என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்... நைனி... ஓ நைனிகா..
    X

    மீனா மலரும் நினைவுகள்... நைனி... ஓ நைனிகா..

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சின்ன வயதில் எனக்கு நிறைவேறாமல் போன ஆசைகள் ஏராளம்.
    • பிள்ளை வளர்ப்பில் இது நான் கற்றுக் கொண்ட பாடம்.

    கல்யாணம் பண்ணிப்பார் வீட்டை கட்டிப்பார் என்று சொல்வதை கேட்டிருக்கிறேன். ஆனால் அந்த பழமொழியை கல்யாணம் பண்ணிப்பார் பிள்ளையை பெற்றுப்பார் என்று சொன்னால் என்ன என்று நான் வேடிக்கையாக சொல்வதுண்டு. குழந்தை வளர்ப்பு சுகமான அனுபவத்துடன் திக்.. திக்.. மன நிலையையும் தரக்கூடியது. என் மகள் நைனிகாவை வளர்ப்பதில் இது நான் பெற்ற அனுபவம்.

    இப்போது எனக்கு இருக்கும் ஒரே பிடிமானம் என் நைனிகா தான். அவள் மீது ஆசை, கனவு எல்லாம் இருக்கிறது. ஆனால் நைனிகா இப்படித்தான் வர வேண்டும் என்று நான் விரும்பவில்லை. எனவே என் கருத்துக்கள் எதையும் அவள் மீது திணித்ததும் கிடையாது. இப்போது தான் 9-ம் வகுப்பு படிக்கிறாள். ஆனால் அவளது வயதை விட அதிகமான புத்தி கூர்மையுடன் பல நேரங்களில் அவளை பார்த்திருக்கிறேன். அப்போது மனதுக்கு மிகுந்த சந்தோசமாக இருக்கும்.

    எல்லா பிள்ளைகளையும் போல் தான் அவளும்... என்ன கேட்டாலும், என்ன சொன்னாலும் 'ஓ.கே,' சொன்னால் 'நல்ல அம்மா' என்பாள். நோ சொன்னால் 'பேட்' அம்மா என்பாள். எல்லாவற்றுக்கும் ஓ.கே. சொல்லி விட முடியாது. சில விஷயங்களை செய்யக் கூடாது என்றால் அதில் கண்டிப்பாகவே இருப்பேன். இதை, இதை செய்யக்கூடாது என்றால் அதற்கு காரணம் என்ன என்பதையும் அவர்கள் புரியும் வகையில் சொல்லித்தர வேண்டியது ஒரு பொறுப்புள்ள அம்மாவின் கடமை தானே! இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.


    நானும் இப்படித்தான் அம்மாவின் கட்டுப்பாட்டில் வளர்ந்தவள். அன்று அம்மா சொல்லி புரியாத பல விஷயங்களை என் அனுபவத்தில் புரிந்து கொண்டேன். இப்போது நான் சொல்லிக் கொடுக்கும் விஷயங்களை உள்வாங்கி கொள்கிறாள். ஆனால் எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கிறாள் என்பது வளர வளரத்தான் தெரியும். ஆனால் அவள் வயதில் நான் எப்படி இருந்தேனோ அதை விட நைனிகா ஸ்மார்ட்டாக இருப்பது எனக்கு பெருமை.

    நீ படித்து அப்படி வர வேண்டும்... இப்படி ஆக வேண்டும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஒரே ஒரு விஷயத்தை அடிக்கடி நினைவு படுத்துவேன். அதாவது நல்ல மனிதனாக வாழ பழகு என்பது தான் அது. இன்றைய கால கட்டத்தில் படிப்பு ரொம்ப முக்கியம். அவளது ஆர்வத்தை பொறுத்தே அவளை ஊக்கப்படுத்தி வருகிறேன்.

    சின்ன வயதில் எனக்கு நிறைவேறாமல் போன ஆசைகள் ஏராளம். அந்த ஒரு சூழ்நிலை என் மகளுக்கு வர கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அவள் எதை கேட்டாலும் அது தேவைதானா என்பதை பொறுத்து வாங்கி கொடுப்பேன். தேவையில்லாதது என்றால் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன். உடனே அவளுக்கு கோபம் வரும். சண்டை போடுவாள். அடுத்த சிறிது நேரத்தில் கட்டிப்பிடித்து கொண்டு கொஞ்சுவாள். இதெல்லாம் அடிக்கடி நடக்கும்.

    இந்த காலத்து பசங்களை புரிந்து கொள்வது கடினம். இப்படித்தான் இருக்க வேண்டும் என்றால் கேட்க மாட்டார்கள். அதற்கு அவர்கள் வேறு விளக்கம் சொல்வார்கள். ஏனெனில் நாம் வாழும் உலகம் இணைய தள உலகம். எனவே அவர்களுக்கு புரியும் வகையில் சொல்லி கொடுக்க முதலில் நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

    காலத்துக்கு ஏற்ப பிள்ளைகள் மாறி விட்டார்கள் என்பதை விட நாமும் அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் பிள்ளைகளை நாம் மாற்ற முடியும். சில விஷயங்களுக்கு நாம் கட்டுப்பாடு விதிக்கலாம். ஏன் கட்டுப்பாடு விதிக்கிறோம் என்பதை அவர்கள் உணர வைக்க வேண்டும்.


    கரடு, முரடாக எதையும் புரிந்து கொள்ள முடியாத வயது.

    ஆனால் எடுத்து சொன்னால் புரிந்து கொள்கிறாள். இதை விட வேறு என்ன வேண்டும்?

    ஏழு நாளும் ஏழு விதமாக பார்க்கிறேன். எப்போது இருவரும் முட்டிக் கொள்வோம்? எப்போது கட்டிப்பிடிப்போம்? என்பது தெரியாது. ஒரு பெரிய நடிகையின் மகள் என்பதால் நடிப்பு நன்றாக வரும் என்று நினைத்தால் உங்கள் கணிப்பு தவறு.

    நைனிகாவை பொறுத்தவரை படிப்பு, நடிப்பு, இரண்டுமே சுமார் தான் என்பேன். ஆனால் எங்கு சென்றாலும் கடினமாக உழைக்க வேண்டும். செய்யும் வேலையில் பணிவும், நேரம் தவறாமையும் ரொம்ப அவசியம் என்று சொல்லி கொடுப்பேன். கோபத்தில் அம்மா திட்டலாம். அல்லது ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி சொன்னால் அம்மா திட்டுவாங்க என்று நீ நினைக்கலாம்.

    அதற்காக அம்மா விடம் சொல்லாமல் இருக்காதே. அது தான் உனக்கு சிக்கலை உருவாக்கும். கோபத்தில் திட்டினாலும் பிறகு நாம் இருவரும் சேர்ந்து முடிவெடுக்கலாம் என்பேன். பொதுவாகவே இதை செய்தால் என்னவாகும் என்பதை நாம் சொன்னால் புரிந்து கொள்கிறார்கள். நாம் ஒரு விஷயத்தை பற்றி சொன்னால் அவர்கள் எரிச்சல் அடையலாம்.

    அதை எப்படி சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை யோசித்து மாற்றி சொல்ல நாம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதை பண்ணாதே.. அதை பண்ணாதே என்று எப்போதும் கடுகடுப்பாக சொன்னால் அவர்களுக்கு கோபம் தான் வரும். இன்றைய தலைமுறைகளை நிதானமாக கை யாள வேண்டும். நேர்மறை யாக கருத்துக் களை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.

    அன்று செல்போன் இல்லை. இன்று செல்போனிலேயே மூழ்கி விடுகிறார்கள். அதற்காக நாம் கோபப்பட்டால் அவர்கள் சிந்தனை வேறு விதமாக போகும்.

    என்னடா செல்லம் முழுநேரமும் செல்போனையே நோண்டாதே. பொழுது போக்குக்கு கொஞ்சம் நேரம் டி.வி.பாரு அல்லது வேறு எதையாவது செய் என்று பக்குவமாக அவர்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டும். நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள்.

    வெளியே சுற்றக்கூடாது.. பிரண்ட்ஸ் வீட்டுக்கு போக கூடாது என்று கட்டுப்பாடு போட்டால் அதை மீறப் பார்ப்பார்கள். அதற்கு பதில் வெளியே செல்லும் போது கவனமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    பிரண்ட்ஸ் வீட்டுக்கு போ. குறித்த நேரத்தில் வீட்டுக்கு வந்து விடு என்று எச்சரிக்கை உணர்வோடு சொன்னால் கவனமாக இருப்பார்கள், ஜாலியாகவும் இருப்பார்கள்.

    பிள்ளைகள் கவனமாக, பாதுகாப்பாக வளர்ந்தால் போதாதா? வேறு என்ன வேண்டும்?

    பிள்ளை வளர்ப்பில் இது நான் கற்றுக் கொண்ட பாடம். இதை விட எவ்வளவோ அனுபவங்கள் உங்களுக்கு இருக்கும். நமது அனுபவமே அடுத்த தலைமுறையின் வாழ்க்கை பாடமாக மாறுகிறது.

    அதை நல்ல ஆசிரியராக இருந்து கற்றுக் கொடுக்கும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. இன்னும் முக்கியமான விஷயத்தோடு அடுத்த வாரம் சந்திக்கிறேன். அது வரை காத்திருங்கள்..

    (தொடரும்)

    Next Story
    ×