தமிழ்நாடு (Tamil Nadu)
லைவ் அப்டேட்ஸ்: ரயில் விபத்து நடந்த இடத்தில் சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.
- எக்ஸ்பிரஸ் ரெயில் சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Live Updates
- 12 Oct 2024 6:23 AM GMT
ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியை திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஆய்வு செய்தார்.
- 12 Oct 2024 6:19 AM GMT
ரெயில் விபத்து நடைபெற்ற கவரப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு. மெயின் லைனில் சென்ற ரெயில், லூப் லைனுக்கு மாறியது எப்படி என்றும், அல்லது இது சதிச்செயலா? என்பது குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இன்று காலையில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
- 12 Oct 2024 5:51 AM GMT
ரெயில் விபத்துகள் குறித்து காங்கிரஸ் காட்டமாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கூறுகையில், "கவரைப்பேட்டை ரெயில் விபத்தின் புகைப்படங்களையும், காட்சிகளையும் பார்த்தாலே, அது மிகவும் கோரமான விபத்து என்பது தெரிகிறது. ஆனால், மத்திய ரெயில்வே அமைச்சர் அது ஒரு சிறிய விபத்து எனக் கூறி விட்டு எளிதில் கடந்துவிட்டார். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு நாளும் ரயில் விபத்துகள் நடந்தவண்ணமே உள்ளன. ஆனால் யாருக்கும் பொறுப்பென்பது இல்லை" என்றது.
- 12 Oct 2024 5:38 AM GMT
ரெயில் விபத்து குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசை விளாசியுள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், " ஒடிஷா மாநிலம் பாலாஷோரில் நடந்த ரெயில் விபத்து போலவே கவரைப்பேட்டையில் விபத்து நடந்துள்ளது. ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?" என்றார்.
- 12 Oct 2024 5:37 AM GMT
கவரைப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்தால் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. ரெயில்கள் தடைபட்டுள்ளதால், கிடைக்கும் ரயில்களில் ஏறி மக்கள் ஊருக்குச் செல்கின்றனர்.
- 12 Oct 2024 5:34 AM GMT
ரெயில் விபத்து குறித்து திமுக எம்.பி கனிமொழி கூறுகையில், " திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நிகழ்ந்த மைசூர் - தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து குறித்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். விபத்து நிகழ்ந்த பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் மீட்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரிதப்படுத்தியுள்ளார்" என்றார்.
- 12 Oct 2024 5:31 AM GMT
கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதால் மட்டுமே ரெயிலை இயக்கியதாக பாக்மதி விரைவு ரெயிலை ஓட்டிய லோகோ பைலட் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார். மேலும், ரெயில் விபத்து தொடர்பாக கவரப்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் மணிபிரசாத் பாபு கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- 12 Oct 2024 5:29 AM GMT
கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே விரைவு ரெயில் சரக்கு ரெயில் மீது மோதி விபத்து நிகழ்ந்ததற்கு கவனக்குறைவே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
- 12 Oct 2024 5:27 AM GMT
ரெயில் விபத்து நடந்த இடத்தில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்திய ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுதிரி மற்றும் ரெயில்வேயின் முதன்மை பாதுகாப்பு தலைவர் கணேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தண்டவாளத்தில் 51பி பகுதியில் இன்டெர்லாக் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தனர். மோப்ப நாய் உதவியுடனும் ஆய்வு மேற்கொண்டனர்.
- 12 Oct 2024 5:27 AM GMT
விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், பாகமதி விரைவு ரெயிலை லோகோ பைலட் சுப்பிரமணியன், உதவி லோகோ பைலட் ராமவதார் மீனா ஆகியோர் இயக்கிச் சென்றுள்ளனர். டிராக் சேஞ்ச் பாயிண்ட் 51 பி அருகே, விஜயவாடா நோக்கி செல்லாமல் லூப் லைனில் நின்றி கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியுள்ளது தெரியவந்துள்ளது.