என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    மகிழ்ச்சி என்பது பொதுவுடைமை!
    X

    மகிழ்ச்சி என்பது பொதுவுடைமை!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகிழ்ச்சி என்பது மனம் சார்ந்த உணர்வு நிலை; அது எதிர்மறை நிகழ்வுகளால் தோன்றாது.
    • அடுத்தவருக்கு மனமுவந்து ஒன்றைத் தருகிறபோது ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது;

    மகிழ்ச்சி என்பது தனித்துக் காண்பதா? அல்லது மக்களோடு மக்களாய்க் கூடி இன்புறுவதா? என்பதை அறிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்.

    "நிறை செல்வம்! நீள் ஆயுள்! சஞ்சலமின்றி மகிழும் மனது!" இவை மூன்றும் அமைந்து விட்டால் போதும்!, வாழ்க்கையை நாள்தோறும் நாம் கொண்டாடி அனுபவிக்கலாம்!.

    மகிழ்ச்சி என்பது நிறைவின் வெளிப்பாடு. முதலில் மனம் நிறைவதிலிருந்தே மகிழ்ச்சி புறப்பாடு காண்கிறது. வீடு, வாகனம், வசதிகள், குடும்பம், தொழில், கல்வி, வங்கிச் சேமிப்பு மற்றும் பணம் கையிருப்பு போன்ற மற்ற நிறைவுகளை விடச் சிந்தையின் நிறைவே சிறந்த செல்வம் ஆகிறது.

    சிந்தை நிறைந்து விட்டால், 'இன்பமே எந்நாளும் துன்பமில்லை!' என்கிற வாழ்க்கை வசமாகிப் போகும்.

    மகிழ்ச்சி என்பது மனம் சார்ந்த உணர்வு நிலை; அது எதிர்மறை நிகழ்வுகளால் தோன்றாது; நேரான சிந்தை, நிறைவான செயல்முறை, நேர்முறையாகப் பெறுகின்ற வெற்றிநிலை இவற்றால் மட்டுமே அப்பழுக்கற்ற மகிழ்ச்சி சாத்தியமாகிறது.

    ஒவ்வொரு தனிமனிதனும் கவலை இல்லாத மனிதனாகத் திகழ வேண்டுமானால் அவன் மனத்தளவில் மகிழ்ச்சியானவனாக இருக்க வேண்டும். எதையுமே நேர்முறையாக எடுத்துக்கொண்டால், மனத்தளவில் துன்பம் அனுகாமல் மகிழ்ச்சியோடு இருக்க முடியும். ஆயினும், துன்பப்படுவது தனிமையில் சாத்தியம் என்றாலும் மகிழ்ச்சிப்படுவதற்குத் தனிமை எந்தவகையிலும் உதவி புரியாது.

    சுந்தர ஆவுடையப்பன்

    அதனால்தான் கவியரசர் கண்ணதாசன், 'தனிமையிலே இனிமை காண முடியுமா?' எனப் பாடலில் அடுக்கிய வினாக்களைத் தொடுக்கிறார். உண்மையில் மகிழ்ச்சி என்பது தனிமனித மன உணர்வு என்றாலும், அது, ஒருவருக்கும் மேற்பட்டோர் கூடிக் கொண்டாடும் போதுதான், கொண்டாடும் மகிழ்ச்சியாகப் பெருகிப் பல்குகிறது.

    'உவப்பு' என்கிற சொல்லுக்குப் பெருகிடும் மகிழ்ச்சி என்று பொருள்; ஒரே மாதிரி சிந்தனை அலைவரிசை உடைய புத்திசாலிகள் கூடிப் பேசி மகிழ்வதைத், திருவள்ளுவர், 'உவப்பத் தலைக்கூடுதல்' என்று சிலாகித்துக் கூறுகிறார்.

    அடுத்தவருக்கு மனமுவந்து ஒன்றைத் தருகிறபோது ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது; அதைப் பெறுகிறவர் பெறும்போது வெளிப்படுத்தும் மகிழ்ச்சியைக் காணும்போது தருபவரின் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிறது. இதனை வள்ளுவர் 'ஈத்துவக்கும் இன்பம்' என்று இரட்டித்து ஒலிக்கிறார்.

    இன்பமோ! துன்பமோ! அது தனிமனிதர் சார்ந்த மனவுணர்வு என்றாலும், பலரோடு பகிர்ந்து கொள்ளப்படும்போது அது அதிகரிக்கவோ குறையவோ செய்கிறது. இன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் அது பன்மடங்கு பெருகுகிறது; துன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் அது பன்மடங்கு குறைகிறது. மகிழ்ச்சியைப் பொறுத்த வரை அது அடுத்தவரோடு பகிர்வதாலேயே பெருகிப் பரவுகிறது.

    சிரித்துக் கைதட்டி மகிழும் செயலைப் பலரோடு செய்யவேண்டும்; அழுது புலம்பிக் கண்ணீர் வடிக்கும் செயலைத் தனிமையில் செய்ய வேண்டும். இது மாறிவிடக் கூடாது. தனிமையில் சிரித்துக் கைதட்டி மகிழ்ந்து கொண்டிருந்தால், பார்ப்பவர்கள் நம்மை ஒரு மாதிரி பார்ப்பார்கள். அதேபோல ஊரறிய அழுது புலம்பிக் கொண்டிருந்தால், காண்பவர்களின் ஏளனத்திற்கு நாம் ஆளாக நேரிடும்.

    துன்பம் என்பது தனியுணர்வு என்றால், மகிழ்ச்சி என்பது பொது உணர்வு ஆகும். உலகமெங்கும், நகரங்கள் தொடங்கிக், கிராமங்கள் வரை, மக்கள் திருநாட்களைத் திருவிழாக்களாகக் கூடிக் கொண்டாடுவதற்குக் காரணம், அதன்மூலம் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

    பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற திருநாட்களை மக்கள் கூடிக் கொண்டாடுவதன் மூலம், அவர்களிடையே பரஸ்பரம் நல்லுணர்வு பெருகுகிறது; நல்லெண்ணம் வளர்கிறது; நன்மகிழ்ச்சியும் நலவாழ்வும் அவர்கள் மத்தியில் பரவிப் பெருகுகிறது; அடுத்து, வாழும் நாளெல்லாம் வளமான நாளாக அமைந்து அவர்களின் ஆயுள் நீட்டிப்பிற்கும் நல்வழி பிறக்கிறது. ஆன்மீகம் சார்ந்த நிலையில் ஊர்கள் தோறும் திருவிழாக்கள் வருவதும், திருவிழாக்களில் ஊர்கூடித் தேர் இழுப்பதும் மகிழ்ச்சிப் பரவலாக்கம் சார்ந்த நோக்கம் கருதியதே ஆகும்.

    அந்தக்காலத்தில் ஒரு ராஜா நிறைவான ஆட்சி நடத்தி வந்ததால் அவரது ஆயுட்காலம் நீண்டுகொண்டே போனது. சொன்னால் நம்ப மாட்டீர்கள்!, அந்த ராஜா, அந்த நாட்டை ஏழாயிரம் ஆண்டுகளாகச் செவ்வனே ஆண்டு வந்தார். ஒரு நாள் காலை, மகாராணி, ராஜாவுக்கு எண்ணெய்க் குளியல் செய்விக்கும் பொருட்டு, ராஜாவின் தலையை அவிழ்த்து, நல்லெண்ணெய் தடவிக் கொண்டிருந்தபோது, அவரது தலைமுடியில் ஒன்று நரைத்திருப்பதைப் பார்த்து அழத் தொடங்கி விட்டார்.

    'எட்டிப் பார்க்கும் நரைமுடி, எமனின் அழைப்பு!; எது வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்!' என்று எந்தக் கவலையுமில்லாமல் ராஜா இருந்தார். "அதெப்படி சும்மா இருக்க முடியும்? உங்களது ஆயுள் நீட்டிப்பிற்காக நான் கடவுளை நோக்கித் தவம் இருக்கப் போகிறேன்!" என்று மகாராணி தவமிருக்கக் கிளம்பி விட்டார். " நீ மட்டும் ஏன் எனக்காகத் தனியே செல்கிறாய்? நானும் வருகிறேன் உன்னோடு தவமிருக்க!" என்று ராஜாவும் ராணியுடன் கிளம்பி விட்டார்.

    ஆயுள் நீட்டிப்பிற்காக ராஜாவும் ராணியும் தவமிருக்கச் செல்லும் செய்தி, நாட்டுமக்களிடம் பரவியது. அவர்கள் எல்லாரும் திரண்டு, அரண்மனைமுன் நின்றுவிட்டார்கள். "எங்களின் நலத்திற்காகத்தானே, ராஜாவும் ராணியும் தவமிருக்கப் போகப் போகிறீர்கள்?. எங்களை ஆளும் ராஜாவின் நீளாயுளுக்காக, மக்களாகிய நாங்கள் அனைவரும் சென்று கடவுளிடம் மன்றாடப் போகிறோம்!. எங்களுக்கு வழிவிடுங்கள்! நீங்கள் போக வேண்டாம்!" என்று கூறிவிட்டு மக்கள் எல்லாரும் அங்குள்ள மலையுச்சிக்குச் சென்று சூரியனை நோக்கித் தவமிருக்கத் தொடங்கி விட்டார்கள்.

    மூன்றாண்டு தவத்திற்குப் பின், சூரியக்கடவுள், அந்த நாட்டு மக்களின்முன் வந்து நின்றார். 'எங்கள் ராஜா இன்னும் ஆயிரம் ஆண்டுகள் மகிழ்ச்சியோடு வாழவேண்டும்!' என்ற வரத்தை மக்கள் கேட்டார்கள். மக்கள் கேட்ட வரத்தைத் தந்துவிட்டு சூரியக்கடவுள் மறைந்தார். மக்களும் மகிழ்ச்சியோடு, அரண்மனைமுன் கூடி, ராஜா இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆயுளோடு இருப்பதற்கு வரம் பெற்றுவந்த செய்தியைத் தெரிவித்தார்கள்.

    ராஜா மக்களிடம் பேசினார், " இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது!; இந்த நாட்டுமக்களாகிய நீங்கள் இல்லாமல், ராணி இல்லாமல், அமைச்சர், படை வீரர்கள் இல்லாமல் நான்மட்டும் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து என்ன பயன்? மகிழ்ச்சியோடு இருக்க முடியுமா? மகிழ்ச்சி என்பது எல்லாரும் கூடி வாழ்வதும், கூடிப் பெறுவதும்தானே?. நீங்கள் எவருமில்லாமல், நான்மட்டும் தனித்து ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது எப்படி வரமாகும்?; அது சாபமாக அல்லவா முடியும்?. நான் இப்போதே தனியாக மலையுச்சிக்குச் செல்லப் போகிறேன்!. நம் எல்லாருக்காகவும் சூரியனை நோக்கித் தவமிருக்கப் போகிறேன்!" என்று கூறிவிட்டு ராஜா கிளம்பி விட்டார்.

    ஓராண்டு கடுமையான தவம்; சூரியக்கடவுள் வந்தார்,' நான் உட்பட எனது நாட்டிலுள்ள அனைவரும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்!' என்று வரம் கேட்டார் ராஜா. எப்போதும் வரம் என்பது, சுயநல நோக்கம் இல்லாது, பொதுநலம் சார்ந்ததாக இருக்குமானால் உடனே வழங்கப்படும். வரம் பெற்ற மகிழ்ச்சியை, ராஜா தனது நாட்டு மக்களோடு அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்குக் கொண்டாடுவது எனத் தீர்மானம் போட்டு ஆட்சியை ஆளத் தொடங்கினார்.

    உலகில் எந்த மகிழ்வையும் தனித்து அனுபவித்துவிட முடியாது; அனுபவித்தாலும் அது உண்மையான மகிழ்ச்சியாக இருக்காது. கூடியிருக்கிற குடும்பத்தில் ஒரு உறுப்பினராகப் பிறக்கிற மனிதன், பிறகு தனித்த குடும்பமாக மலரும்போது, இன்னொருவரோடு துணை அமைத்துக் கொள்கிறான். இருவரில் தொடங்குகிற இல்லற வாழ்வு, பிள்ளை குட்டிகள், உறவு நட்பு எனப் பல்கிப் பெருகுவதெல்லாம் , வாழ்வின் மகிழ்வுப் பெருக்கத்திற்காகவே தான்.

    பகிர்வதில் பெருகுகிறது மகிழ்ச்சி. 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என வாழும் பொதுநல நோக்கே மனிதத்தை உயர்த்தும் மகிழ்வின் நோக்காகத் திகழுகிறது. மகிழ்வதற்கு இதுதான் காரணம் என்பதெல்லாம் கிடையாது; மகிழ்ச்சி, காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டது. கரகாட்டக்காரன் படத்தில் வரும் செந்தில் கவுண்டமணி வாழைப்பழ நகைச்சுவைக்குக் காரண காரியம் கிடையவே கிடையாது.

    திடீரென ஒருவரைப் பார்த்ததும், 'என்ன இன்று மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது?' என்று கேட்போம். அவருக்குக் காரணம் தெரிந்தால் சொல்வார்; இல்லையென்றால் பதிலுக்கு ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவார். மனமும் உடலும் நலமாக இருந்தால், செய்கிற செயல்களும் நமக்கு விருப்பமானவையாக இருந்தால், மகிழ்ச்சிக்கென்று தனிக்காரணம் தேவைப்படுவதில்லை.

    சிலருக்குச் சமைப்பதில் மகிழ்ச்சி; சிலருக்குச் சாப்பிடுவதில் மகிழ்ச்சி; சாப்பிடுபவரின் நுட்பம் தெரிந்தவர் சமையலராக இருந்தால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. மேடையில் ஒருவர் எவ்வளவுதான் முயன்று ஒரு நகைச்சுவையைச் சிறப்பாகச் சொல்ல முயற்சித்தாலும், எதிரே அமர்ந்திருந்து கேட்பவர்கள், அதே கவனத்துடன், பேச்சாளரின் அலைவரிசையோடு ஒத்துப்போகவில்லையென்றால், நகைச்சுவை சோகச்சுவையாகிப் போகும்.

    மகிழ்ச்சி, உணர்ந்தோருடன் ஒத்துப் போகும் ஒத்திசைவைப் பொறுத்தது. மகிழ்ச்சி என்பது நிகழ்பொழுதில், அந்தத் தருணத்தை அனுபவிப்பது. பலருக்குக் கடந்த காலங்களை அசைபோடுவதும், அந்தக்காலப் பாடல்களில் கரைந்து மகிழ்வதும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் அந்த மகிழ்ச்சி சொக்கத் தங்க மகிழ்ச்சியாக இருக்காது, செம்பு என்னும் சோகம் கலந்த சுகமான சோகமகிழ்ச்சியாக மட்டுமே அமைந்திருக்கும்.

    'உவப்பே உயர்வு!' என்பது மிக உயரிய தத்துவம். மகிழ்ச்சியோடு ஈடுபடுகிற செயல்கள் மட்டுமே வெற்றிகரமான முடிவுகளை எட்டிப்பிடிக்க உதவிடும். மகிழ்ச்சியான மனநிலை, எத்தனை சிக்கலான பிரச்சினைகளுக்கும் எளிதான தீர்வுகாண உதவிடும்; மனம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால், உடல் ஆரோக்கியத்திற்குக் கேட்கவா வேண்டும்?. நிறைவின் பொங்கி வழிதலே மகிழ்ச்சி; அதனை அடுத்தவரோடு பகிர்ந்து கொள்வதும், பெருகச் செய்வதும் தவறாமல் நாம் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி.

    எதையுமே தனித்து அனுபவித்துவிட நினைப்பது சுயநலம். பொதுநலக் கோட்டையில் மகிழ்ச்சியின் கொடி பட்டொளிவீசிப் பறக்கட்டும்.

    தொடர்புக்கு 9443190098

    Next Story
    ×