சிறப்புக் கட்டுரைகள்

முழுமனம் என்பது என்ன?
- முழுமனம் என்றால் என்ன என்பதை நன்றாகப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
- நமது உணர்மனதுடன் முழு மனதும் இணைந்து கொள்ளும்.
முழுமனம் என்பது என்ன? உணர் மனம் என்பது என்ன என்பதைப் பார்த்து வருகிறோம்.
நிச்சயமற்ற தன்மையுடன், தடுமாற்றத்தோடு செயல்படுவது தான் உணர் மனம் ஆகும். தடுமாற்றம் இல்லாமல், திட மனதுடனும் முழு ஈடுபாட்டுடனும் செயல்படுவது தான் முழு மனம் ஆகும்.
திருடனுடைய மகன் திருடுவதற்கு கற்றுக் கொடுக்கச் சொல்லி தகப்பனைக் கேட்டான்.
இருவரும் சேர்ந்து ஒரு பெரிய மாளிகையினுள் நுழைந்தார்கள். பெரிய திருடன் கள்ளச் சாவிகளைக் கொண்டு இரும்புப் பெட்டியைத் திறந்தான். மகனை உள்ளே அனுப்பி நகைகளையும் பணத்தையும் மூட்டையாகக் கட்டச் சொன்னான்.
மகனும் இரும்புப் பெட்டியினுள் நுழைந்து மூட்டையாகக் கட்டினான்.
அந்நிலையில் அந்தத் தகப்பன், மகனை இரும்புப் பெட்டியினுள் வைத்துப் பூட்டிவிட்டு தான் மட்டும் தப்பிச் சென்றுவிட்டான்.
உள்ளே மாட்டிக் கொண்ட மகனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
பொழுதும் விடிந்துவிட்டது. வீட்டில் உள்ளவர்கள் நடமாட ஆரம்பித்துவிட்டார்கள்.
இரும்புப் பெட்டி இருந்த அறையை சுத்தம் செய்ய வேலைக்காரி ஒருத்தி வந்தாள்.
பெட்டியினுள் மாட்டிக் கொண்டிருந்த மகனும், ஒரு பூனை மாதிரி குரல் கொடுத்துக் கொண்டே பூனையைப் போல் இரும்புப் பெட்டியைப் பிராண்டினான்.
எஜமானி அம்மாள் தெரியாத்தனமாக பூனையை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டதாக வேலைக்காரி நினைத்தாள்.
சாவிக் கொத்தும் இரும்புப் பெட்டியிலயே தொங்கிக் கொண்டிருந்தது.
பூனையை விடுவிக்கும் நோக்கத்தில் அவள் பெட்டியைத் திறந்தாள்.
அதனை பயன்படுத்திக் கொண்ட மகனும், மூட்டையோடு தப்பி ஓடி வீடு வந்து சேர்ந்தான்.
"இப்படியா என்னைக் கொல்லப்
பார்ப்பது?" என்று கேட்டு தகப்பனை திட்டு திட்டு எனத் திட்டினான்.
தகப்பன் அதனை சட்டையே செய்யாமல்
மிக அமைதியாகக் கூறினான்: "இப்படித்தான் அப்பா திருட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும்!".
எதற்காக இந்தக் கதை?
திருடனுடைய மகன் நெருக்கடியில் மாட்டிக் கொண்டான். அந்நிலையில் இந்த முழுமனம் செயல்பட்டதால் ஏதோவொரு உபாயம் செய்து தப்பிச் சென்றான்.
அந்நிலையில் முழு மனமே
Presence of mind ஆக வேலை செய்துள்ளது.
இந்த முழுமனம் மனிதர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அல்லது மிருகங்களுக்கும் இது பொருந்துமா?
அப்போது நான் ஏழாவது வகுப்பு
படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீடு ஒரு கிராமத்துத் தோட்டத்தில் இருந்தது. எங்கள் தோட்டத்தில் நாய் ஒன்றை கட்டாமல் விட்டிருப்போம்.
ஒரு நாள் காலை பள்ளிக்கூடம் செல்லும் போது அதுவும் என்னோடு வர ஆரம்பித்தது. விரட்டிப் பார்த்தேன். அது என்னையும் முந்திக்கொண்டு எனக்கு முன்னால் போக ஆரம்பித்தது.

நான் பள்ளிக்கூடம் போகும் வழியில் சில தெருக்கள் உண்டு. அங்கே பல தெரு நாய்கள் உண்டு. நமது நாயைக் கண்டால் விடாது.
நான் நினைத்த படியே முதல் தெருவினுள் நுழையும் போது பத்துப் பதினைந்து நாய்கள் கொலை வெறியோடு பாய்ந்து வந்தன.
நமது நாய் தொலைந்தது என்றுதான் எண்ணினேன். ஆனால் அங்கு நடந்தது வேறு.
ஏதாவது ஒரு விசேஷத்தின் போது உங்களுடைய பழைய நண்பர்களை பல வருடங்கள் கழித்து சந்திக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.
என்ன செய்வீர்கள்?
"நீ நல்லா இருக்கிறாயா? நீ நல்லா இருக்கிறாயா?" என்று ஒவ்வொருவரையும் பார்த்து கேட்பீர்கள் அல்லவா?
அப்படி நமது நாயும் ஒரு வகை அன்பு ஒலியை ஏற்படுத்திக்கொண்டு, வாலையும் ஆட்டியவாறே அந்த நாய்களுக்குள் வலம்வர ஆரம்பித்தது.
கொலைவெறியோடு வந்த நாய்கள் அனைத்தும் குழப்பமடைந்து விட்டன. அவை கடிப்பதை மறந்து வெறுமனே உறுமிக்கொண்டிருந்தன.
அந்த நாய்களுக்கு இடையே வலம் வந்த நமது நாய், ஒரு இடைவெளியைக் கண்டுபிடித்து ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து நமது தோட்டத்துக்கே போய்ச் சேர்ந்து விட்டது.
அந்த நாய்க்குக் கூட முழுமனம் வேலை செய்துள்ளது.
முழுமனம் என்றால் என்ன என்பதை நன்றாகப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் இதுதான் நம்முடைய வாழ்க்கை முழுவதும் நம்மோடு வந்து நமக்கு உதவிசெய்யப்போகிறது.
இரவு நேரத்தில் நாம் ஒரு புதர் நிறைந்த பகுதியில் நடந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
நல்ல இருள். வெளிச்சம் எதுவும் இல்லை. பாதை குண்டும் குழியுமாக உள்ளது.
தடுமாற்றத்துடனேயே நடந்து செல்கிறோம். இடறி விழுந்து விடாமல் இருக்க, பார்த்துப் பார்த்து கால்களை வைக்கிறோம். புதர் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக கைகளாலும் தடவிப் பார்த்தபடியே நடக்கிறோம்.
உதவிக்கு இறைவனையும் பிரார்த்தனை செய்து கொள்கிறோம். எவ்வளவுதான் கவனமாக நடந்தாலும், எங்கேயோ ஓரிடத்தில் தடுமாறி விழுந்து விடுகிறோம்.
இனி நாம் சுதாரித்துக் கொண்டு எழுந்திட வேண்டும். இப்படி எழும்புவதா, அப்படி எழும்புவதா என்று தடுமாறிக் கொண்டிருக்க மாட்டோம். நம்மையறியாமலேயே எழுந்து விடுவோம்.
எழுந்து கொண்ட பிறகுதான் எழுந்ததே தெரியும்.
அப்படி எழுந்து கொள்வதற்கு இறைவனைக் கூட கூப்பிட மாட்டோம்.
முதலில் நாம் தடுமாறிக் கொண்டு நடக்கும் போது உணர்மனம் மட்டுமே வேலை செய்துள்ளது.
உணர் மனம் எப்போதும் தடுமாற்றத்துடனேயே இருக்கும்.
நாம் எழுந்து கொள்ளும்போது முழுமனம் வேலை செய்துள்ளது. அங்கு தடுமாற்றம் எதுவுமே இருக்காது.
நாம் ஒரு பைக்கில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம். ஓர் இடத்தில் வலது பக்கமாக நாம் திரும்பவேண்டும். நமக்கு எதிராக அந்தப் பக்கமிருந்தும் பைக் ஒன்று வேகமாக வருகிறது.
நாம் அவருக்கு ஒதுங்க வேண்டும். அவர் நமக்கு ஒதுங்க வேண்டும்.
நம்மையறியாமலேயே ஒருவருக்கு ஒருவர் சாமர்த்தியமாக ஒதுங்கிக் கொள்வோம்.
இங்கு அந்த முழுமனம் வேலை செய்துள்ளது.
நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள். நீங்கள் பணியாற்றும் பிரிவில் மட்டும் நூறு நபர்கள் வேலை பார்க்கிறார்கள்.
உங்கள் நூறு நபர்களுக்கும் ஒரு மேலாளர் இருக்கிறார். அவரோ ஒன்றாம் நம்பர் சிடுமூஞ்சி.
நீங்கள் விடுப்பு ஏதாவது எடுக்கவேண்டும் என்றால் அவர்தான் பரிந்துரை செய்யவேண்டும். ஒரேயொரு நாள் விடுப்பு கேட்டாலே அவர் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிப்பார்.
இப்போது உங்களுக்கு பத்து நாட்கள் விடுப்பு தேவைப்படுகிறது.
அவரிடம் நீங்கள் விண்ணப்பத்தை நீட்டினால் என்ன ஆகும்?
அந்நிலையில் நீங்கள் எப்படி செயல்படுவீர்கள்?
உங்களிடம் உணர் மனம் செயல்பட்டால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
அதே சமயம் உங்கள் முழுமனம் செயல்படுமேயானால், பத்து நாட்கள் விடுப்பு கூட பரிந்துரை செய்யப்பட்டுவிடும்.
அந்தத் தருணத்தில் நீங்கள் எப்படி செயல்படுவீர்கள் என்பதை முன்கூட்டியே
திட்டமிட முடியாது. ஆனால் தேவையான நேரத்தில் தேவையானதைக் கூறி சாதித்து விடுவீர்கள்.
முப்பது படிகள் உள்ள ஒரு படிக்கட்டில் நீங்கள் இறங்குவதாக வைத்துக் கொள்வோம்.
அது ஒரு நேரான படிக்கட்டு. நீங்கள் இரண்டாவது மூன்றாவது படிகளில் இறங்குகிறீர்கள். நீங்கள் சேர்ந்திட வேண்டியது முப்பதாவது படி. அந்த முப்பதாவது படியும் உங்கள் கண்களுக்கு நேரடியாகவே தெரிகிறது.
உங்கள் இரண்டு கைகளிலும் பொருட்களை வேறு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். கைப்பிடிச் சுவரைக் கூட உங்களால் பிடிக்கமுடியவில்லை.
இப்போது உங்களுடைய கவனம் எதன் மீது இருக்கவேண்டும்?
நீங்கள் அடைய வேண்டிய முப்பதாவது படியிலா?அல்லது நீங்கள் இறங்கிக் கொண்டிருக்கும் மூன்றாவது படியிலா?
நீங்கள் இறங்கும் படிகளில் உங்களது முழுக் கவனமும் இருந்தால் மட்டுமே நீங்கள் பாதுகாப்பாக இறங்க முடியும்.
அதனால் நீங்கள் அடைய வேண்டிய முப்பதாவது படியின் மீதுள்ள ஈடுபாட்டை சற்று நேரத்துக்கு தவிர்த்தாக வேண்டும்.
நாம் நமது வாழ்க்கையிலும் சிக்கலான பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றோம். அவை வெற்றிகரமாக முடியும் என்ற உத்திரவாதம் எதுவும் கிடையாது.
நாம் செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தும் நிகழ் காலத்தில் உள்ளன. ஆனால் அதன் விளைவான முடிவு மட்டும் எதிர்காலத்திலேயே உள்ளது.
இப்போது உங்களுடைய கவனம் எதன் மீது இருக்க வேண்டும்?
நிகழ்காலத்தில் நீங்கள் செய்து கொண்டிருக்கும் செயல்களிலா?
அல்லது நீங்கள் அடைய வேண்டிய முடிவுகளிலா?
அடைய வேண்டிய முடிவுகள் சம்பந்தமான உங்கள் ஈடுபாடுகளை சற்றே தள்ளி வைத்தால்தான், செய்யவேண்டிய செயல்களுக்கு தேவையான ஈடுபாட்டை உங்களால் காட்ட முடியும்.
அடைய வேண்டிய முடிவுகளை எப்படி தள்ளி வைப்பது. நமது செயல்களின் எதிர்காலத்தை எவ்வாறு தள்ளி வைப்பது?
நமது செயல்களின் எதிர்காலத்தை - முடிவுகளை, ஆற்றல் மிகுந்த முழுமனதிடமோ அல்லது இறைவனிடமோ ஒப்படைப்பது ஒன்றுதான் சாத்தியமான வழியாகும்.
பொறுப்பற்ற ஒருவரிடம் நமது வேலையை ஒப்படைத்தால் என்ன ஆகும்?அவர் அதை சரியாகச் செய்திடுவாரோ, மாட்டாரோ என்று நாம் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கவேண்டியிருக்கும்.
அதே சமயம் அந்த வேலையை, பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைத்திருந்தோம் என்றால் என்ன ஆகும்?
நாம் அந்த வேலையையே சுத்தமாக மறந்து விடலாம். ஏனெனில் அந்த வேலையை ஏற்றுக் கொண்டவர் நம்மை விடவும் சிறப்பாக அந்த வேலையை செய்து முடித்து விடுவார்.
அப்படி செயலின் விளைவை முழுமனதிடமோ அல்லது இறைவனிடமோ ஒப்படைப்பதனால் என்ன நடக்கிறது?
இதனால் நாம் நமது முழு ஈடுபாட்டையும் நாம் செய்ய வேண்டிய செயல்களின் மீது காட்ட முடிகிறது.
ஈடுபாட்டுடன் செயல்படும்போது நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும்.
நாம் செய்யும் செயல்களில் ஈடுபாட்டுடன் செயல்படும்போது, நமது உணர்மனதுடன் முழு மனதும் இணைந்து கொள்ளும்.
இவை அனைத்துக்கும் முதற்படியாக, நமது உணர்மனமானது, முழுமனம் என ஒன்று இருப்பதையும், அது நமக்கு உதவத் தயாராக உள்ளது என்பதையும் நம்ப வேண்டும்.
தொடர்புக்கு: வாட்ஸ்அப் - 8608680532