தமிழ்நாடு செய்திகள்

மைசூரு-ஊட்டி சாலையில் வாகனங்களை மறித்து உணவு தேடிய யானை
- யானையை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- தொரப்பள்ளி பஜாரில் உலா வந்த காட்டு யானையை மீண்டும் வனத்துக்குள் விரட்டினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி, முதுமலை புலிகள் காப்பகம் இணையும் பகுதியில், மைசூரு-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் தொரப்பள்ளி பஜார் அமைந்து உள்ளது.
இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். பொதுவாக இந்த சாலையில் இரவு 9 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
இதன்காரணமாக ஊட்டிக்கு தாமதமாக வரும் சுற்றுலா பயணிகள் தொரப்பள்ளி பஜாரில் வாகனங்களை நிறுத்தி மறுநாள் காலை 6 மணி வரை காத்திருந்து பின்னர் புறப்பட்டு செல்வார்கள். மேலும் கனரக வாகன டிரைவர்கள் தொரப்பள்ளியில் வண்டியை நிறுத்திவிட்டு வாகனத்தில் படுத்து தூங்குவது வழக்கம்.
இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை நேற்று இரவு தொரப்பள்ளி பஜாருக்கு வந்தது. பின்னர் அந்த யானை அங்கு நின்றிருந்த வாகனங்களில், சாப்பிட எதாவது உள்ளதா என தேடிப்பார்த்தது.
இதற்கிடையே தொரப்பள்ளி பஜாரில் யானையை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தொரப்பள்ளி பஜாரில் உலா வந்த காட்டு யானையை மீண்டும் வனத்துக்குள் விரட்டினர்.