தூத்துக்குடி:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் கடவுள், தமிழ் என்றாலே முருகன். கோவில் கட்டியது நாங்கள். இறைவன் எங்கள் இறைவன். எங்கள் தாய் மொழியில் குடமுழுக்கு இருக்காது (திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு) என்பது எவ்வளவு பெரிய கொடுமை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது வெறும் வெற்று முழக்கம்.
தாய் மொழியை இழந்த எந்த இனம் தமிழக வரலாற்றில் வாழ்ந்துள்ளது? ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து தான் உரிமையை பெற்றுள்ளோம். தாய்மொழி வழிபாடு என்பது அடிப்படை உரிமை. அதை கேட்டு போராட வேண்டிய நிலையில் இருக்கிறது.
திராவிட ஆட்சியாளர்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஆயிரக்கணக்கான கோவிலில் குடமுழுக்கு நடத்துகிறோம் என்கிறார்கள்.
தி.மு.க.வின் 4 ஆண்டு ஆட்சியில் மின்கட்டணம் குறையவில்லை. சொத்து வரி குறையவில்லை. கேளிக்கை வரி நான்கு சதவீதம் குறைகிறது. இது யாருக்கும் பயன் தரும்?
நாட்டில் பாதுகாப்புக்கு உயிரிழந்தவர்களுக்கு இவர்கள் கொடுத்த நிதி என்ன? கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கு இவர்கள் கொடுத்த நிதி என்ன?
அமலாக்கத்துறை சோதனை வந்த பிறகு முதலமைச்சர், பிரதமர் மோடியின் கையைப் பிடித்து கொண்டு பேசுகிறார். இங்கு வந்த பிறகு பிரதமர் மோடியை எதிரி என்கிறார்.
நாளை திருச்செந்தூர் அருகே நடக்கும் பனையேறும் போராட்டத்திற்கு காவல்துறை தடை என்றால் அதை உடை. அஞ்சுவதும் அடிபணிவதும் எங்களிடம் கிடையாது. பனையேறும்போது வெறும் கையோடு இருக்க மாட்டேன். அரிவாளுடன் இருப்பேன்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கள் இறக்கும்போது எங்கள் மாநிலத்தில் மட்டும் இறக்க அனுமதி இல்லையே ஏன்? கள் என்பது இயற்கையின் அருட்கொடை. கள் உணவில் ஒரு பகுதி. அது மது அல்ல.
நாட்டின் மொத்த அரசியலையும் மாற்றுவதுதான் என்னுடைய கடமை. நாம் தமிழர் கட்சி வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் தனித்து தான் போட்டியிடும். கூட்டணி கிடையாது.
பா.ஜ.க. முருகன் மாநாடு நடத்துவது ஒரு மார்க்கெட்டிங்.
யார் அந்த சார்? என்பது இருக்கட்டும். கொடநாட்டில் கொலை செய்த அந்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்த அந்த சார் யார்? என்பதற்கு அவர்கள் பதில் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.