சினிமா செய்திகள்

'லோகா' படத்தின் லாபத்தை படக்குழுவினருடன் பகிர்ந்து கொள்வேன் - துல்கர் சல்மான் நெகிழ்ச்சி
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.
திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் படத்தை இந்தி மொழியிலும் படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான அனைத்து மொழிகளிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. லோகா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சென்னையில் வெற்றி விழா நடத்தப்பட்டது.
அதில் பேசிய துல்கர் சல்மான் " படத்திற்கு இந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. இப்படத்தை ஒரு புது முயற்சியாக தான் தயாரித்தேன். திரைப்படம் 5 பாகங்களாக உருவாக்க இருந்தோம், இப்பொழுது படத்தின் வரவேற்பை வைத்து அதிகம் எடுக்கலாம் என நினைத்துள்ளோம். படத்தின் லாபத்தை படக்குழுவிற்கு கண்டிப்பாக பகிர்வேன். அவர்களது உழைப்பால் மட்டுமே இது சாத்தியமானது" என குறிப்பிட்டார்.