வழிபாடு

மந்திரம் ஜெபிக்கும் போது பின்பற்ற வேண்டியவை!
- ஆள்காட்டி விரலால் பிடித்து ஜெபித்தால் உரிய பலன் கிடைக்காது.
- மந்திரத்தை ஜெபிக்கும் போது உதடுகள் அசையக்கூடாது.
தெய்வ வழிபாடு எவ்வளவு சிறப்புக்குரியதோ, அதே போன்று பூஜை அறையிலோ அல்லது தனியொரு இடத்திலோ அமர்ந்து, தெய்வீக மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்தபடி செய்யும் ஜெப வழிபாடும் அத்தகைய சிறப்புக்குரியது. அது தொடர்பான சில தகவல்களை இங்கே தெரிந்துகொள்வோம்..
* மந்திர ஜெபம் செய்வதற்கு, துளசி மாலை அல்லது ருத்ராட்ச மாலையை பயன்படுத்துவதே சிறப்பானது.
* நம் உடலில் உள்ள 72 ஆயிரம் நாடிகளும், 108 புள்ளிகளில் இணைவதால், அதனை தூண்ட 108 எண்ணிக்கையில் மணிகள் அமைந்த மாலையை பயன்படுத்த வேண்டும்.
* ஜெபிப்பதற்கான மாலையை வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரல் கொண்டு மட்டுமே பிடிக்க வேண்டும். ஆள்காட்டி விரலால் பிடித்து ஜெபித்தால் உரிய பலன் கிடைக்காது.
* ஜெபிக்கும் வேளையில் தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித் துணியில் அமர்வது அவசியம். ஏனெனில் மந்திர ஜெபம் செய்கையில், நம் உடலில் மின்னூட்டம் ஏற்படும். அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். அதற்காகத்தான் மின்கடத்தாப் பொருட்களான தர்ப்பை, கம்பளித் துணியை பயன்படுத்துகிறோம்.
* ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை வெளியே தெரியாத படி ஒரு துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.
* முக்கியமாக, ஒரு குருவிடம் தீட்சைப் பெற்ற மந்திரத்தைத்தான் ஜெபிக்க பயன்படுத்த வேண்டும். அந்த மந்திரத்தை ஜெபிக்கும் போது உதடுகள் அசையக்கூடாது. மனதிற்குள்தான் உச்சரிக்க வேண்டும். இதனை 'மானஸ ஜெபம்' என்று அழைப்பார்கள்.
* எந்த ஒரு செயலும் அதற்குரிய இடத்தில் செய்யும்போதுதான் சிறப்பு பெறும். உணவு தயாரிக்கும் பணியை, சமையல் அறையில் அல்லாமல் வேறு அறையில் செய்தால் அசவுகரியம் ஏற்படுவது இயல்பு. அது போலவே, மந்திர ஜெபத்தை அமைதியான இடத்தில், அமைதியான சூழலில்தான் செய்ய வேண்டும்.
* சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால், அதிக பலன் உண்டு. கிரகணம், பவுர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்வதாலும் பன்மடங்கு பலன் கிடைக்கும். மந்திர ஜெபம் செய்து வரும் காலங்களில், எளிமையாக ஜீரணமாகும் உணவை உட்கொள்ள வேண்டும். அதேபோல் மென்மையான ஆடைகளை அணிய வேண்டும்.
திசையும்.. பலனும்..
* தென்கிழக்கு நோக்கி ஜெபம் செய்தால் நோய் தீரும்.
* வடமேற்கு நோக்கி ஜெபம் செய்தால் தீயசக்திகள் மறையும்.
* வடக்கு நோக்கி ஜெபம் செய்தால் தங்கம், கல்வி கிடைக்கும்.
* வடகிழக்கு நோக்கி ஜெபம் செய்தால் முக்தி கிடைக்கும்.
* தெற்கு நோக்கி ஜெபம் செய்தால் பெரும் தீமை வந்துசேரும்.
* தென்மேற்கு நோக்கி ஜெபம் செய்தால் வறுமை உண்டாகும்.
* மேற்கு நோக்கி ஜெபம் செய்தால் பொருட்செலவு ஏற்படும்.
* கிழக்கு நோக்கி ஜெபம் செய்தால் வசியம் ஏற்படும்.
பலன் தரும் இடங்கள்
ஜெபம் செய்யும்போது அமைதியான இடம் தேவை. அது எந்த இடம் என்பதைப் பொறுத்தும் பலன்கள் கிடைக்கும்.
வீடு - பத்து மடங்கு பலன்
காடு - நூறு மடங்கு பலன்
நீர்நிலைகள் - ஆயிரம் மடங்கு பலன்
மலை உச்சி - கோடி மடங்கு பலன்
சிவன் கோவில் - இரண்டு கோடி மடங்கு பலன்
அம்பிகை சன்னிதி - பல கோடி மடங்கு பலன்