உலகம்

கத்தார் இறையாண்மை மீது தாக்குதல்.. ஈரான் ஏவுகணைகள் இடைமறிக்கபட்டன - வெளியுறவு அமைச்சகம்
- நாடு இராணுவ ரீதியாக தயாராக உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதில் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இல்லை என்று கத்தார் தெரிவித்துள்ளது.
கத்தாரின் தோஹாவின் தென்மேற்கே உள்ள இரண்டு இராணுவ தளங்களில் அல் உதெய்த் விமானத் தளமும் ஒன்றாகும், இது அபு நக்லா விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது.
இது கத்தார் அமீரக விமானப்படை, அமெரிக்க விமானப்படை, ராயல் விமானப்படை மற்றும் பிற வெளிநாட்டுப் படைகளைக் கொண்டுள்ளது. இந்த தளத்தை குறிவைத்து நேற்று இரவு ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
கத்தார் நேரப்படி திங்கள்கிழமை இரவு 7:30 மணிக்கு ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்தியது.
கத்தாரின் அல் உதெய்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தை மூன்று ஏவுகணைகள் தாக்கியதாக கத்தார் ஊடகங்களை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அல் உதெய்த் விமானத் தளத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி எக்ஸ் பதிவில், "இது கத்தார் அரசின் இறையாண்மை, அதன் வான்வெளி, சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் அப்பட்டமான மீறல்" என்று கூறினார்.
"இந்த வெட்கக்கேடான ஆக்கிரமிப்பின் தன்மை மற்றும் அளவிற்கு சமமான முறையில் நேரடியாக பதிலளிக்கும் உரிமையை கத்தார் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.
கத்தார் வான் பாதுகாப்பு வெற்றிகரமாக தாக்குதலை முறியடித்தது மற்றும் ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்தது, காயங்கள் அல்லது மனித உயிரிழப்புகள் எதுவும் இல்லை என அல் அன்சாரி பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.