சிறப்புக் கட்டுரைகள்

கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள்
- கர்ப்பப்பை புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு முதல் முக்கியமான பரிசோதனையே பெல்விக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தான்.
- புற்றுநோய் பாதிப்பு இருக்கிற பெண்களுக்கு சில நேரங்களில் அடி வயிற்றில் வலி இருக்கலாம்.
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய் என்னென்ன அறிகுறிகளை உருவாக்கும்? இதனை வராமல் தடுப்பது எப்படி? ஒருவேளை வந்தால் இதனை ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பது எப்படி? கர்ப்பப்பை புற்றுநோயை முழுமையாக குணப்படுத்துவது எப்படி என்பது பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
கர்ப்பப்பை புற்றுநோய் பாதித்தால் ஏற்படும் முக்கியமான அறிகுறிகள்:
பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டால் முக்கியமாக மாதவிடாய் பிரச்சினைகள் வரும். அதாவது மாதவிடாய் சுழற்சி என்பது சீரான முறையில் இருக்காது. மாதவிடாய் வருவதில் பிரச்சினைகள் உருவாகும். அவ்வப்போது ரத்தப்போக்கு இருக்கும். வெள்ளைப்படுதல் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு உதிரம் கலந்த வெள்ளைப்படுதல் இருக்கலாம்.
பல நேரங்களில் அதிகமாக ரத்தப்போக்கு ஏற்படலாம். இன்னும் சிலருக்கு மாதவிடாய் வரவே வராது. அப்படியே வந்தாலும் ரத்தம் உறைந்து காணப்படும். இந்த பாதிப்பு கொண்ட பெண்கள் அதிகமாக வேலையோ அல்லது உடற்பயிற்சியோ செய்தால் ரத்தப்போக்கு ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். இவைதான் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு முக்கியமான அறிகுறிகளாக கருதப்படுகிறது.
இந்த பெண்களுக்கு உடல் பருமனாக இருக்கும்போது, அதன் கூடவே மார்பக வலி இருக்கலாம். வெள்ளைப்படுதல் இருக்கலாம். இடுப்பு வலி இருக்கலாம். இதுதவிர அடிவயிறு வலிகளும் ஏற்படலாம்.
கர்ப்பப்பை புற்றுநோயை கண்டறிவதற்கான பரிசோதனைகள்:
கர்ப்பப்பை புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு முதல் முக்கியமான பரிசோதனையே பெல்விக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தான். இந்த ஸ்கேன் பரிசோதனை மூலம் பார்க்கும்போது புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடிய பெண்களுக்கு கர்ப்பப்பையில் வீக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக கர்ப்பப்பையின் லைனிங் லேயர் தடிமன் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த தடிமன் ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட அளவு இருக்கும்.
மாதவிலக்கு வந்தவுடன் அது 5 மில்லி மீட்டர் அளவு இருக்கும். இதுவே கருமுட்டைகள் வளர்ந்து வெளியாகும் நேரத்தில் 8 மி.மீ. முதல் 10 மி.மீ. வரை இருக்கும். ஆனால் மாதவிடாய் வருவதற்கு முன்பு அது அளவில் மிகவும் குறைந்து காணப்படும். ஆனால் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு, இந்த லைனிங் லேயரின் தடிமன் மிக அதிகமாக இருக்கும். அதாவது 17 மி.மீ. முதல் 35 மி.மீ வரை இருக்கலாம். இந்த லைனிங் லேயர் தடிமனாக இருக்கிற வர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்கும் நிலையை குறிக்கிறது.
பெல்விக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மூலம் கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால், அதில் இருந்து ஒரு திசுவை பயாப்சி பரிசோதனைக்காக எடுக்கலாம். பயாப்சி பரிசோதனை செய்து பார்த்தாலே அவர்களுக்கு புற்றுநோய் எந்த நிலையில் இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.
உடல் பருமனாக இருப்பவர்கள், மாதவிடாய் வராத பெண்கள், மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் இல்லாத பெண்கள், குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை லைனிங் லேயர் தடிமனாக இருக்க வாய்ப்பு உண்டு. மேலும் சிறுவயதில் பருவம் அடைவது, நீண்ட காலமாக மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் இல்லாத பெண்கள், அதிகமாக ரத்தப்போக்கு ஏற்படுகின்ற பெண்கள் ஆகிய அனைவருக்கும் பயாப்சி எடுத்து பார்ப்பது ஒரு முக்கியமான அடிப்படையான பரிசோதனை ஆகும்.
இந்த பரிசோதனையின்போது புற்றுநோய் இருப்பதாக சந்தேகம் எழுந்தால் கர்ப்பப்பையில் ஹிஸ்ட்ராஸ்கோபி முறை மூலமாக ஒரு கேமரா செலுத்தி, அதனை சரியாக சுத்தம் செய்து, அதில் உள்ள ஒரு திசுவை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினால், அந்த திசுவில் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
புற்றுநோய் பாதிப்பு இருக்கிற பெண்களுக்கு சில நேரங்களில் அடி வயிற்றில் வலி இருக்கலாம். உடல் பருமன் அதிகமாக இருக்கலாம். இவை அனைத்தும் இருப்பவர்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்தால், முறையாக பரிசோதனை செய்தால் கண்டிப்பாக அதனை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முடியும். அந்த விதத்தில் இந்த திசுவை பரிசோதனை செய்து பார்த்தால் என்ன புற்றுநோய் என்பதை தெரிந்து கொள்ள முடியும். புற்றுநோய் பாதிப்புக்கான தீவிரத்தன்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையும் உறுதி செய்ய முடியும்.
கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள்:
புற்றுநோய் வராமல் தடுக்க முடியுமா என்று பலரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக எதற்கும் வருமுன் காப்பது நல்லது தானே? உடல் பருமன் அதிகமாக இருக்கும் இளம்பெண்கள் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, முறையாக உடல் ஆரோக்கியத்தை சீராக பார்ப்பது ஆகிய அனைத்தையும் கண்டிப்பாக பொறுப்போடு எடுத்து செய்ய வேண்டும்.
உடல் எடை அவர்களின் உயரத்துக்கு ஏற்ப இருந்தால் இந்த மாதிரியான பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு கொழுப்பு அதிகமாகி, அதனுடைய பாதிப்பும் கர்ப்பப்பையை பழுதாக்குகிறது. இது தவிர ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருக்கும் போதும் பிரச்சினைகள் வரும்.
சிறு வயதிலேயே பருவம் அடைந்த பெண்கள், உடல் பருமனாக இருந்து, மாத விடாய் சுழற்சி சீரான முறையில் இல்லாவிட்டால் கண்டிப்பாக எண்டோமெட்ரியல் தடிமன் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண் குழந்தைகளுக்கோ அல்லது பெண்களுக்கோ, விரைவில் பரிசோதனை செய்து, இதற்கான சீரான மருந்துகளை கொடுக்கும் போது, உடலுக்கு அபாயம் ஏற்படும் நிலையை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முடியும்.
முறையான பெல்விக் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, எண்டோமெட்ரியல் பயாப்சி பரிசோதனை, தேவைப்பட்டால் ஹிஸ்ட்ரோஸ்கோபி கிரைடல் பயாப்சி பரிசோதனை ஆகியவற்றின் மூலமாக எண்டோ மெட்ரியல் தடிமன், கர்ப்பப்பை புற்றுநோயின் தன்மை என்ன நிலையில் இருக்கிறது என்பது தெரியும்.
புற்றுநோயின் ஆரம்ப நிலையில் இதனை கண்டுபிடித்தால் அதை ஹைப்பர்பிளேசியா என்று சொல்வோம். இந்த ஹைப்பர்பிளேசியா நிலை என்பது புற்றுநோய்க்கு முந்தைய நிலையாகும். இந்த நிலையில் கர்ப்பப்பை இருந்தால் இதற்கு அடிப்படையான காரணம் என்ன என்று பார்க்க வேண்டும். உடல் பருமனாக இருந்தால் எடையை குறையுங்கள். உணவை கட்டுப்படுத்துங்கள், மட்டன் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சியை அதிகரியுங்கள். நிறைய காய்கறிகள், கீரைகள், பழங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.
மேலும் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்கள், இனப்பெருக்க ஹார்மோன் சம நிலையின்மை கொண்ட பெண்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ள உடல் பருமனாக இருக்கின்ற பெண்கள் ஆகிய அனைவரும் முறையாக பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் பயாப்சி எடுத்து பரிசோதித்து பிரச்சினை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
ரசாயனம் இல்லாத நாப்கினை பயன்படுத்த வேண்டும்:
புற்றுநோய்க்கு முந்தைய நிலையில் இருக்கும்போது எளிமையான ஹார்மோன்கள் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் கொடுத்து ஈஸ்ட்ரோஜனின் தாக்கத்தை குறைத்து, இந்த நோயின் மாற்றங்கள் தீவிரமாவதற்கு முன்பே தடுத்து சரி செய்ய முடியும். ஒரு வேளை புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்து விட்டால் அதற்கான சிகிச்சை முறைகளை விரைவில் செய்ய வேண்டும். ஏனென்றால் புற்றுநோய்க்கான சிகிச்சையை எப்போதுமே வேகமாக செய்ய வேண்டும். அதன் நிலை என்ன என்பதை பொருத்து அறுவை சிகிச்சையா, ரேடியோதெரபியா, ஹீமோதெரபியா என்பதை நிர்ணயிக்கலாம்.
ஆனால் வருமுன் காப்பது என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு முக்கியமானது உங்களுடைய வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். முறையான பரிசோதனை, உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, தேவையில்லாத ஹார்மோன்களை எடுப்பதை குறைப்பது, ரசாயனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது ஆகியவற்றை வேண்டும். மாதவிடாயின் போது ரசாயனம் இல்லாத நாப்கினை பயன்படுத்த வேண்டும்.
உங்கள் குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்தால், குறிப்பாக உங்கள் தாயாருக்கு மார்பக புற்றுநோயோ அல்லது கர்ப்பப்பை புற்றுநோயோ இருந்தால், உங்களின் 25 வயதிலேயே ஒரு அடிப்படையான மெமோகிராம் எடுத்து கர்ப்பப்பை சீராக இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது மிக மிக முக்கியம். தேவைப்பட்டால் பயாப்சி பரிசோதனை செய்து ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் கர்ப்பப்பை புற்றுநோய் என்பது தடுக்கக்கூடியதுதான். பரிசோதனையின் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் இதனை முழுமையாக சரி செய்ய முடியும். அதன் மூலம் கர்ப்பப்பை புற்றுநோயில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.