அழகுக் குறிப்புகள்

சரும அழகுக்கு உதவும் கோதுமை...
- சருமத்தில் வளரும் முடிகளை அகற்றவும் கோதுமை மாவை பயன்படுத்தலாம்.
- முகத்தில் முடி வளரும் பகுதிகளில் தடவி, 20-25 நிமிடங்கள் காய வைக்க வேண்டும்.
உணவுப்பொருளான கோதுமை, பெண்களின் சரும அழகை பராமரிக்கவும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவி புரியும் கோதுமை, சருமத்துக்கு நல்ல பொலிவையும் வழங்கும்.
மேலும், சருமத்தில் வளரும் முடிகளை அகற்றவும் கோதுமை மாவை பயன்படுத்தலாம். கோதுமை மாவை விழுதாக தயாரித்து சருமத்தில் தடவும்போது, அது சரும முடிகளை தளர்த்தும். இப்படி அடிக்கடி கோதுமை மாவை பயன்படுத்தும் போது, காலப்போக்கில் முடியின் வேர்கள் பலவீனமடைந்து, அதன் வளர்ச்சி குறைந்து, சருமத்தில் முடி வளர்வது நின்றுவிடும்.
அதேபோல, முகத்தில் வளரும் முடிகளைப் போக்க கோதுமை மாவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்...
கோதுமை மாவு பேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு- 2 டேபிள் ஸ்பூன்
தயிர் அல்லது பால்- 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 சிட்டிகை
தண்ணீர்- தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில், கோதுமை மாவு, பால் அல்லது தயிர் மற்றும் மஞ்சள் தூளை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிது நீரை ஊற்றி சற்று கெட்டியான விழுது போல் கலந்துகொள்ள வேண்டும். அதை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் காய வைக்க வேண்டும்.
பின்னர் கைகளை நீரில் நனைத்து, மென்மையாக 'ஸ்கிரப்' செய்ய வேண்டும். இப்படி செய்யும்போது சருமத்தில் உள்ள முடிகள் மென்மையாக அகற்றப்படுவதை உணரலாம்.
அதன் பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, துடைக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த சிறந்த பலன் கிடைக்கும்.
கோதுமை-தேன் பேக்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு -2 டேபிள் ஸ்பூன்
தேன்- 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர்- தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, தேன் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி சற்று கெட்டியான விழுது போல் கலந்துகொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் முடி வளரும் பகுதிகளில் தடவி, 20-25 நிமிடங்கள் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும், கீழிருந்து மேலாக அகற்றவும். அதன் பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
கோதுமை மாவு-கடலை மாவு ஸ்கிரப்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் அல்லது பால் - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, கடலை மாவு மற்றும் தயிர் அல்லது பால் சேர்த்து விழுது போல தயாரித்துக் கொள்ள வேண்டும். அதை முகத்தில் தடவி ஓரளவு காய வைக்க வேண்டும்.
பின்பு கைகளை நீரில் நனைத்து, மென்மையாக முகத்தை 'ஸ்கிரப்' செய்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த 'ஸ்கிரப்', முகத்தில் வளரும் முடிகளை நீக்குவது மட்டுமின்றி, சருமத்துக்கு நல்ல பொலிவையும் தருகிறது.