தமிழ்நாடு (Tamil Nadu)
லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான பயோ டீசல் பறிமுதல்- 2 பேர் கைது
- மீன்பிடி துறைமுகத்திற்கு உள்ளே நுழைந்த லாரியை சுற்றி வளைத்து அவர்கள் சோதனையிட்டனர்.
- உரிய ஆவணங்களின்றி 65 பேரல்களில் பயோ டீசல் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களை குறி வைத்து கள்ளசந்தையில் பயோ டீசல் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு மீன் பிடித்துறை முகத்திற்கு பயோ டீசல் விற்பனைக்கு வருவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது மீன்பிடி துறைமுகத்திற்கு உள்ளே நுழைந்த லாரியை சுற்றி வளைத்து அவர்கள் சோதனையிட்டனர். அதில் தென்காசி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடியில் விற்பனை செய்வதற்காக உரிய ஆவணங்களின்றி 65 பேரல்களில் பயோ டீசல் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. மேலும் இதன் மதிப்பு ரூ. 8 லட்சம் என்றும், சுமார் 15 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் என்பதும் தெரிய வந்தது.
இதை்தொடர்ந்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார் லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த கந்தன் மற்றும் கே.வி.கே. நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட பயோ டீசல் மற்றும் கைதான 2 பேரையும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.