சிறப்புக் கட்டுரைகள்

மலச்சிக்கலைப் போக்கும் சோளச் சோறு
- சோளம் வேக நேரம் எடுக்கும் என்பதால் அப்படியே சோறாக்க முடியாது.
- மேற்கத்திய நாடுகளிலும், அமெரிக்கா நாடுகளிலும் கோதுமையுடன் சோளத்தைக் கலந்து பிரட், குக்கீஸ், பிஸ்கட் போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்.
சோளம் மானாவரிப் பயிர். அதாவது பாசனம் இல்லாமல் மழையில் விளையும் பயிர். நிறைய தண்ணீர்த் தேவையில்லை. நன்செய் பயிர் அல்லாத புஞ்செய்ப் பயிர்கள் அனைத்தையும் சிறுதானியம் என்றே பலரும் புரிந்து கொள்கிறார்கள்.
சோளம் புஞ்செய்ப் பயிர் என்றாலும் உண்மையில் பெருந்தானிய வகையைச் சேர்ந்ததே. அதாவது பருமனான தானியமே ஆகும். தண்ணீரை விட வெயிலை அதிகமாகக் குடித்து விளையும் பயிர்களின் தானியத்தை வேகவைக்கையில் கண்டிப்பாக நேரம் எடுக்கும். காரணம் அதன் கெட்டித் தன்மை.
ஆனால் கெட்டித் தன்மை நமது உடலின் சதையை உறுதிப்படுத்தும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நீரை அதிகமாகக் குடித்து வளரும் பயிர்களை உணவாக்கி உண்கிற பொழுது உடலுக்குள் நிறைய நீரை வெளியிடும் என்பதும் உண்மை.
சோளம் வேக நேரம் எடுக்கும் என்பதால் அப்படியே சோறாக்க முடியாது. ஆகையால் தான் பெரும்பாலான புஞ்செய்த் தானியங்களை இடித்தோ மாவாக்கியோ தான் சமைப்பதை நம்மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். புஞ்செய் தானியங்களிலேயே அதிகப் பருமனானதும், இறுகலானதும் சோளமே ஆகும். சோளத்தைச் சோறாக்குவதென்றால் மிக எளிது. நம்ப முடிகிறதா.
ஆம். நமக்குத் தேவையான சோளத்தை எடுத்து இரும்பு வாணலியில் போட்டு இரண்டு தேக்கரண்டி எண்ணை விட்டு அடுப்பில் குறைவான வெப்பத்தில் வைத்து மூன்று நான்கு நிமிடங்கள் மூடிபோட்டு வைத்தால் போதும். படபடவென்று வெடித்துப் பொறியாகி விடும். அந்த சோளப்பொறியை நீர் விட்டு வேகவைத்தால் ஐந்தே நிமிடங்களில் வெந்து விடும்.
இந்த சோளப்பொறி சோற்றில் தேங்காய்ப்பூ தூவி, சர்க்கரையைச் சாறல் போலத் தெளித்துப் பரிமாறினால் குழந்தைகள் மிக விரும்பிச் சாப்பிடுவார்கள். இனிப்பில் விருப்பம் இல்லையென்றால் காய்ந்த மிளகாய் கடுகு, சீரகம் தாளிப்புப் போட்டும் உண்ணலாம்.
நொறுவி போலவும் இருக்கும், முழு உணவாகவும் இருக்கும். பொதுவாகவே புஞ்செய்த் தானியங்களில் நார்ப்பண்பு அதிகம் இருக்கும். பசைத்தன்மை (குளுட்டோன்) குறைவாக இருக்கும். அதிலும் சோளத்தில் நார்ச்சத்து மிகவும் அதிகம்.
இங்கே குறிப்பிட்டுள்ள சோளப்பொறி சோற்றிற்கு சோளத்தை இடிக்கவோ, மாவாக்கவோ இல்லை. எனவே முழுச்சோறாக இருப்பதால் நார்ச்சத்தும் முழுமையாக இருக்கும்.

இந்த சோளப்பொறிச் சோற்றை உண்கிற பொழுது அடுத்தவேளை மல வெளியேற்றம் மிக இலகுவாக இருக்கும். மலம் வெளியேறி விட்டாலே வயிற்றில் கெட்ட வாயுத்தேக்கமோ, செரிமானச்சிக்கலோ ஏற்படாது.
தற்கால உணவுக்கலாச்சாரத்தில் இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்ற மாவுப்பண்ட உணவுகளையே உண்பதால் இன்று மலச்சிக்கல் பிரச்சினை கிட்டத்தட்ட பாதிக்கும் மேலானோருக்கு இருக்கிறது.
நம்முடைய உணவுக்கலாச்சாரம் மட்டுமல்ல நம்முடைய உழைப்பு முறையும் உடலை வளைத்து நெளித்து தேவையற்றதாகவும் கைகளையும், கால்களையும் மட்டுமே அசைக்கும் படியாகவும் இருப்பதால் வயிற்றின், சிறு – பெருங்குடல்களின் பாகங்களில் உணவு எளிதில் கடந்து செல்ல வாய்ப்பு இல்லாதிருக்கிறது.
எனவே தான்மலச்சிக்கல் இவ்வளவு பரவலாக இருக்கிறது. இந்நிலை உழைப்பைச் செலுத்த வேண்டிய வயதில் உள்ளோருக்கு மட்டுமல்ல இளம் வயதினருக்கும் அதுவே.
பிறந்த குழந்தைக்கு நல்ல ஆரோக்கியத்தில் உள்ள தாய்கூட போதிய அளவிற்குப் பால் கொடுக்க முடியவில்லை. தாய்ப்பாலில் குழந்தையின் ஆதாரக் கட்டமைப்பை உருவாக்க வல்ல மகத்தான சத்துகள் நிறைந்துள்ளன.
அதுபோக பெருங்குடலில் நிலை பெற்றிருக்க வேண்டிய நுண்ணுயிர்ப் பெருக்கத்திற்கும் தாய்ப்பாலே ஆதாரமாக இருக்க முடியும். உணவுப் பாதையில் செல்லும் உணவு வழுக்கிக் கொண்டு செல்லும் விதமான கொழுப்புப் படலத்தை உருவாக்க ஆதாரமாக இருப்பதும் தாய்ப்பாலே. ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் குழந்தை ஈன்ற தாய் போதிய அளவு பால் தரமுடியவில்லை. இன்றைய உணவு முறையினால் பல இளந்தாய்மார்களின் மார்பில் சுரக்கும் பால் அவள் பெற்றெடுத்த குழந்தையே குடிக்கும் தரமற்றதாக இருக்கிறது.
தாயின் பால் குடிக்கும் தரத்தில் இருந்தாலும் வேலைக்குப் போகும் தாயினால் ஆறுமாதங்களுக்கு மேல் விடுப்பு எடுக்க முடியாது என்பதால் குழந்தைக்குப் பால் மறுக்கப்படுகிறது.
சிலர் மாரினை அழுத்திப் பாலைப் பிழிந்து பாத்திரத்தில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து அதனை எடுத்து அவ்வப்போது கொடுக்கிறார்கள். குளிரூட்டப்பட்ட தாய்ப்பால் உரிய சக்தியைக் கொடுக்காதது மட்டுமல்ல, பாலில் சேரும் குளிர்ச்சி குழந்தையின் மார்பில் குளிர்ச்சியை ஏற்றும். எனவே பச்சிளங் குழந்தைக்கு எளிதில் சளிப் பிடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
தாய்ப்பால் கொடுக்க வாய்ப்பில்லாத பச்சிளம் குழந்தைகளுக்கு அளிக்கும் டப்பா பவுடர்பால் குழந்தைகளுக்கு வயிற்று உபிசத்தையும் மலச்சிக்கலையும் உருவாக்குகிறது.
அதுபோலவே பருவ வயதில் உள்ள சிறாரும், சிறுமியரும் தின்பண்டங்களை விரும்பி உண்பர். இத்தகைய தின்பண்டங்கள் பெரும்பாலும் பிசுபிசுப்பான மாவுகளில் தயாரிக்கப்படுபவைகளாகவே உள்ளன. குறிப்பாக பேக்கரிஅயிட்டங்கள் நன்றாக சலிக்கப்பட்ட மென்மையான மாவுகளில் தயாரிக்கப்படுவதால் பசைத்தன்மையே மிகுதியாக உள்ளன. எனவே அனைத்து வயதினரும் மலச்சிக்கலுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
இந்தச்சூழலில் தான் நார்த்தன்மை மிகுந்த புஞ்செய்த் தானியங்கள் நமது உணவில் முதன்மையிடம் பிடிப்பது அவசியம் ஆகிறது. உடலசைவுகளுக்கும், மூட்டுகள் இணைப்பு அசைவுகளுக்கும், சதை வளர்ச்சிக்கும் பசைத்தன்மை உணவுகள் தேவைதான். ஆனால் இன்றைய உணவுக்கலாச்சாரம் பசைத்தன்மை மிக்கதாகவே இருப்பதால் நார்த் தன்மை உள்ள உணவுகளில் போதிய கவனம் செலுத்த வேண்டியதும் தேவையாக இருக்கிறது.
உணவில் நார்த்தன்மையின் தேவையை நம்முடைய புஞ்செய்த் தானியங்களே ஈடுசெய்கின்றன. அந்த வகையில் இனிப்புச் சுவையும், பளபளப்பான நிறமும் கொண்டுள்ள சோளம் குழந்தைகளை ஈர்க்கும் தானியமாக இருக்கிறது. சோளத்தை ஊற வைத்து அரைத்துப் பாலெடுத்துக் காய்ச்சி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
சோளம் மட்டுமல்ல ஊறவைத்து அரைத்தால் பால்விடும், கேழ்வரகு, கம்பு, சோளம், கோதுமை போன்றவற்றை சம அளவில் கலந்து ஊறவைத்து அரைத்துக் கெட்டிப் பாலாக எடுத்து வடிகட்டி தாம்பாளம் போன்ற அகன்ற பாத்திரத்தில் ஊற்றி வெயிலில் ஆற வைத்தால் எளிதில் உலர்ந்து விடும்.
இதனைக் காற்றுப்புகா டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டு ஓரிரண்டு தேக்கரண்டி நீரில் கலக்கிக் கொதிக்க விட்டு குழந்தைகள் முதல் செரிமானத்திறன் குறைந்த வயதானவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கலாம். எளிதில் செரிமானம் ஆகும், நல்ல சத்துக்களும் கொடுக்கும். நார்ச்சத்து குறைக்கப்பட்டிருந்தாலும் பசைத் தன்மை குறைவாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது.
சோளம் வெள்ளை நிறத்தில் மட்டுமில்லாமல் வெளிர் சிவப்பு, அடர் சிவப்பு, கறுப்பு என பல நிறங்களிலும் உலகம் முழுதும் விளைவதால் பாரம்பரிய உணவுகளுக்கு மட்டுமல்லாமல் நவீன உணவுகள் தயாரிக்கவும் ஏற்றதாக இருக்கிறது.

போப்பு, 96293 45938
மேற்கத்திய நாடுகளிலும், அமெரிக்கா நாடுகளிலும் கோதுமையுடன் சோளத்தைக் கலந்து பிரட், குக்கீஸ், பிஸ்கட் போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்.
சோளம் இயற்கையாகவே பல்வேறு நிறங்களில் இருப்பதால் அதுவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் நிறமி சேர்க்காமல் மேற்படி பண்டங்கள் செய்ய ஏதுவாக இருக்கிறது. சோளம் சத்துக்கள் மிக்கதாக இருப்பதால் மேற்படிப் பண்டங்கள் விரும்பி உண்ணத்தக்கதாக இருக்கின்றன.
தானியங்களை நேரடியாகச் சமைத்து உண்பதே சத்துக்களை முழுமையாகப் பெற ஏற்றது. என்றாலும், தின்பண்டங்களை வெறும் சக்கையாக உடலில் பயனற்றக் கொழுப்புகளைச் சேர்ப்பதை விட ஓரளவு சத்துள்ள பண்டங்களால் உடலுக்கு எதிர்விளைவுகள் குறைவுதானே.
உடலுக்குச் சத்து, உடலில் தேங்கியுள்ள மிகுதியான நீரை அகற்றுவதில் முதன்மைப் பங்கு, மலச்சிக்கல் நீக்கம் எனப் பலவகைக ளிலும் துணை செய்கின்ற தானியங்களை நம்முடைய உணவில் வாரத்தில் இரண்டு மூன்று நாட்களேனும் சேர்த்துக் கொள்வது நம்முடைய உடலுக்கு நல்லது.
போக தானிய விளைச்சலை ஊக்குவிப்பதன் மூலம் சிறுகுறு மானாவரி விவசாயிகளின் வாழ்வாதாரம் ஓரளவிற்கேனும் பாதுகாக்கப்படும்.
தொடர்ந்து சுவைப்போம் நலந்தரும் உணவு வகைகளை.