திருச்சி:
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சக்தி நகரில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கள் விடுதலை இயக்க மாநாடு நடைபெற்றது.
பனையேறிகள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
சீமான் பேசும்போது கூறியதாவது:
கள் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பீர், விஸ்கி, பிராந்தி குடிப்பதால் உடல் நலமாகும் என சொல்ல முடியுமா? தி.மு.க.வின் பகுத்தறிவில் தீயை வைத்து கொளுத்த வேண்டும்.
கள் இறக்குவதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அரசுக்கு வருமானம் கிடைக்கும்.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை. காரணம் ஆட்சியாளர்கள் அங்கு ஆலைகளை நடத்த வில்லை.
தமிழ்நாட்டில் மதுபான ஆலை அதிபர்கள் நலனுக்க கவே அரசு கள் இறக்குவதற்கு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும்.
தமிழகத்தில் மகளிருக்கு பேருந்து கட்டணம் இலவசம் ஆனால் கல்வி கட்டணம் ரூ.10 லட்சம். ஆகையால் தான் பஸ்ஸில் இலவசம் வேண்டாம். கல்வியை இலவசமாக கொடுங்கள் என கேட்கிறோம்.
3500 அரசு காலிப்பணியிடங்களுக்கு 13 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். அப்படி என்றால் 13 லட்சம் பேரும் வேலை இல்லாமல் இங்கு தெருவில் நிற்கிறார்கள்.
மாதந்தோறும் மாணவர்களுக்கு ரூ. 1000, மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை தருவதற்கு பதிலாக படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும்.
இந்த திட்டங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு அரசு 24,000 கோடி செலவழிக்கிறது.
தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைகள் அதிகரித்துள்ளது. இதனை தடுப்பதற்கு அரசு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். மாடுகளுடன் பேசுவதாக சொல்கிறார்கள் அதற்கு அறிவு இருப்பதால் பேசுகிறேன்.
இன்றைக்கு என்னை எதிர்த்து போராடும் அளவிற்கு எல்லா கட்சிகளும் வந்துவிட்டது.
பனைமரம் ஏறினால் இவன் இந்த சாதிக்காரன் என முத்திரை குத்துகிறார்கள் மரத்திற்கும் அரசு சாதியை புகுத்துகிறது. சாதியை வைத்து மக்களை பிளவுபடுத்தும் வேலை நடந்து வருகிறது.
ஆகவே நாம் அனைவரும் சாதியை மறந்து ஒன்றாக கை கொடுக்க வேண்டும்.
ரோடு சோ நடத்தி மக்களுக்கு டாட்டா காண்பிக்கும் அரசியல்வாதிகளுக்கு இன்னும் ஆறு மாதத்தில் மக்கள் டாடா காண்பிப்பார்கள்.
இந்த ஆட்சி அதிகாரம் இன்னும் 500 ஆண்டுகள் ஆயிரம் ஆண்டுகள் இருக்கப் போவதில்லை. இன்னும் சரியாக 6 மாதத்தில் மாறிவிடும். உலகில் மாறாது என்ற ஒரு சொல்லைத் தவிர அனைத்தும் மாறி விடும்.
வரலாற்றின் சக்கரங்கள் அனைத்தும் சுழன்று கொண்டே இருக்கும். கீழே இருப்பது மேலே வரும். சிம்மாசனத்தில் இருப்பவன் வீதிக்கு வருவான் வீதியில் இருந்து போராடுபவன் அந்த அதிகாரத்துக்கு செல்வான்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் மணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளரை சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.
மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 10 இளைஞர்கள் அங்கிருந்த பனைமரத்தில் வரிசையாக ஏறி நாம் தமிழர் கட்சியின் கொடியினை கையில் பிடித்தபடி நின்றனர். மேடையில் சீமான் உள்ளிட்டவர்கள் கள் அருந்தினர்.