திறமையை வெளிக்காட்ட போதிய சந்தர்ப்பம் அமையாது. கண் பாதிப்பு இருக்கும். ஆஸ்த்துமா, மூச்சு விடுதல் பிரச்சனை அடிக்கடி உண்டு.
புதன் தசா : இது இரண்டாவதாக வரக் கூடிய தன தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 17 ஆண்டுகள். சிலர் பள்ளி கல்லூரி படிப்பை முடிக்கும் காலம். இந்த தசாவில் பலருக்கு திருமணம், குழந்தை, தொழில் வேலை என முக்கிய நிகழ்வுகள் நடக்கும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு வாழ்வில் எவ்வளவு சோதனைகள் நேர்ந்தாலும் வேதனை அடையமாட்டார்கள். சுய ஜாதகத்தில் சனியும் புதனும் பலம் பெற்றால் சளைக்காமல் உழைக்கும் உழைப்பாளிகள். நுண்ணிய அறிவு படைத்த சாமர்த்திய சாலிகளாக இருப்பார்கள்.
கேது தசா: இது மூன்றாவதாக வரக்கூடிய விபத்து தாரையும் தசாவாகும் இதன் தசா ஆண்டுகள் 7 வருடம். இது சற்று சோதனையான காலமாக இருக்கும். மன விரக்தி, தாழ்வு மனப்பான்மை அதிகமாகும். என்ன வாழ்க்கை என்று அடிக்கடி புலம்புவார்கள். முன்னேற்றத்திற்கு கடுமையாக போராட நேரும். வரவுக்கு மீறி செலவு செய்வார். கடன் பெற்றும் வீண் செலவு செய்ய தயங்க மாட்டார்.
சுக்ர தசா: இது நான்காவதாக வரக்கூடிய சேஷம தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 20 ஆண்டுகள். இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டு பெறக்கூடிய தசையாகும். வாழ்வின் கடைசி வரை வாழ தேவையான அனைத்து சொத்து சுகங்களையும் வழங்கக்கூடிய காலமாகும். சிலர் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து பேரன் பேத்திகள் என வாழ்க்கையில் பேரின்பத்துடன் வாழ்வார்கள். கடுமையாக உழைத்து வாழ்வில் உன்னத நிலையை அடைவார்கள். மத்திம வயதில் இருந்தே எல்லா சுகங்களையும் அனுபவிப்பார்கள்.
சூரிய தசா : இது ஐந்தாவதாக வரக்கூடிய பிரத்யக் தாரையும் தசாவாகும். சமூக சேவையில் மிகவும் நாட்டம் இருக்கும். இதன் தசா வருடம் 6 ஆண்டுகள். சிலர் தன் ஆண் வாரிசுகளிடம் விலகியே நிற்கிறார்கள். நெருங்கிய ரத்த உறவுகளின் கர்மாவில் கலந்து கொள்ள முடிவதில்லை. அப்படி கலந்து கொண்டாலும் மன வருத்தமே மிஞ்சும்.
சந்திர தசா : இது ஆறாவதாக வரக்கூடிய சாதக தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 10 ஆண்டுகள். ஆன்மீக வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் நிலையான இடத்தைப் பிடித்து விடுவார்கள். வயோதிக காலத்திலும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் சிறப்பு அம்சங்கள்
குருவின் வீட்டில் உள்ள சனியின் நட்சத்திரம் உத்திரட்டாதி என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தர்ம கர்மாதிபதி யோகம் உண்டு. உத்திரட்டாதியில் நீச்சம் அடையும் கிரகம் புதன். இதன் வசிப்பிடம் வீடு. இதன் அதிதேவதை காமதேனு.
இந்த நட்சத்திர, நாளில் கிரக ஆரம்பம் செய்ய, கிரகப்பிரவேசம் செய்ய, வீடு வாங்க உகந்த நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் கால புருஷ லக்னமான மேசத்திற்கு பன்னிரண்டாம் வீட்டில் அமைந்துள்ளது.
பன்னிரண்டாம் வீடு அயன சயன ஸ்தானம் என்பதால் கட்டில், படுக்கை, மெத்தை, தலையணை போன்ற பொருட்கள் வாங்க உகந்த நட்சத்திரம் ஆகும். குருவினுடைய வீட்டில் அமைந்த சனியின் நட்சத்திரத்தை என்பதால் இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை காமதேனு என்பதாலும் இந்த நட்சத்திர நாளில் விரதம் இருந்து காமதேனுவே வழிபட உத்தியோகம் இல்லாதவர்களுக்கு நல்ல உத்தியோகம் அமையும். இதில் நீச்சமடையும் கிரகம் புதன் என்பதால் கல்வி சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. தஸ்தாவேஜ். பத்திரங்கள், ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை, தவிர்க்க வேண்டும். இளம் பெண்களை வசியம் செய்ய உத்திரட்டாதி உகந்த நட்சத்திரம்.
நட்சத்திர பட்சி: கோட்டான்
யோகம்: ஐந்திரம்
நவரத்தினம்: நீலம்
உடல் உறுப்பு: மூட்டு
திசை : வடக்கு
பஞ்சபூதம் : ஆகாயம்
அதிதேவதை: காமதேனு
நட்சத்திர மிருகம்: பால் பசு
நட்சத்திர வடிவம்: வீடு
சம்பத்து தாரை : ரேவதி, ஆயில்யம்,
கேட்டை சேம தாரை : பரணி, பூரம், பூராடம்
சாதக தாரை: ரோகிணி, அஸ்தம், திருவோணம்
பரம மிக்ர தாரை: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
பொதுவான பரிகாரங்கள்
இந்த நட்சத்திர நாளில் விரதம் இருந்து மதுரையில் உள்ள கள்ளழகரை வழிபட நலிந்த வியாபாரம் விருத்தி அடையும் தடைபட்ட கல்வியை தொடரும் வாய்ப்புகள் உருவாகும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் காமதேனுவை வழிபட வாழ்க்கை வளமாகும்.
செல்: 98652 20406