கோவை:
தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான அண்ணாமலை இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகி விட்டது. பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியை மக்கள் அனைவரும் படிக்க வேண்டும். அப்போது தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோமா என்பது தெரியவரும். எனவே மக்கள் எங்களின் வாக்குறுதியை எடுத்து படிக்க வேண்டும்.
2014 மற்றும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் பா.ஜ.க நிறைவேற்றி உள்ளது. தற்போது 3-வது முறையாக ஆட்சி நடந்து வருகிறது. 3-வது முறையாக ஆட்சி நடத்தி வரும் பிரதமர் மோடி அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை செய்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையுமே நாங்கள் நிறைவேற்றி உள்ளோம்.
மாநில அரசு கொடுக்க கூடிய ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும், மத்திய அரசு திரும்ப ஒரு ரூபாய் கொடுக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகி விட்டது. 511 தேர்தல் வாக்குறுதிகளில் 50 வாக்குறுதிகள் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. எங்களை போன்று தி.மு.க.வில் யாராவது இதுபோன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி நாங்கள் 4 ஆண்டுகள் ஆட்சி நடத்தி உள்ளோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் என தெரிவிக்க முடியுமா?.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இந்தியாவில் 100 சதவீத மக்களுக்கும் சிலிண்டர் கொடுத்துள்ளோம். எங்கள் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் குறைப்பதாக எங்கேயும் சொல்லவில்லை. ஆனால் நாங்கள் குறைத்துள்ளோம். எங்களது பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் குறைக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலைய விரிவாக்க பணியில் இங்குள்ளவர்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும். விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலத்தை இன்னும் அரசு முழுமையாக கொடுக்கவில்லை. இதற்கு காரணம் இங்குள்ளவர்கள் தான்.
இந்தியா முழுவதும் பயன்பெறும் விஸ்வகர்மா திட்டத்தை தமிழகத்தில் பயன்படுத்தாமல் அதற்கு வேறு ஒரு பெயர் வைத்து கொண்டு வந்தனர். அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. அதேபோன்று பிரதமரின் மருந்தகம் இருக்க கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் முதல்வரின் மருந்தகம் என்ற திட்டத்தை கொண்டு வந்தனர். ஆனால் அந்த திட்டமும் தோல்வியடையும் நிலையில் தான் உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை முடக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியுள்ளீர்களா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அண்ணாமலை பதில் அளித்து பேசும் போது, நான் எந்த கடிதமும் எழுதவில்லை. நான் என்னுடைய வேலையை பார்த்து கொண்டிருக்கிறேன். 2026-ல் கூட்டணி ஆட்சி என நான் சொல்ல மாட்டேன். நான் பா.ஜ.க. ஆட்சி என்று தான் சொல்வேன். தேர்தலின் போது கூட்டணியில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து பேசி எவ்வளவு இடங்களில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்வார்கள். என்னை பொறுத்தவரை 2026-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று தான் நான் சொல்வேன்.
நான் பா.ஜ.கவின் தொண்டன். உயிர் உள்ளவரை இந்த கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். மற்ற கட்சி வளர்ப்பதற்காக நான் இல்லை. கட்சி எடுக்கும் முடிவுக்கு தொண்டனாக நான் கட்டுப்படுவேன். எங்கு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமோ அங்கு வாயை மூடிக்கொண்டு இருக்கிறேன். எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.