உலகம்

நிலநடுக்க மீட்புப்பணி தீவிரம்: மியான்மரில் 10 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்தது
- பல இடங்களில் கனரக எந்திரங்கள் இல்லாததால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- மியான்மரில் நிலநடுக்கத்தால் தண்ணீர் விநியோகம், சுகாதார உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் கடந்த 28-ந்தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன.
இதற்கிடையே நிலநடுக்கத்தில் 2,719 பேர் பலியாகி உள்ளதாகவும், 4,521 பேர் காயமடைந்துள்ளதாகவும், 441 பேர் மாயமாகி உள்ளதாகவும் மியான்மரின் ராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் கனரக எந்திரங்கள் இல்லாததால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தை, கர்ப்பிணி பெண் உள்பட 4 பேரை 60 மணி நேரத்துக்கு பிறகு சீன மீட்புப் பணியாளர்கள் குழு மீட்டது.
இந்த நிலையில் மியான்மரில் நிலநடுக்கத்தால் தண்ணீர் விநியோகம், சுகாதார உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சுவாச தொற்றுகள், தோல் நோய்கள், டெங்கு காய்ச்சல் போன்ற நோய்க் கிருமிகளால் பரவும் நோய்கள், தட்டம்மை போன்ற தடுப்பூசி மூலம் தடுக்கக் கூடிய நோய்கள் ஆகியவற்றுக்கான பாதிப்பு அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.