தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி தினகரன்- இ.பி.எஸ். சொன்ன பதில்
- இருகட்சிகளும் கூட்டணி குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான் என்று டி.டி.வி.தினகரன் கூறியிருந்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போதே தயாராகிவிட்டன. இதனால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. மேலும் சில கட்சிகளுடன் மற்ற கட்சிகள் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, பாராளுமன்ற தேர்தலில் முறிந்த கூட்டணியை சட்டசபை தேர்தலை நோக்கி புதுப்பித்த அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் சலசலப்பு தொடர்ந்து கொண்டே உள்ளது. கூட்டணி அறிவித்ததில் இருந்து இருகட்சிகளும் கூட்டணி குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கூட்டணி ஆட்சியா? முதலமைச்சர் வேட்பாளர் யார்? போன்ற கேள்விகளால் கூட்டணிக்குள் கருத்துவேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.
இப்படி அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் திடீர் திடீரென சலசலப்பு ஏற்பட்டு கொண்டு இருக்கும் நிலையில், பா.ஜ.க.வுடன் பாராளுமன்ற தேர்தலில் இருந்து கூட்டணியில் தொடரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலை குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆட்சியில் இடம் பெறும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் டி.டி.வி. தினகரன் கூறியது குறித்து கேள்விகேட்கப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, சிரித்துக்கொண்டே... அவருக்கு எல்லாம் பதில் சொல்ற அளவுக்கு கேட்க வேண்டாம். தயவு செய்து வேறு கேளுங்கள் என்றார்.
மேலும், பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. இருக்கிறதா சொல்கிறார்கள் சார்... என்ற கேள்விக்கு, அவர் இருக்கிறதா சொல்கிறார். அதற்கு நாங்கள் ஒன்னும் சொல்லலையே. நாங்கள், அ.தி.மு.க-பா.ஜ.க.கூட்டணி என்று கூறினார்.