பரந்து விரிந்த வான்வெளியில் பல கோடிக்கணக்கான கோள்கள், நட்சத்திரங்கள், துணைக்கோள்கள் போன்றவை உள்ளன. இவற்றில் மனித இனம் வாழக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் நிறைந்தது இந்த பூமி.
இந்த பூமியில் ஆதி மனிதனை படைத்த ஏக இறைவன் அல்லாஹ். மனித வாழ்வுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இங்கு ஏற்படுத்தினான். மனிதன் எப்படி தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தனது வேதங்கள் மூலம் விளக்கி கூறினான். மேலும் மனிதர்களை நேர்வழிப்படுத்த நபிமார்களையும் அனுப்பி வைத்தான்.
இறைவனின் கட்டளையை ஏற்று வாழ்ந்த மனிதர்கள் இம்மையிலும் மறுமையிலும் சிறப்புகளை அடைந்தனர். இத்தகைய சிறப்பான வாழ்க்கை வாழ மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் ஒன்று நன்மைகளையே நாடுவது. இதுபற்றி திருக்குர்ஆனிலும், நபி மொழிகளிலும் ஏராளமான வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
நன்மை செய்ய வேண்டும் என்பது முக்கியமானதாக இருந்தாலும், ஒருவர் நன்மை செய்ய வேண்டும் என்று மனதால் நினைத்தால் கூட அதுவே நன்மையாக அமையும் என்று நபி மொழிகள் கூறுகின்றன. அதுகுறித்த நபி மொழி இது-
"ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணி விட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும், அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கை விட்டால் , அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் பதிவு செய்கிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் பதிவு செய்கிறான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)
இந்த உலக வாழ்வில் நாம் செய்யும் நன்மைகள், மறுமை வாழ்வுக்கான சேமிப்பாக அமைகிறது என்பதை திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது. நாம் செய்யும் நன்மைகள் எப்படி எல்லாம் நமக்கு இறைவனின் அருட்கொடைகளாக மாறுகிறது என்பதை கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் அறியலாம்.
"இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்". (திருக்குர்ஆன் 2:110).
நன்மைகள் செய்பவர்களை இறைவன் மிகவும் நேசிக்கின்றான் என்று திருக்குர்ஆன் இவ்வாறு சாட்சி கூறுகிறது.
"அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்". (திருக்குர்ஆன் 2:195).
நன்மைகள் செய்வதென்றால் அது எவ்வாறு இருக்க வேண்டும், யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகம் மனிதர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. இதற்கும் திருக்குர்ஆன் வழிகாட்டுகிறது.
நபியே அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்" என்று; நீர் கூறும்: "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் கொடுங்கள்; மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து தக்க கூலி தருபவனாக இருக்கிறான்" (திருக்குர்ஆன் 2:215).
மேலும் நபி (ஸல்) அவர்களிடம் ஒருமுறை, 'யாருக்கு அதிகமாக நன்மை செய்ய வேண்டும்' என்று கேட்ட போது, தாய்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பதில் அளித்தார்கள். அதன் விவரம் வருமாறு:
``இறைத்தூதர் அவர்களே! நான் யாருக்கு அதிக நன்மை செய்ய வேண்டும்?'' என நான் அவர்களிடம் கேட்டேன். ``உன் தாய்க்கு'' என அவர்கள் கூறினார்கள். ``பின்னர் யாருக்கு?'' என நான் கேட்டேன். ``உன் தாய்க்கு'' என்றே கூறினார்கள். ``பின்னர் யாருக்கு?'' என நான் கேட்டேன். ``உன் தாய்க்கு'' என்றே கூறினார்கள். ``பின்னர் யாருக்கு?'' என நான் (நான்காவது முறை) கேட்டேன். ``உன் தந்தைக்கும், உன் நெருங்கிய உறவினருக்கும். பின்னர், அதற்கடுத்து நெருங்கிய உறவினருக்கு'' என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள் என பஹ்ஜ் இப்னு ஹாகிம் அறிவித்தார். (நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ).
அல்லாஹ்வின் நல்லடியார்களே, நாளும் நன்மைகள் பல செய்வோம், இறையருள் பெறுவோம்.