அறிந்து கொள்ளுங்கள்

பயனர்களை சட்டவிரோதமாக கண்காணித்த வழக்கு: கூகுள் நிறுவனத்துக்கு ரூ.11,740 கோடி அபராதம்!
- பயனர்களின் நடமாட்டம், ஆன்லைன் தேடல்கள் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை பல ஆண்டுகளாக கசியவிட்டது.
- பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனமும் 1.4 பில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
பயனர்கள் தரவுகளை கசியவிட்டதற்காக கூகிள் நிறுவனம் 1.4 பில்லியன் டாலர்களை (ரூ.11,950 கோடி) அபராதமாக செலுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் இதுதொடர்பாக கூகிளுக்கு எதிராக ஏராளமான வழக்குகளை தொடர்ந்தது. கடந்த சில வாரமாக அவற்றின் விசாரணை தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் கூகுளுக்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கூகுள் தனது தயாரிப்புகள் மூலம் பயனர்களின் நடமாட்டம், ஆன்லைன் தேடல்கள் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை பல ஆண்டுகளாக கசியவிட்டதற்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்றதாக டெக்சாஸ் மாகாண அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் தெரிவித்தார்.
பழைய தயாரிப்புகள் தொடர்பான சில புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளதாகக் கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜோஸ் காஸ்டனெடா தெரிவித்தார். மேலும் வருங்காலங்களில் தனியுரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். முன்னதாக பயோமெட்ரிக் தரவு கசிவைத் தொடர்ந்து பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனமும் 1.4 பில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.